Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
96
Reaction score
97
Points
18
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 7

அன்று நடராஜனின் 'ஆனந்தி சூப்பர் மார்க்கெட்' ஆடிட்டிங் கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். விடிந்தால் ஆடிட்டரிடம் ஃபைல்களை ஒப்படைக்க வேண்டும்.

தன்னால் தனியே பார்க்கமுடியாது என எண்ணி நடராஜன் வேறு வழியில்லாமல் தன் இரு மகன்களையும் உதவிக்குக் கூப்பிட்டுக்கொண்டார். சகாயனும் மித்ரனும் தந்தையோடு சேர்ந்து மும்முரமாகக் கணக்குப் பார்த்த போதும் இரவு பதினோரு மணியைத் தாண்டியும் வேலை முடிந்தபாடில்லை.

அந்த நேரம் நடராஜனின் போன் விடாமல் சிணுங்கியது. அந்தச் சத்தத்தில் செய்து கொண்டிருந்த வேலையை இடையில் விட்டு விட்டு நடராஜன் போனை எடுத்துப் பார்த்தால் கூப்பிட்டுக்கொண்டிருந்தது ஆனந்தி.

தன் மனைவிக்கு இன்றைய வேலைப்பளுவைப் பற்றி நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் இந்த நேரத்தில் போன் செய்கிறார் என்றால், ஏதோ இக்கட்டான சூழ்நிலை, அவரால் சமாளிக்க முடியவில்லை என்றுதான் அர்த்தம் என முதல் ரிங்கிலேயே போனை எடுத்து காதில் வைத்தவர், "என்னம்மா... என்னாச்சு?" என்றார் பதற்றமாக.

"அது... மித்ரா பிரண்ட் கூட படத்துக்குப் போனா இல்லீங்க? கூடப் போன பிரண்டுக்கு ஏதோ எமர்ஜென்சியாம். இவளைத் தனியே சினிமா தியேட்டர்ல விட்டுட்டு அவசரமா ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டாவாம். இப்ப புள்ளை எப்படி வர்றதுன்னு கேட்டு எனக்குப் போன் பண்ணுறா. எனக்கும் தனியா கால் டாக்ஸியைப் பிடிச்சு வான்னு சொல்ல பயமாயிருக்கு. நான் என்ன செய்யட்டும்?" என்று ஆனந்தி படபடத்தார்.

மித்ராவும் வழக்கமாக இப்படி வேலைப்பளு கூடிய நேரங்களில் வந்து தந்தைக்கு உதவி செய்பவள்தான். ஆனால், இன்று ஏதோ படத்துக்கு நண்பியோடு போவதாக அடம் பிடித்ததால் நடராஜனே அனுப்பி வைத்திருந்தார்.

பொதுவாக படிக்கும் மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து போகும் நாட்களில் அவளின் ஆண் நண்பர்களே அவளை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போவார்கள். ஆனால், இன்று இரு பெண் பிள்ளைகள் மட்டும்தான் சென்றிருந்தனர். கிளம்பும்போதே ஆயிரம் கண்டிப்புகள் சொல்லிவிட்டுத்தான் அனுப்பியிருந்தார்.

இப்பொழுது இங்கிருந்து கிளம்பினாலே ஒன்றரை மணித்தியாளம் ஆகும் அது மட்டும் மகள் அங்கே தனிய இருக்கவேண்டும். அப்படிக்கூட இரு மகன்களில் ஒருவனைக் கூட அனுப்பும் நிலையில் நடராஜன் இல்லை. அந்தளவுக்குத் தலைக்கு மேல் வேலை கிடந்தது.

மித்ரன் தந்தையின் சங்கடத்தைப் புரிந்துகொண்டு"அப்பா... கூல்! விடுங்க நான் பார்த்துக்கிறேன்" என்றவன், சட்டென்று யாழினிக்கு போன் போட்டான். தங்கள் நிலைமையைச் சுருக்கமாகச் சொல்லி, "மிச்சத்தை அம்மாகிட்ட போன் பண்ணிக் கேளுடா" என்று சொல்லி போனை வைத்தான்.

