Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
96
Reaction score
97
Points
18
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 13

சகாயன் ரிதன்யா இருவருக்குமான காதல் உறவு, இப்பொழுது ஒரு பலவீனமான தொங்கு பாலம் போல மாறிவிட்டிருந்தது. யார் பலமாக அசைத்தாலும் அது அடியோடு அறுந்து விழுந்துவிடும் என்ற நிலைக்கு, அடுத்த ஒரே மாதத்தில் வந்து நின்றது.

ரிதன்யா தான் கோபித்துக் கொண்டு சென்ற பிறகு அவன் தன் பின்னே ஓடிவந்து எப்படியும் சமாதானப்படுத்துவான், அப்பொழுது தன் பக்கத்து நியாயங்களைச் சொல்லி அவனை வளைத்துக் கொள்ளலாம் என்றுதான் கணக்குப்போட்டிருந்தாள். ஆனால், சகாயனோ ஒரு வாரம் கடந்த பின்னரும் அவளைத் தேடிப் போகவே இல்லை.

தன் கண்முன்னாலேயிருந்த ஒழுக்கம், படிப்பு, பண்பு என எல்லாவற்றிலும் சிறந்த ஒரு ஆண்மகனைத் தான் காதலிப்பதாகவும், அவன் தன்னை ஒருபோதும் விட்டுவிட மாட்டான் என்ற கர்வத்திலும் இருந்த ரிதன்யாவுக்கு, அவனுடைய இந்த அமைதி ஒரு பலத்த அடியாக விழுந்தது.

ஒரு வாரக் காலப் பிரிவிற்குப் பின், சகாயன் இல்லாத வாழ்க்கை அவளுக்குக் கசக்கத் தொடங்கியது. வேறு வழியின்றி ரிதன்யாவே தன் ஈகோவைக் குறைத்துக்கொண்டு இறங்கி வந்து, சகாயனுக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினாள். வழக்கமாக இருவருக்குள் கோபம் என்றால் ரிதன்யாதான் சகாயனின் நம்பரைப் பிளாக்கில் போடுவாள். ஆனால் இந்த முறை, சகாயன் அவளது எண்ணைப் பிளாக்கில் போட்டு வைத்ததோடு, அவள் வேறு புதிய எண்களிலிருந்து கூப்பிட்டாலும் எடுக்காமல் தன் கடுமையான கோபத்தைக் காட்டினான்.

இதனால் ரிதன்யாவின் ஈகோ சுக்குநூறாக உடைந்தது. கூண்டுப் புலியாக யோசித்தவளுக்கு, சகாயன் போன்ற ஒரு தகுதியான மனிதன் தன்னோடு இருப்பதுதான் தனக்குப் பெருமை என்பதும், தன் பணத்துக்காக அல்லாமல் தன்னை உண்மையாக நேசிப்பவன் அவன் மட்டும்தான் என்பதும் புரிந்தது. அவனைக் கைவிட மனமில்லாமல், தான் திருந்திவிட்டது போல ஒரு நாடகமாடத் துணிந்தாள். நேராக நடராஜன் வீட்டிற்கு வந்தவள், கையோடு இரண்டு வேலை ஆட்களையும் கூட்டி வந்திருந்தாள்.

அவளைக் கண்டதும் முதலில் முகம் மலர்ந்த ஆனந்தி, "வாம்மா..." என்று அன்போடு வரவேற்றார்.

"இவருக்காகத்தானே சகா முதன்முதலா என்னை உதாசீனம் பண்ணினான்" என்று எண்ணிய ரிதன்யாவின் மனதுக்குள் கோபம் உலைக்களமாகத் கொதித்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், உதட்டில் போலிச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டவள், "அத்தை, எனக்கு சகா ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு... உங்ககூட அப்புறமா வந்து " என்று ஆனந்தியைத் தவிர்த்துவிட்டு, சகாயனின் அறையை நோக்கி நடக்கப் போனாள்.

