Only logged in customers who have purchased this product may leave a review.
பிழையில்லா கவிதை நீ!
பிழையில்லா கவிதை நீ! — Preview
அவ்வளவு நேரம் ஜனா சொன்ன வழக்கு என்ன என்று புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெகன், “என்ன கம்ளைண்ட் மிஸ்.ஜனார்த்தனி? இவன் போன் போட்டு உங்களை மிரட்டினானே அதுவா?” என்று அவளின் குறிப்பை புரிந்து கொண்டதற்கு ஏற்ப மிஸ் போட்டு கேட்ட ஜெகவீரன், ‘மிரட்டியதை மட்டும் கம்ளைண்டாகக் கொடு!’ என்று அவளுக்கும் குறிப்புக் கொடுத்தான்.
ஆனால் அவளின் எண்ணம் எல்லாம் வேறாக இருந்ததால், அவனின் குறிப்பைக் குப்பையில் போடுவது போல் அலட்சிய பாவனைக் காட்டியவள், “அதை எல்லாம் விட இது முக்கியமான கம்ளைண்ட் இன்ஸ்பெக்டர். அதுவும் ஒரு பொண்ணோட மானம் சம்பந்தப்பட்டது…” என்றாள்.
“மானம் சம்பந்தப்பட்டதா? யார் பாதிக்கப்பட்டது?” என்று ஜெகன் கேட்க,
“நான் தான்!” என்றாள் அழுத்தமாக.
“என்ன சொல்றீங்க மிஸ்.ஜனார்த்தனி?” என்று திடுக்கிட்டுக் கேட்டான் ஜெகவீரன்.
“ஆமாம் இன்ஸ்பெக்டர். பாதிக்கப்பட்டது நான் தான். சுனில் என்கிட்ட தப்பா நடக்க முயன்றான். அவன்கிட்ட இருந்து தப்பிக்க நான் முயற்சி செய்தப்ப தான் நீங்க ஹெல்ப் பண்ணி இவனைப் பிடிச்சீங்க. அதுக்குக் கம்ளைண்ட் எழுதிக் கொடுக்கத் தான் நான் இங்கே வந்தேன்.
ஆனா வக்கீல் வேற ஏதோ கேஸை காரணம் காட்டி சுனிலைக் கூட்டிட்டுப் போகப் பார்க்கிறார். அந்தக் கேஸ் என்ன என்றெல்லாம் எனக்குத் தெரியாது இன்ஸ்பெக்டர். சுனில் என்கிட்ட தப்பா நடக்க முயன்றதற்கு இப்போ நான் கம்ளைண்ட் எழுதிக் கொடுக்குறேன்…” என்று நிறுத்தி நிதானமாக என்ன வழக்கு என்பதை ஜனார்த்தனி சொல்ல, ‘வேண்டாம் ஜனா’ என்று தலையசைத்து அவளுக்கு மறுப்பைக் காட்டினான் ஜெகவீரன்.
அவனின் மறுப்பைக் கவனியாதவள் போல், அங்கிருந்த கான்ஸ்டபிள் பக்கம் திரும்பியவள், “சார், ஒரு பேப்பர் தர்றீங்களா? கம்ளைண்ட் எழுதணும்…” என்று நிதானமாகக் கேட்டாள்.
‘இவளுக்குக் கொழுப்பை பாரேன். சொல்வது எல்லாம் பொய்! இதில் நான் தான் காப்பாத்தினேன்னு என்னையும் கூட்டுச் சேர்க்கிறாள். இதில் நான் சொல்லும் மறுப்பைக் கூடக் கண்டு கொள்ளாமல் கம்ளைண்ட் எழுதிக் கொடுக்கப் போறாளாம்’ என்று மனதில் சொல்லிய படி ஜனாவைப் பார்த்துப் பல்லைக் கடித்தான் ஜெகவீரன்.
“இல்ல, பொய்… இவ பொய் சொல்றாள். நான் இவகிட்ட தப்பா நடந்துக்கலை…” என்று கத்தினான் சுனில்.
இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பாராத வக்கீல் ஒரு நொடி முழித்தவர் பின், “ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு மேடம்…” என்றார் ஜனாவிடம்.
“ஆதாரம் இல்லைனு உங்களுக்கு எப்படித் தெரியும் வக்கீல் சார்?”
“என்ன ஆதாரம் இருக்கு?”
“அதை நான் கோர்ட்டில் தான் சொல்வேன் வக்கீல் சார். அப்படியே இன்னொரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோங்க. மிரண்டினா மிரண்டு கேஸை வாபஸ் வாங்க நான் யஷ்வினி இல்லை…” என்று அழுத்தமாகச் சொன்னவள், நிதானமாகக் காகிதத்தை எழுத்துக்களால் நிரப்ப ஆரம்பித்தாள்.
“ஜனா…” என்று கடுமையாக அழைத்து அவள் எழுதுவதைத் தடுக்க நினைத்தான் ஜெகவீரன்.
“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க இன்ஸ்பெக்டர். இந்தக் கம்ளைண்டை எழுதி முடிச்சுடுறேன்…” என்று அவனின் பக்கம் கூடத் திரும்பாமல் இன்னொரு மேஜையின் அருகே அமர்ந்து எழுதுவதைத் தொடர்ந்தாள்.
அவளைத் தடுக்க முடியாத இயலாமையில் மேஜையில் ஓங்கி அடித்த ஜெகவீரன், பின் தலையை அழுந்த கோதிக் கொண்டான்.
“ஏய்! ஏன்டி பொய் பொய்யா சொல்ற? நான் எங்கடி உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டேன்?” என்று சுனில் கத்தியதைக் கேட்டு, ஒரு நொடி எழுதுவதை நிறுத்திய ஜனார்த்தனி பின் மீண்டும் எழுதிக் கையெழுத்து போட்டு முடித்து விட்டு அவனின் புறம் திரும்பியவள்,
“மரியாதை தம்பி, மரியாதை! உன்னை விட நான் பெரியவள் தம்பி. ஆனா அதைக் கூட நினைக்காம என் மேலே கையை வச்சதுக்கு உன்னைச் சும்மா விடுவேன்னு நினைச்சீயா? இனி நீ எந்தப் பொண்ணு மேலேயும் கை வைக்கக் கூடாது தம்பி. அதுக்குத் தான் இந்த அக்கா வழி செய்துருக்கேன்…” என்று சொன்னவளைப் பார்த்து வாய்க்கு வந்த படி திட்ட ஆரம்பித்தான் சுனில்.
“உங்க கிளைண்ட்டை கொஞ்சம் வாயை அடக்கச் சொல்லுங்க வக்கீல் சார். அப்புறம் என்னை அநாகரீகமா பேசியதற்காக வேற நான் சுனில் மேலே கம்ளைண்ட் கொடுக்க வேண்டியது இருக்கும்…” என்று அவரிடம் சொல்ல, ‘இது வேறயா?’ என்று நினைத்த குணசேகர், சுனிலை அடக்கும் வேலையில் இறங்கினார்.
“நீங்க பேசாதீங்க தம்பி. உண்மையான கம்ளைண்டையே ஒன்னுமில்லாம ஆக்கிய என்னால் பொய் கம்ளைண்டை தூசா பறக்க விட முடியாதா என்ன? டிடெக்டிவ் மேடம் கொடுத்த கம்ளைண்ட் வச்சே ஏன்டா அந்தக் கம்ளைண்ட் கொடுத்தோம்னு நினைக்க வைக்கிறேன் தம்பி…” என்று சொல்லி சுனிலைச் சமாதானம் செய்தார்.
அவர் சொன்னதை எல்லாம் காதில் வாங்கி விட்டு ஒரு அலட்சிய புன்னகையைத் தந்த ஜனார்த்தனி நிதானமாக நடந்து வந்து ஜெகவீரனின் முன் வந்து நின்றாள்.