அந்தத் சினிமா தியேட்டருக்கு பத்து நிமிடத் தூரத்திலேயே நெடுமாறனின் வீடு. மகள் காத்திருக்கும் நேரமும் குறையும் என்றதும் தான் நடராஜன் ஆசுவாசமாக ஒரு பெருமூச்சு விட்டு, "நீ மருமககிட்டயே பொறுப்பைக் கொடுத்துட்டியா? அவ இனிப் பார்த்துப்பா... எனக்கு இது டக்குன்னு தோணவே இல்லைடா" என்றார் மகனை மெச்சியபடி.

"அப்பா... இதெல்லாம் சிம்பிள் பா!" என்று மித்ரன் கிண்டலாகச் சொல்லிவிட்டு மீண்டும் வேலையில் மூழ்க,

சகாயனுக்கோ மனதுக்குள் ஒரு நெருடல். 'எனக்கு ஏன் ரிதன்யாவின் பெயர் மூளைக்குள் உடனே வரவில்லை? மித்ரனுக்குக் கல்யாணம்னு பேச்சு வந்ததில் இருந்தே எல்லாம் வேகமாக நடக்குது. நான் நாலு வருஷமா ஒருத்தியை உயிருக்குயிரா காதலிச்சு இப்போ கல்யாணம் பண்ணப்போறேன். அப்படியிருக்கும்போது என் மூளைக்குள்ள முதல்ல அவ பேருதானே வந்திருக்கணும்?' என்று யோசித்தான்.

பெரியவர்கள் நால்வருமே இரண்டு மாதத்தில் கல்யாணம் என்பதால், நிச்சயதார்த்தத்திற்கு என்று தனியாக ஒரு நாளை ஒதுக்காமல், கல்யாணத்திற்கு முதல் நாளே நிச்சயம் என்று பேசி முடிவெடுத்திருந்தனர். அதனால் சகாயன் இன்னும் யாழினியை நேரில் பார்க்கவோ, போட்டோவிலோ கூடக் காணவில்லை.

இரு குடும்பத்தினரும் வீட்டுக்கு வந்து சந்தித்துக்கொள்ளலாம் என்றால், இப்போது தேய்பிறை காலம் நடப்பதால் 'நல்ல விஷயத்துக்கு வீட்டுக்கு முதல்முறை வரக்கூடாது' என்று பஞ்சாட்சரம் தடுத்துவிட்டார்.

மித்ரன் மட்டும் ஒருமுறை யாழினியைத் தங்கை, தாய், தந்தையோடு கோவிலுக்குக் கூட்டிச் சென்று வந்தான். அன்றும் சகாயனுக்கு அதிக வேலை இருந்ததால், தம்பிக்கு உறுதி செய்திருக்கும் பெண்ணை அவனால் பார்க்க முடியாமல் போனது.

"அண்ணா... இந்தக் கணக்கைப் பாரு" என்று மித்ரன் கூப்பிட, கவனம் சிதறினாலும் வேலைக்குள் வந்தான் சகாயன்.

அவர்கள் கணக்கு வழக்குகளில் தீவிரமாக மூழ்கியிருந்த அந்த நேரத்தில், நடராஜனின் போனுக்கு மெசேஜ் வந்து விழும் சத்தம் தொடர்ந்து கேட்டது. தந்தை அந்த நேரம் பாத்ரூமுக்குச் சென்றிருக்க, அவருக்கு ஏதாவது அவசர அழைப்போ அல்லது தகவலோ இருக்குமோ என்று எண்ணிய சகாயன், அருகில் இருந்த போனைத் தன் கையில் எடுத்துப் பார்த்தான்.

