Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
96
Reaction score
97
Points
18
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 8

அடுத்த நாள் காலை, புடவைக் கடையில் நெடுமாறன் குடும்பம் முதலிலேயே வந்து காத்திருந்தார்கள். சிறிது நேரத்திற்குப் பின் சகாயனும் ரிதன்யாவும் ஜோடியாக உள்ளே வர, அவர்களைக் கண்டு நறுமுகை, "டாக்டர் சார்! நீங்க என்ன இங்கே?" என்று ஆச்சரியத்தோடு கேட்க,

யாழினி மட்டும் ஒரு தடவை பார்த்தவள் என்ற முறையில் ஒரு புன்சிரிப்பைச் சிந்திவிட்டு தள்ளி நின்று அமைதியாகப் தங்கை பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"அவருக்குக் கல்யாணம், அவர் தம்பிக்கும் கல்யாணம்... அப்புறம் உடுப்பு எடுக்க வராம என்ன செய்வாங்க? இதில் உனக்கு என்னம்மா பிரச்சனை?" என்று கேட்டபடி மித்ரா வர, அவளுக்குப் பின்னே நமட்டுச் சிரிப்புடன் மித்ரனும் அவன் குடும்பமும் வந்தனர்.

"மிதுக்கா... அப்ப இவர்?" என்று நறுமுகை புரிந்தும் புரியாமலும் குழப்பத்தோடு கேட்க,

"எங்க கூடப் பிறந்த அண்ணன் தான்.. நீ சொன்னாயே நான் பேச்சுப்பயிற்சிக்கு போனேன்.. அவர் குரலும் நம்ம ஆர்.ஜே.மித்ரன் குரல் மாதிரி சேமா இருந்திச்சு.. ஆனால் சார் பிரண்ட்லியா கதைச்சாலும் சிரிக்க மாட்டேன்கிறார் என்று எல்லாம் அடுக்கினியே அது இவரைத் தானே..!" என்று மித்ரா போட்டு உடைக்க,

சகாயனுக்கு முன்னாலேயே தான் மித்ராவிடம் தனியே சொன்ன இரகசியங்களை எல்லாம் இப்படிப் பொதுவில் போட்டு உடைப்பாள் என்று நறுமுகை துளியும் எதிர்பார்க்கவில்லை.

சகாயனின் குடும்பத்தவர்கள் சிரிப்புடன் நின்றாலும், சகாயனை நிமிர்ந்து பார்க்கக் கூட அவளுக்குத் துணிச்சல் வரவில்லை. ‘டாக்டர் சார் இப்போது என்ன நினைப்பாரோ’ என்று அவளுக்கு சங்கடமாகிவிட்டது.

சகாயன் தான் மித்ரனின்அண்ணன் என்பது தெரிந்ததும் யாழினியும் முதலில் திகைத்தவள், பிறகு உண்மையைச் சொல்லாமல் இவ்வளவு நாளும் மறைத்த மித்ரனைப் பார்வையாலேயே வெட்டினாள். மித்ரனோ அவளது கோபத்தைப் பார்த்து பயப்படாமல், புன்னகையோடு வாயசைவில், "சும்மா ஃபன் தான்... விட்ரு!" என்று கண் சிமிட்டினான்.

நடராஜனும் தன் மூத்தமகன் என்று சகாயனையும் சகாயனின் வருங்கால மனைவி என்று ரிதன்யாவையும் நெடுமாறன் குடும்பத்துக்கு அறிமுகப்படுத்திவைத்து, பெரியமகனுக்கு நறுமுகையையும், யாழினியையும் தெரிந்திருக்க நெடுமாறனையும், பூங்குழலியையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

அறிமுகப்படலம் முடிந்ததும்"சரி வாங்க... நாம கல்யாண மாப்பிள்ளை பொண்ணுக்கு உடுப்பு எடுக்கலாம்" என்று அங்கே தன் அண்ணனை நிமிர்ந்து பார்க்காமல் சங்கடமாக நின்று கொண்டிருந்த நறுமுகையின் கையைப் பிடித்துக்கொண்டு மித்ரா முன்னே சென்றாள்.

ரிதன்யாவின் குடும்பத்தை அங்கே காணாத நடராஜன், "ரிதன்யா.. உன் அப்பா அம்மா எங்கேம்மா?" என்று கேட்க, "அவங்க ஒரு டூர் போயிருக்காங்க அங்கிள். வர ரெண்டு நாளாகும்" என்று ரிதன்யா சாதாரணமாகச் சொன்னாள்.

"நான் நேற்றுப் பின்னேரம் உன் அம்மாவுக்கு போன் பண்ணி ஞாபகப்படுத்தினேனேம்மா... அப்ப அவங்க ஒண்ணும் சொல்லலையே?" என்று ஆனந்தி கேட்க,

"அது அப்புறம் போட்ட பிளான் ஆண்டி. டக்குன்னு டிக்கெட் கிடைச்சதுன்னு போயிட்டாங்க. எனக்கும் நான் செலக்ட் பண்ணினால்தான் பிடிக்கும், அதான் தனியா வந்துட்டேன். காசும் நிறையக் கையோடு கொண்டு வந்திருக்கேன், டோன்ட் வொரி!" என்றாள் ரிதன்யா.