“என்ன செய்றனு புரிஞ்சு தான் செய்றீயா ஜனா?” என்று ஜெகன் அவளிடம் மெதுவான குரலில் கேட்க,
“இப்போ நான் உங்க ஃபிரண்ட் இல்லை இன்ஸ்பெக்டர். அபிஷியலா கம்ளைண்ட் கொடுக்க வந்திருக்கேன். சோ, அதுக்குத் தகுந்த மாதிரி பேசுங்க…” என்ற ஜனாவை ஜெகன் முறைக்க,
அந்த முறைப்பை சட்டை செய்யாமல் “இந்தாங்க இன்ஸ்பெக்டர் என் கம்ளைண்ட்…” என்று காகிதத்தை நீட்டினாள்.
அதை வேண்டா வெறுப்பாக வாங்கிய ஜெகன் அதில் எழுதியிருந்ததைப் படித்துப் பார்த்து முன்பை விட அவளைக் கடுமையாக முறைக்க ஆரம்பித்தான்.
‘உன் முறைப்பு என்னை ஒன்றும் செய்யாது’ என்ற பாவனையைக் காட்டிக்கொண்டு நின்றாள் ஜனார்த்தனி.
*****
“என் பொண்ணுக்கு மட்டும் எதுவும் ஆகாம பார்த்துக்கோங்க சார்…” என்றார் கண்ணீருடன்.
“ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனமா தான் எடுத்து வைப்போம் சேதுராமன். கவலையை விடுங்க. இந்த நிமிஷத்தில் இருந்து உங்க போனை ட்ரேஸ் பண்ண ஏற்பாடு பண்றேன். அவன் எங்கிருந்து போன் பண்றான். அவன் யார் என்று எல்லா விவரமும் அதன் மூலம் கலெக்ட் பண்ணலாம்…” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனின் அலைபேசி அழைத்தது.
எடுத்துப் பேச ஆரம்பித்தவன் முகம் மெல்ல மாற ஆரம்பிக்க, சுற்றி இருந்தவர்களும் அவனையே பார்க்க ஆரம்பித்தனர்.
சில நொடிகளில் அழைப்பைத் துண்டித்தவன், “ஸ்டேஷன்ல இருந்து தான் போன். நான் உடனே கிளம்பணும்…” என்று பொதுவாகச் சொன்னவன் ஜனாவின் புறம் திரும்பினான்.
“நீங்க கிளம்புங்க ஜெகா. நான் கொஞ்ச நேரம் கழிச்சு உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன்…” என்று அவன் பேசுவதற்கு முன் தான் முந்திக்கொண்டு வேகமாகச் சொன்னவளை வியப்பாகப் பார்த்தான் ஜெகவீரன்.
‘எதற்கு இவ்வளவு வேகம்?’ என்ற கேள்வி தோன்ற, அவனின் வியப்பு பார்வை சந்தேகப் பார்வையாக மாற ஆரம்பித்தது.
‘காரணம் இல்லாமல் அவள் எதையும் செய்ய மாட்டாள்’ என்று அவளைப் பற்றி நன்றாக அறிந்தவன் ஆகிற்றே!
அவனின் பார்வை புரிந்து அவன் அருகில் வந்தவள், “கேஸ் விஷயமாத்தான் நான் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வர்றேன்னு சொல்றேன் ஜெகா, புரிஞ்சுக்கோங்க…” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் முணுமுணுத்தாள்.
அவனின் பார்வை இப்போது தீர்க்கத்துடன் அவளை மொய்த்தன.
அவளின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை தான். அவள் எதுவும் ஜாடையும் காட்டவில்லை தான். ஆனாலும் எதுவோ புரிந்து கொண்ட பாவனையில் ஜெகனின் கண்கள் கண நொடிகள் கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்த கஸ்தூரியின் மீது பாய்ந்து மீண்டன.
அவன் கண்டு கொண்டதில் ஜனாவின் முகம் பிரகாசித்தது.
‘வெரி ஷார்ப் மேன் நீ!’ என்று உள்ளுக்குள் அவனை மெச்சிக்கொண்டவள் இதழ் பிரியாமல் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“என் உதவி எதுவும் தேவைப்படுதா ஜனா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
அவனுக்கு வார்த்தையால் பதில் சொல்லாதவளின் கண்கள் வாயிலில் நின்றிருந்த கான்ஸ்டபிளின் மீது படிந்து மீண்டன.