டிஸ்ப்ளேவில் நறுமுகை, யாழினி மற்றும் மித்ரா ஆகிய மூவரும் ஒரு பெரிய பீட்சாவை கடிப்பது போலச் சிரித்துக்கொண்டே எடுத்த புகைப்படம் மின்னியது. அதன் கீழே, "மாமா ஆல் ஓகே! நீங்க கவலைப்படாமல் வேலையைப் பாருங்க" என்று யாழினி மெசேஜ் தட்டியிருந்தாள்.

மீதமுள்ள புகைப்படங்களைத் திறக்க தந்தையின் கைரேகை தேவைப்பட்டதால், அந்த முதல் படத்தை மட்டும் பார்த்தபடி சகாயன் அமர்ந்திருக்க, "என்னடா அது?" என்று மித்ரன் எட்டிப் பார்த்தான்.

அந்தப் புகைப்படத்தைக் கண்டதும் மித்ரன் தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் சைலன்ட்டில் போட்டிருந்த போனை எடுத்துப் பார்த்தான். அதில் யாழினியிடமிருந்து தனிப்பட்ட மெசேஜ் வந்திருந்தது.

"நான் மித்துவைக் கூட்டிட்டு வந்துட்டேன். அவ ரொம்பப் பசியில இருந்தா, அதான் முதல்ல அவளைச் சாப்பிடக் கூட்டிட்டுப் போறேன். மாமிகிட்டயும் பேசிச் சொல்லிட்டேன்" என்று யாழினி அனுப்பியிருந்தாள்.

அதன் கீழே, நடராஜனின் போனுக்கு வந்த அதே பீட்சா புகைப்படத்துடன் இன்னும் மூன்று விதமான புகைப்படங்கள் இருந்தன. கடைசியாக, யாழினி தன் தந்தை நெடுமாறனுடன் சேர்ந்து ஸ்டைலாக எடுத்த ஒரு செல்பியும் இருந்தது.

அதைப் பார்த்த மித்ரன் முகத்தில் அத்தனை புன்னகை. பதில் மெசேஜாக ஒரு பறக்கும் இதயம் எமோஜியை அவளுக்கு அனுப்பிவிட்டு போனை வைத்தான்.

சகாயனுக்கு இதைப் பார்க்க ஒரு பக்கம் ஆச்சரியமாக, "நறுமுகையோட அக்காவையா உனக்குச் பேசியிருக்காங்க?" என்று கேட்க, "ம்... உன்கிட்டதானே நறுமுகை பேச்சுப் பயிற்சிக்கு வர்றா? யாழி சொன்னா... நான் உன்னைத் தெரியாத மாதிரி காட்டிட்டேன்" என்றான் மித்ரன்.

"ஏன்டா?" என்றபடி சகாயன் பார்க்க, "சும்மாதான்... அவ உன்னை என் அண்ணன்னு பார்க்கிற அன்னைக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் இருக்கட்டும்னு தான்" என்று குறும்பாகச் சிரித்தான் மித்ரன்.

"என்னடா... வேலை செய்யக் கூட்டிட்டு வந்தா ரெண்டு பேரும் கதையடிச்சுட்டு இருக்கீங்க? இன்னும் கொஞ்சம் தான் இருக்குடா... முடிச்சுட்டு அப்புறம் பேசுங்க" என்றபடி நடராஜன் உள்ளே வந்தார்.

"இந்த மித்ராவுக்கு எங்கிருந்து கடைசி நேரத்துல வேலை செய்யுற பழக்கம் வந்ததுன்னு இப்பதான் தெரியுதுப்பா" என்று தந்தையை மித்ரன் கிண்டல் செய்ய, "அது அந்தப் பஞ்சுதான்! பொண்ணு கல்யாணம்னு வேலையைச் சரியாப் பார்க்காம விட்டுட்டான். நானும் அப்படியே மறந்திட்டேன்" என்றார் நடராஜன்.