ஆனந்தி ஏதோ காசுக்காகத்தான் ரிதன்யாவின் பெற்றோரைத் தேடுவது போன்ற ஒரு பிம்பத்தை அந்தப் பேச்சு உருவாக்க, யாழினியே திகைத்து நின்றாள். மித்ரன் கோபத்தில் பல்லைக் கடித்தான்.

மித்ராவுக்குக் காலையிலேயே ரிதன்யாவின் வாட்சப் ஸ்டேட்டஸில் அவளது தாயும் தந்தையும் லண்டனில் நிற்பது போன்ற ஒரு படத்தைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. முதலில் அது பழைய படம் என்று நினைத்து அலட்சியமாக இருந்தவளுக்கு, இப்போதுதான் அதில் இன்றைய தேதிதான் பதிவாகியிருந்தது என்பதும் நினைவில் வந்தது.

'இன்றைக்கு உடுப்பு எடுக்க நல்ல நாள் என்று ஒரு மாதத்திற்கு முன்னமே தேதியைத் தேர்ந்தெடுத்ததே ரிதன்யாவின் குடும்பம் தான். அப்படியிருக்க, ஒரு நாளில் டிக்கெட் எல்லாம் போட்டு லண்டன் போக முடியுமா? விசா எடுக்கவே எத்தனை நாள் ஆகும்? அப்படியென்றால், இதையெல்லாம் முதலிலேயே திட்டமிட்டு ஏற்பாடு செய்துவிட்டு, இப்போது ஏதோ அவசரப் பயணம் போலப் பொய் சொல்கிறாளா?' என எண்ணியவளுக்கு ரிதன்யாவின் இந்தப் பொய்யும் புரட்டும் புரிந்ததும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

காலை ஒன்பது மணியிலிருந்து சகாயன் அவள் கூடத்தான் இருந்தான், ஆனால் ரிதன்யா இந்த விஷயத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை. இப்போது தன் தாயை ஏதோ பணத்துக்காக அலைபவர் போலக் காட்டுவதைக் கண்டு சகாயனுக்குக் கோபம் ஏற, "அம்மா... நீங்க போய் புடவை பாருங்க" என்று அவர்களை அனுப்பி வைத்தான்.

ஆனந்தியின் பின்னால் மித்ராவும் மித்ரனும் சமாதானம் பேசியபடி செல்வதைக் கண்டு, ரிதன்யாவைப் பார்த்து, "என்ன ரிது இது?" என்று சகாயன் காட்டமாகக் கேட்டான்.

"எனக்கு என் கல்யாணத்துக்கு பெஸ்ட் உடுப்பை நான் தான் செலக்ட் பண்ணணும். அதான் அப்பா அம்மாவை டூருக்கு அனுப்பி வச்சேன். என் உரிமையில மத்தவங்க தலையிடுறது எனக்குப் பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமில்லை? இதில் என்ன தப்பு?" என்று திமிராகவே கேட்டாள்.

சகாயன் அதிர்ந்து போனான். 'ஏன் இவள் இப்படிப் பேசுகிறாள்? இதனால்தான் பெற்றோருக்கு இவளைப் பிடிக்காமல் யாழினியைப் பிடித்திருக்கிறதா?' என்று யோசித்தபடி ஆனந்தியைப் பார்த்தான்.

மித்ரனும் மித்ராவும் தாயை சாமாதானம் செய்திருக்க, அவர் பூங்குழலியோடு சேர்ந்து புடவைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். மித்ரனையும், தந்தையையும், நெடுமாறனையும் அங்கே காணவில்லை. அவர்கள் மூவரும் தங்களுக்கான ஆடைகளை எடுக்கச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தான் சகாயன்.

"வா... அம்மா புடவை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. உனக்கு என்ன மாதிரி வேணும்னு சொல்" என்று ரிதன்யாவையும் அழைத்துக் கொண்டு அன்னையிடம் வந்தான் சகாயன்.

அவனைக் கண்ட மித்ரா, "அண்ணா... நீங்க உங்களுக்குப் பிடிச்ச புடவையை வேறு எங்கேயெனும் பாருங்க" என்று அண்ணாவிடம் முகத்தை சுருக்கியவள், நறுமுகை பார்த்துக்கொண்டிருந்த புடவையைக் கண்டு, "நறுமுகை, இது அண்ணிக்கு நல்லா இருக்கும், அவங்களுக்கு வச்சுப் பார்ப்போம்" என்று சொல்ல, சகாயன் தன் தங்கை ரிதன்யாவைத்தான் சொல்கிறாள் என்று ஒரு நிமிடம் நம்பிவிட்டான். ரிதன்யாவுமே அவளுக்குத் தான் வைத்துப் பார்க்கப்போகிறாள் என்று எண்ணி நின்றாள்.