"அவன் வீட்ல இல்லையேம்மா..." என்று ஆனந்தி பின்னாடியே வந்து சொல்ல, சகாயன் வீட்டில் இருக்கமாட்டான் என்று நன்கு தெரிந்து கொண்டே வந்திருந்த ரிதன்யா, "அது தெரியும் அத்தை. நான் எங்க ரூமை கொஞ்சம் மாத்தப் போறேன். கல்யாணம் முடிஞ்சா இங்கதானே இருக்கப் போறோம்? அதுதான் எனக்குப் பிடிச்ச மாதிரி அந்த ரூமையும் இந்த வீட்டையும் மாத்தலாம்னு இருக்கேன்" என்றவள், தன் கூட வந்திருந்த ஆட்களைத் திரும்பிப் பார்த்து, "நீங்க என்னென்ன சேஞ்சஸ் இந்த வீட்ல பண்ணுனா நல்லாயிருக்கும்னு சொல்லுங்க" என்றாள்.

"உங்களுக்கு இதுல என்ன மேடம் பிடிக்கலை?" என்று கூட வந்தவன் முதலில் ரிதன்யாவின் கருத்தைக் கேட்டான்.

"எனக்கு முதல்ல இந்த ப்ளூ கலர் சுவர் பிடிக்கல, இதை மாத்தணும்... இந்த சோபா என்ன கற்காலத்துல வாங்கினது போல இருக்கு, இதையும் மாத்தணும். அப்புறம் இந்த டைனிங் டேபிள் என்ன வெள்ளைக் கலர் பெயிண்ட் அடிச்ச மாதிரி இருக்கு? ஏதோ லோக்கல் மார்க்கெட்ல வாங்கினது போல இருக்கு. நீங்க நல்லா காஸ்ட்லியா பார்த்து ஆர்டர் பண்ணுங்க" என்றாள் அலட்சியமாக.

சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு படத்தைப் பார்த்த அந்த ஆள், "மேடம், அந்தப் படமும் ரொம்பப் பழசா இருக்கு" என்று ரிதன்யாவிற்குச் சொன்னான்.

"தூக்கிக் குப்பையில போடுங்க ! நான் நல்லா காஸ்ட்லியான டிராயிங் வாங்கித் தறேன்" என்றாள் ரிதன்யா.

தன் வீட்டிற்குள் வந்து இப்படி அதிகாரம் செய்து கொண்டிருக்கும் ரிதன்யாவை என்ன செய்வது என்று ஆனந்தி திகைத்து நின்று கொண்டிருந்தார். ஆனால், வந்தவன் அந்தப் படத்தைக் கழற்றப் போவதைக் கண்டதும் பதறிப்போய், "ஐயோ... அதை ஒன்னும் செய்யாதீங்கம்மா! என் புருஷன் காலேஜ் படிக்கிற காலத்துல எனக்காக வரைஞ்சு கொடுத்தது" என்று கண்ணீருடன் தடுத்து நிறுத்தப் பார்த்தார். ஆனால், ஆனந்தியின் பேச்சை மதிக்காமல் ரிதன்யா தன் வேலையைத் தொடரச் சொன்னாள்.

தன் வீட்டில் நடக்கும் கூத்தையும், தன் மனைவியின் கண்ணீரையும் கண்டு கடுமையான கோபத்திற்கு உள்ளாகிய நடராஜன், "இங்க என்ன நடக்குது?" என்று சிங்கம் போல உருமியபடி உள்ளே நுழைந்தார்.

அவருக்குப் பின்னே மித்ரனும் ரிதன்யாவைக் கொலைவெறியோடு முறைத்தபடி வந்தான்.

அந்த நேரத்தில் நடராஜனையும் மித்ரனையும் அவள் எதிர்பார்க்கவில்லை என்றாலும், டக்கென்று தன்னைச் சமாளித்துக் கொண்ட ரிதன்யா திமிராக, "அங்கிள்... இது நான் வாழப்போற வீடு. அதான் எனக்குப் பிடிச்ச மாதிரி கொஞ்சம் ஆல்டரேஷன் செய்யப்போறேன்" என்றாள்.

"இது காலத்துக்கும் என் வீடு! நீ மாற்றம் செய்யுறதா இருந்தால் என்னையும் என் மனைவியையும் கேட்கணும். என் காலத்துக்குப் பிறகு நீ என்ன வேணும்னாலும் செய்" என்று நடராஜன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு சற்றே தன்மையாகவே சொன்னார்.