அதைப் புரிந்து கொண்டவன், “ஓகே அப்புறப்படுத்துறேன்…” என்று மெதுவாக முனங்கிவிட்டு, “சீக்கிரம் வந்து சேர் ஜனா. இப்போ வந்த அழைப்பும் முக்கியமானது தான்…” என்று சப்தமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
வெளியில் போகும் போதே கான்ஸ்டபிளிடம் ஏதோ சொல்லி விட்டுச் செல்ல, அவரும் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அவர்கள் சென்றதும் அந்த அறையின் கதவை மூடித் தாழ்ப் போட்டுவிட்டு வந்த ஜனார்த்தனி கட்டிலின் அருகில் சென்று, “ஆன்ட்டி, போலீஸ் போயாச்சு. கொஞ்சம் கண்ணைத் திறக்குறீங்களா?” என்று மென்மையும் இல்லாது, கடுமையும் இல்லாத குரலில் அழைத்தாள்.
அவளின் செய்கைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த சேதுராமன், அவள் தன் மனைவியை எழுப்ப முயலவும் வேகமாக அருகில் வந்தார்.
“அவளை எதுக்குமா எழுப்புற? அவள் எழுந்து என்ன செய்யப் போறா?” என்று கேட்டார்.
“அவங்க எழுந்து செய்றதுக்கு எதுவுமில்லை அங்கிள். ஆனால் சொல்றதுக்கு நிறைய இருக்கு…” என்றாள்.
“என்னமா சொல்ற? அவள் என்ன சொல்லுவாள்? எழுந்தா வெறிச்சு வெறிச்சுப் பார்ப்பாள். அதைத் தானே எப்பவும் செய்றாள்…” என்று குழப்பமாகக் கேட்டார்.
“இல்லை அங்கிள். இப்போ பேசுவாங்க. நீங்களே எழுப்புங்க…” என்று சொல்ல, அவள் சொன்னதைச் செய்தார்.
“கஸ்தூரி, எழுந்திரு…” என்று அவர் எழுப்ப அப்போதும் கண்களைத் திறக்காமல் அடம் பிடித்தார் கஸ்தூரி.
“உங்க பொண்ணு இப்போ ரொம்ப இக்கட்டான நிலையில் மாட்டிட்டு இருக்காள். ஆனா இந்த நிலையிலும் நீங்க இப்படி நடிக்கிறது சரியில்லை ஆன்ட்டி.
உங்க பொண்ணு பத்தி டீடைல்ஸ் சொல்லக் கூடிய நீங்களே இப்படி அவள் கிடைக்க முட்டுக்கட்டையாக இருக்கிறது எனக்கு ஆச்சரியமா இருக்கு…” என்று அவள் பேசிக் கொண்டே போக, பட்டென்று விழிகளைத் திறந்த கஸ்தூரி வழக்கம் போல் அவளை வெறித்துப் பார்த்தார்.
“இப்படிப் பார்த்தது போதும் ஆன்ட்டி. வாயைத் திறந்து பேசுங்க. உங்க பொண்ணு எங்கே?” என்று கேட்டாள்.
பரத்தும், சேதுராமனும் வெறும் பார்வையாளர்களாக நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இ…இல்லை… எ…என் பொ…பொண்ணு இ..ல்லை…” என்று முதல் முறையாக வாயைத் திறந்து புலம்ப ஆரம்பித்தார் கஸ்தூரி.
“இல்லையா? என்ன சொல்றீங்க ஆன்ட்டி?” என்று குழப்பத்துடன் கேட்டாள் ஜனார்த்தனி.