ஆனால், மித்ராவோ ரிதன்யாவையே பார்க்காமல் நறுமுகை எடுத்த சேலையைக் கொண்டு போய் யாழினியிடம் வைத்து, "அம்மா, அத்தை... இந்தப் புடவை அண்ணிக்கு எப்படி இருக்கு?" என்று கேட்டாள்.

அண்ணி என்று யாழினியை உருகி உருகிக் கூப்பிடும் மித்ரா, சகாயனின் மனைவியாக வரப்போகிறவளை ஒருமுறை கூட அப்படிக் கூப்பிட்டதில்லை.

உண்மையில், மித்ராவும் மித்ரனும் இரட்டையர்கள் என்பதால் யாழினியை அண்ணி என்று அழைக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுமட்டுமில்லாமல், யாழினி மித்ராவை விட வயதில் சிறியவள் வேறு. அப்படியிருந்தும் அவர்கள் காட்டும் அந்த அதீத நெருக்கமும் பாசப்பிணைப்பும் ரிதன்யாவிடம் பூச்சியமாக இருந்தது.

ரிதன்யா மித்ராவின் பேச்சைக் கண்டு முகத்தைச் சுருக்கிவிட்டு தனக்கான புடவையை எடுக்கச் சென்றாள்.

அங்கே நின்ற பெரியமகனிடம் பேச்சே வைத்துக்கொள்ள விரும்பாத ஆனந்தி மித்ராவிடம்"யாழினியின் கலருக்கு சாறிக் கலர் கொஞ்சம் பிரைட்டா இருக்கலாம்" என்றவர், யாழினியிடம், "உனக்கு ஏதும் கலர் வேணுமாடா?" என்று கேட்டார்.

"அத்தை... முகூர்த்தத்துக்கு நீங்க என்ன செலக்ட் பண்ணுறீங்களோ அதுதான் பைனல். முகூர்த்தத்துக்கு முன்னாடி கட்டுறதுக்கு அம்மா என்ன சொல்றாங்களோ அதுதான் பைனல்" என்று ஆனந்தியையும் பூங்குழலியையும் பார்த்துப் பணிவாகச் சொன்னாள் யாழினி.

"அப்ப நான்?" என்று மித்ரா குறுக்கிட, "நீங்க ரெண்டு பேரும் அம்மாவுக்கும் அத்தைக்கும் ஹெல்ப் பண்ணுங்க போதும்" என்றாள் யாழினி புன்னகையுடன்.

மித்ரா மெல்ல நறுமுகையிடம், "உங்க அக்கா நம்மளை அள்ளக்கைன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க" எனச் சொல்ல, "விடுங்க மிதுக்கா.. நம்ம கல்யாணம் ஆகும்போது அக்காவை அள்ளக்கையாக்கிடுவோம்!" என்றாள் நறுமுகை கூலாக.

தன் விருப்பத்தை மட்டும் பார்க்காமல், மற்றவர்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் யாழினியின் குணம்தான் தன் குடும்பத்தை இவ்வளவு சீக்கிரம் கவர்ந்துவிட்டதோ என்று சகாயன் எண்ணி நின்றிருந்தான்.

அவனது அந்த மௌனமான யோசனையைக் கண்ட மித்ரா, சும்மா இருக்க முடியாமல், "ஏன் அண்ணா... உங்களுக்குப் புடவை செலக்ட் பண்ணுற ஐடியா இல்லையா? அதுதான் உங்க வருங்காலம் பெரிய இடமாச்சே, காசு நிறைய வச்சிருப்பாங்க! அவங்களே எல்லாம் பார்த்துப்பாங்கன்னு விட்டுட்டீங்களோ?" என்று கசப்பான நக்கலை வீசியவள்,

அத்தோடு நிறுத்தாமல், "அப்புறம் அண்ணா... ஒரு நாளில் லண்டனுக்கு விசா எடுக்க உங்க வருங்காலத்துக்குத் தெரியும் போல இருக்கு. கேட்டு வைச்சுக்கோங்க, உங்களுக்கு நாளைக்கு உதவும்!" என்று சொன்னவள், சகாயன் பதில் சொல்லும் முன்பே, "சிலதுகளுக்குப் பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லத் தெரியுறதில்லை... கேட்கிறவன் எல்லாம் கேனைப்பயன்னு நினைக்குதுகள்!" என்று எரிச்சலில் முணுமுணுத்தாள்.

சகாயன் அதிர்ந்து போய் அவளைப் பார்க்க, மித்ரா தன்னைச் சிறிது அடக்கிக்கொண்டு, "இன்னைக்கு என் இன்னொரு அண்ணாவோட கல்யாணத்துக்குப் புடவை எடுக்க வந்திருக்கேன்... இல்லைன்னா நாக்கைப் புடுங்குற மாதிரி கேட்டுத் தொலைச்சிருப்பேன்!" என்று கோபமாகச் சொல்லிவிட்டு விறுவிறுவென்று அந்த இடத்திலிருந்து நகர்ந்தாள்.
 
Previous thread
Next thread

Latest threads

Top Bottom