"அப்பா... உங்க மருமக போட்டோ அனுப்பியிருக்கா பாருங்க" என்று மித்ரன் சொல்ல, “யாழினி என்ன போட்டோ அனுப்பியிருக்கா?” என்றபடி தன் போனை எடுத்துப் பார்த்த நடராஜன்,அங்கே மூன்று பெண்களும் சிரித்தபடி கொடுத்துக் கொண்டிருந்த போசைப் பார்த்து, "மிதுவுக்குத் தான் யாழினியும் நறுமுகையும் வந்ததில நல்லாப் பொழுது போகுதுடா" என்றார் பெருமையாக.

சகாயனுக்கோ போன குழப்பம் மீண்டும் வர, தன் தந்தை மருமகள் என்றவுடன் ஏன் ரிதன்யாவின் பெயர் ஞாபகம வராமல் யாழினி மட்டுமே நினைவுக்கு வருகிறாள் என்று அவரைப் பார்த்தான்.

"அப்பா... அவளுக்கு வீட்ல அக்கா தங்கச்சி யாரும் இல்லைல்ல? அதான் யாழினிகூடவும் நறுமுகைகூடவும் டக்குன்னு ஒட்டிட்டா. அவங்களும் நல்லா பிரண்டா பழகத் தெரிஞ்சவங்கதானே" என்றான் மித்ரன்.

"நாளைக்கு எல்லாக் குடும்பமும் சேலை எடுக்கப் போகணும்டா" என்று நடராஜன் சொல்ல,

மித்ரன், "இந்த வேலை இன்னைக்கே முடிஞ்சுடும்ப்பா. நான் நாளைக்கு லீவுதான். விடியவே உங்க கூட வந்து ஜாயிண்ட் அடிச்சுடுறேன். இதை எல்லாம் சரிபார்த்துப் பஞ்சு அங்கிள்கிட்ட கொடுத்திட்டு, நாம அப்படியே புடவைக் கடைக்குப் போய்க்கலாம்" என்றான்.

சகாயனும் நாளைக்கு லீவு போட்டிருந்தான். ஆனால், காலை பதினோரு மணிக்கு புடவைக் கடை ப்ரோக்ராம் என்பதால், அதற்கு முன்பே ஒன்பது மணிக்கு ரிதன்யாவுடன் பிரேக்பாஸ்ட் சாப்பிட நேரம் ஒதுக்கியிருந்தான். தந்தை கடந்த வாரமே இன்று இரவு வேலை என்று சொன்னதால் அதற்கு மட்டும் நேரம் ஒதுக்கிவிட்டு, மறுநாளும் தந்தைக்கு அலைச்சல் இருக்கும் என்பதை அவன் சுத்தமாக மறந்துவிட்டான்.

நடராஜனோ போனில் இருந்த அந்தப் புகைப் படத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தவர், "பாருடா சகாயா... மூணு பேரும் எப்படிச் சிரிச்சுக்கிட்டு இருக்காங்கன்னு! நம்ம வீட்டுக்கு இப்படி ஒரு கலகலப்புதான் வேணும்" என்று அவர் சொல்லச் சொல்ல, சகாயனுக்குள் ஏன் என்று தெரியாத குழப்பம் எழுந்தது.

ரிதன்யாவும் இவர்களோடு சேர்ந்தால் இப்படித்தான் இருப்பாள் என்று அவனால் உறுதியாகச் சொல்ல முடியுமா? அவளின் தனிமையான சுபாவமும், இவர்களின் இந்தத் துள்ளலான கூட்டுக்குடும்பச் சூழலும் ஒத்துப் போகுமா என்ற சந்தேகம் அவன் ஆழ்மனதில் எங்கோ ஒரு மூலையில் எட்டிப் பார்த்தது.

அங்கே மித்ரனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல், "அப்பா... அவங்க பீட்சா சாப்பிடுறதைப் பார்த்தா எனக்கும் பசிக்குதுப்பா. நாம சீக்கிரம் வேலையை முடிச்சுட்டுக் கிளம்புவோம்" என்று வேலையை இழுத்துப் போட்டுப் பார்த்தான்.
 
Previous thread
Next thread

Latest threads

Top Bottom