“ஹான்… இல்லை என் பொண்ணு இல்லவே இல்லை…” என்று அவர் சொன்னதையே சொல்லிப் புலம்ப,
“என்னைக் காதலிச்சதால் அவளை அவங்க பொண்ணு இல்லைன்னு சொல்றாங்க போலச் சிஸ்டர்…” என்று அவளுக்குப் பின்னால் நின்றிருந்த பரத் வருத்தத்துடன் சொல்ல,
“அப்படியா ஆன்ட்டி? உங்க பொண்ணு காதலிச்சதால் அவள் உங்க பொண்ணே இல்லைன்னு சொல்றீங்களா?” என்று ஜனா கஸ்தூரியிடம் கேட்க, மீண்டும் வெறித்த பார்வையை அவளின் மீது செலுத்தினார்.
“இப்போ இப்படிப் பார்க்கிறதுக்கு நேரமில்லை ஆன்ட்டி. ப்ளீஸ், வாயைத் திறந்து பேசுங்க. அன்னைக்கு உங்களுக்கும், வினயாவுக்கும் இடையே என்ன நடந்தது?
வினயாவுக்கு எப்படி உடம்பு சரியில்லாம போச்சு? அவளை யார் கூட ஆம்புலன்ஸில் அனுப்பி வச்சீங்க?” என்று அடுத்தடுத்த கேள்விகளை ஜனார்த்தனி தொடுக்க, கஸ்தூரியின் பார்வை நிலையில்லாமல் அலைய ஆரம்பித்தது.
கண்களை உருட்டி உருட்டி நிலையில்லாமல் அலைய விட்டவர், தன் கைகளால் படுத்திருந்த படுக்கை விரிப்பைக் கசக்கிக் கொண்டே பற்களை நறநறவென்று கடிக்க ஆரம்பித்தார்.
அவரின் நிலையைக் கண்டு திடுக்கிட்ட ஜனார்த்தனி, அவர் கையை அழுத்திப் பிடித்து, “ஆன்ட்டி, ரிலாக்ஸ்! வினயாவைப் பத்திரமா காப்பாற்றத்தான் கேட்குறேன். சொல்லுங்க ஆன்ட்டி…” என்று நயமாகக் கேட்டாள்.
அவளின் கையில் இருந்து தன் கையை வெடுக்கென்று பிடிங்கியவர், “இல்லை.. என் பொண்ணு இல்லை. இப்போ இல்லை…” என்று திரும்ப அதையே சொன்னார்.
அவர் சொல்ல வருவது அவளுக்குப் புரியவே இல்லை.
அவரை எப்படிப் பேச வைப்பது என்று புரியாமல் விழி பிதுங்கிப் போனாள் ஜனார்த்தனி.
மருத்துவர் சொன்ன எச்சரிக்கை வேறு அவளை அதற்கு மேல் அவரிடம் கடுமையாக விசாரிக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
அவளின் நிலையைக் கண்டு அதுவரை ஒதுங்கி நின்றிருந்த சேதுராமன் மனைவி அருகில் வந்து நின்றார்.
‘இல்லை.. இல்லை’ என்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்த மனைவியின் தோளை அழுத்திப் பிடித்தவர், “கஸ்தூரி…” என்று அதட்டலாக அழைத்தார்.
அவரின் அழுத்தத்தில் திடுக்கிட்டு விழித்த கஸ்தூரி தன் புலம்பலை நிறுத்திவிட்டுக் கணவனைப் பயத்துடன் பார்த்தார்.
“என்ன இல்லை? நம்ம பொண்ணு எங்கே? அவளை ஏன் உன் பொண்ணு இல்லன்னு சொல்ற? சொல்லு…” என்று அவரின் தோளை பிடித்து உலுக்கி அதட்டிக் கேட்டார்.
“இல்லங்க… நம்ம பொண்ணு இப்போ இல்லங்க…” என்று கணவனைப் பயத்துடன் பார்த்துக் கொண்டே கஸ்தூரி சொல்ல,
“அதான் கேட்கிறேன். என்ன இல்லைன்னு சொல்லு…” என்று அவரின் இரு தோள்களையும் பிடித்துப் பலமாக உலுக்கினார் சேதுராமன்.
“அங்கிள், ஆன்ட்டி திரும்ப மயக்கம் போட்டு விடப் போறாங்க. பார்த்துக் கவனமா விசாரிக்கணும்…” என்று அவரைப் பொறுமையாக இருக்கச் சொன்னாள் ஜனார்த்தனி.