ஆனால் ரிதன்யாவின் வாய் அப்பொழுதும் அடங்காமல், "உங்க வீடுன்றதுக்காக... நீங்க எப்ப சாவிங்கன்னு நான் பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா? எனக்குப் பிடிச்ச மாதிரிதான் நான் செய்வேன்!" என்று தன் குரூரமான குணத்தை மொத்தமாக வெளிப்படுத்தினாள்.

உயிரோடு நலமாக இருக்கும் கணவனின் சாவை ஒருத்தி தன் கண்முன்னே சாதாரணமாகப் பேசுவதைக் கேட்டதும், ஆனந்தி நிலைகுலைந்து போனார். நெஞ்சைப் பிடித்துக்கொண்டவர், அப்படியே அங்கேயே மயங்கி விழுந்தார்.

"ஆனந்தி! அம்மா!" என்று பதறியடித்துக் கொண்டு, நடராஜனும் மித்ரனும் அவரைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அதிக ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கியதால், ஒரு நாள் முழுதும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்துவிட்டு, அடுத்த நாள்தான் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அங்கே சகாயனுக்கோ, ரிதன்யா தன் வீட்டிற்குப் போய் அறையை மாற்றப் பார்த்த விஷயமும், அதனால் ஏற்பட்ட கலவரமும்... தந்தை அவனுக்குத் தொலைபேசி எடுத்து கத்தித் தீர்த்த போதுதான் தெரிந்தது.

அவனும் பாவம், தன் குடும்பத்திற்கும் ரிதன்யாவிற்கும் இடையில் மாட்டுப்பட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருந்தான். அதுவும் கல்யாணத் தேதி நெருங்க நெருங்க, அவனுக்கு நெஞ்சு முட்டுவது போல் இருந்தது.

சகாயன் பதற்றத்தோடு மருத்துவமனைக்கு விரைந்து வந்தான். அவனைக் கண்டதும், "உன்னால தாண்டா என் பொண்டாட்டிக்கு இந்த நிலைமை!" என்று நடராஜன் அவனைக் அடிக்கவே பாய்ந்துவிட்டார்.

மித்ராவும் மித்ரனும் ஓடிவந்து, "அப்பா, அவ பண்ணின தப்புக்கு அண்ணன் என்ன செய்வார்? கொஞ்சம் அமைதியா இருங்கப்பா" என்று அப்பாவைச் சமாதானப்படுத்த முயன்றனர்.

"கூடா நட்பு கேடாய் முடியும்னு சும்மாவா சொன்னாங்க? நட்பே அப்படியென்றால் மனைவி எப்படியிருக்கணும்? இவன் ஒரு கேடுகெட்டவளை வாழ்க்கைத் துணையாத் தேர்ந்தெடுத்ததாலதானே இவ்வளவு பிரச்சனையும்!" என்று அது மருத்துவமனை என்பதையும் மறந்து நடராஜன் ஆவேசமாகக் கத்தினார்.

பிறந்து இருபத்தேழு வருடங்களாகியும் ஒரு நாள்கூடத் தன்னை உரக்கக் கூட அதட்டிடாத தந்தை, இன்று எல்லார் முன்னிலையிலும் தன்னை நோக்கி கையை உயர்த்திக் கொண்டு வருவதைக் கண்டு, சகாயன் உள்ளுக்குள் செத்து மடிந்துவிட்டான்.

அந்த நேரத்தில், மித்ரன் போன் மூலம் ஆனந்தி மருத்துவமனையில் இருக்கும் விபரத்தைச் சொல்ல, நெடுமாறன் குடும்பமே அங்கே ஓடி வந்தது. அங்கே நடக்கும் சண்டையைக் கண்டு, யாருக்காகப் பேசுவது என்று தெரியாமல் அவர்கள் திகைத்துப் போனார்கள்.

மனைவிக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்று தெரிந்த பிறகு, நடராஜன் ஒய்ந்து போய் ஒரு ஓரமாக அமர்ந்து கொள்ள... சகாயனோ தன் தாயின் இந்த நிலைக்குத் தான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில், தனியாக வருந்திக் கொண்டிருந்தான்.
 
Previous thread
Next thread

Latest threads

Top Bottom