“இதுவரைக்கும் பொறுமையா இருந்ததெல்லாம் போதும் ஜனா. இனியும் பொறுமையாக இருக்க முடியாது. என் பொண்ணு எங்க இருக்கா? என்ன நிலைமையில் இருக்கான்னு தெரியாம ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டு இருக்கேன். இவள் என்னென்னா இப்படி மயக்கத்திலிருந்தே என்னை உயிரோடு கொல்றாள். இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும்…” என்று பிடிவாதமாகச் சொன்னவர் மீண்டும் மனைவியின் தோளை பிடித்துக் குலுக்கினார்.
“வாயைத் துறந்து பேசு கஸ்தூரி. நம்ம பொண்ணை எவனோ கடத்தி வச்சுக்கிட்டுப் பணம் கேட்டு மிரட்டுறான். இனியும் நீ ஊமையா இருந்தா நம்ம பொண்ணு நமக்கு இல்லாம போய்டுவா. சொல்லு நம்ம பொண்ணு எங்கே?” என்று கேட்டார்.
“ஹா..ஹான்… இல்லை…” என்று கஸ்தூரி மேலும் இழுக்க,
“இப்ப சொல்லப் போறீயா இல்லையா?” என்று அதட்டல் போட்டார் சேதுராமன்.
அவரின் அதட்டலில் திடுக்கிட்டு விழிகளை மலங்க விழித்த கஸ்தூரி, “இ..இ.. இல்லைங்க.. நம்.. நம்ம பொ… பொண்ணு… இப்.. இப்ப.. உயி…உயிரோட… இ..இல்ல…” என்று திக்கித் திணறி அவர் சொன்ன நிமிடம்,
“எ…என்ன…?” அதிகப் பட்ச அதிர்வுடன் சிலையாகிப் போயினர் அங்கிருந்த மூவரும்.
அந்த அதிர்வு அவர்களை விட்டுச் சிறிதும் குறையாத நிலையில், “ஆ.. ஆமா.. இ…ல்ல… இல்ல… எ.. என்… பொ.. பொண்ணு இப்… இப்ப உ.. உயிரோட இ..இல்ல… அவ.. அவள… நா..ன் தான்… நான் தான்… என் கை..யால… கையால கொ… கொன்னு…ட்டேன்…” என்று அடுத்த அதிர்வெடியைத் தூக்கிப் போட்ட கஸ்தூரி அடுத்த நொடி மயங்கிப் போனார்.
கதையை மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
காணாமல் போன உயிர்த்தோழியைத் தேடி களமிறங்கும் தைரியமான டிடெக்டிவ் நாயகி. அதே வழக்கைக் கையில் எடுக்கும் கம்பீரமான இன்ஸ்பெக்டர் நாயகன்.
ஈகோவும், காரசாரமான மோதல்களும் இவர்களிடையே அனல் பறக்க, அந்தத் தேடல் இவர்களை எங்கே கொண்டு சேர்த்தது?
காணாமல் போன அந்தப் பெண் கிடைத்தாளா? இவர்களின் மோதல் காதலாக மாறி வென்றதா? மர்ம முடிச்சுகள் அவிழும் விறுவிறுப்பான கதைப் பயணம் இது!
இந்தப் பக்கத்தில் உள்ள கதை / புத்தகம் ©Ezhilanbu அவர்களின் முழு காப்புரிமைக்கு உட்பட்டது.
❌ அனுமதி இல்லாமல் நகலெடுக்க, Screenshot எடுக்க, PDF / Audio / Video வடிவில் பகிர கடுமையாகத் தடை செய்யப்படுகிறது.
⚖️ மீறல் கண்டறியப்பட்டால், Copyright Act படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Related products
-
சிந்தையில் பதிந்த சித்திரமே!
Rated 5.00 out of 5 -
மனதோடு உறவாட வந்தவளே
Rated 5.00 out of 5


Reviews
There are no reviews yet.