Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 370
- Reaction score
- 566
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 11
காலங்கள் உருண்டோட அன்னக்கொடி கல்லூரி படிப்பின் முதல் ஆண்டை முடிக்கும் நிலையில் இருந்தாள்.
ராஜன் கல்லூரி முடித்து கோவையில் இருக்கும் ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டான்.
அதே நேரம் சரவணனுக்கு பூங்கொடிக்கும் திருமணம் செய்ய நாள் குறித்து விட்டார்கள்.பூங்கொடி அரசு பள்ளியில் கணித பாட ஆசிரியராக இருக்கிறாள்.சரவணன் தனியார் வங்கியில் வேலை பார்க்கிறான்.
அக்காவின் திருமணத்திற்கு மகிழ்ச்சியுடன் தயாராகிக் கொண்டிருந்தாள் அன்னக்கொடி.கல்யாணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் லீவு போட்டு ஊருக்கு வந்து விட்டான் ராஜன்.
அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த அன்னக்கொடியின் முகத்தை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை அவனால்.இத்தனை நாட்களில் தோன்றாத ஏதோ ஒரு உணர்வு இப்போது அவள் மேல் வந்துவிட்டது என்று சரியாக புரிந்து கொண்டான் அவன் .
அதுவும் மாப்பிள்ளை சரவணனின் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவன் அடிக்கடி வந்து அன்னக்கொடியுடன் பேசிக் கொண்டிருப்பதை காண பற்றிக் கொண்டு வந்தது இவனுக்கு.
‘அவன் தான் வழிஞ்சு பேசுறான்னு அப்பட்டமா தெரியுது தானே. இவளுக்கு எங்க போச்சு புத்தி’ என்று நினைத்தவன் கோபத்துடன் அவள் அருகில் வந்தான்.
“எதுக்குடி அவன் கிட்ட பல்ல காட்டுற….”
“ எதுக்கு உளர்ற….?என்ன வரதா இப்படி பேசுற…?
“என்ன உளர்றனா…? உங்கக்கா கல்யாணத்துல உனக்கு ஜோடி தேடுறியா? அவன் கிட்ட என்னடி பேச்சு வேண்டி கிடக்கு…?
“டேய் அசிங்கமா பேசாத….எதுக்குடா வீண் பேச்சு பேசுற ராஸ்கல் ? தள்ளி போடா அசிங்கம் புடிச்சவனே….” சொல்லிக்கொண்டு விலகி போக முனைந்தாள் அவள்.
“நில்லுடி…. என்னை விட்டு அங்கே இங்கே உன் கண் போச்சு கொன்னுடுவேன் பாத்துக்கோ….“
“என்னடா இப்படி எல்லாம் பேசுற ?என்று முகத்தை சுளித்தாள் அன்னம். அவன் பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை அவளுக்கு.
“எல்லாம் அப்படி தான்.எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.நீ கண்டவன் கிட்டயெல்லாம் பல்லைக்காட்டி பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கல….”கோபமாக வந்தது அவன் குரல்.
“ச்சீ என்ன பேச்சு இது….போடா அந்த பக்கம்….”
“ஏய் நான் சொல்றது புரியுதா இல்லையாடி உனக்கு ?அவள் கையை பிடித்து தன்னருகில் இழுத்துக்கொண்டான்.
“கைய விடுடா….என்னாச்சு உனக்கு….? எதுக்கு திடீர்னு இப்படி எல்லாம் பேசுற வரதா…?நீ ஓகே தானே….“ அவன் பேச்சில் அதிர்ந்து போனாள் அன்னக்கொடி.
“அது தான்டி எனக்கும் தெரியல….உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எதுக்குன்னு தெரியலடி.சட்டுன்னு இப்ப தான் தோணுச்சு. இனி அவன் கிட்ட பேச்சு வச்சுக்காத .திரும்ப அவன் கிட்ட பேச போன அவ்வளவுதான்…” என்று தன் மனதை சொன்னதோடு மட்டும் இல்லாமல் அவளுக்கு ஒரு கட்டளையும் போட்டான்.
“டேய்…..சும்மா விளையாடாத…. போடா அந்த பக்கம் …“என்று அவன் பேச்சை விளையாட்டு என்று எண்ணி தட்டி கழித்தாள் அவள்.
“ஹேய் தங்கம் நில்லுடி…..உன் மேல லவ்வா என்னன்னு சரியா தெரியல.ஆனா நீ அவன் கூட பேசுறதை பாக்க காண்டாகுது.எதுக்குன்னு தெரியல.என்னடி ஆச்சு எனக்கு….?என்று அவளிடமே தன் குழப்பத்தை சொல்லி அதற்கு விடை கேட்டான்.
“ஆஹ்……பைத்தியம் முத்தி போச்சு…. போடா….” என்று சொல்லியபடி அவன் பேசியதை கருத்தில் கொள்ளாது உள்ளே போனாள் அவள்.
‘என்னாச்சு எனக்கு….’ என்று குழப்பத்துடன் தலையை கோதி கொண்டான் ராஜன்.
பூங்கொடியின் திருமணத்துக்கு தாத்தாவும் பாட்டியும் பெங்களூரிலிருந்து வந்திருந்தார்கள்.மணமேடையில் ஓரத்தில் மாலைகளுக்கு நடுவே புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்த மூத்த மகனையும் மருமகளையும் கண்டதும் பெரியவர்களுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. பாட்டி கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டார். இத்தனை வருடத்தில் அவர்கள் மனதில் கொஞ்சம் மாற்றம் வந்திருந்தது.பெரிய மகனை இழந்த வலி இப்போது அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அவர்களால் இன்னும் பூங்கொடியுடன் ஒட்டி உறவாட முடியவில்லை .
அக்காவின் கல்யாணத்துக்கு பச்சை புடவையில் அமர்க்களமாக தயாராகி, தலையில் மல்லிகை பூ மாலையுடன் சுற்றிக்கொண்டிருந்த அன்னக்கொடியை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜன்.
“என்ன அண்ணா அன்னத்தை சைட் அடிக்கிறீங்களா….?என்று கேட்டபடி வந்தான் கேசவன்.
“ஆமா கேசவா அவகிட்ட லவ் பண்றேன்னு சொல்லிட்டேன்.எந்த ரெஸ்பான்சும் இல்லடா.உன் பிரண்டு நான் ஏதோ விளையாட்டுக்கு சொன்னதா நினைச்சுட்டிருக்கா.அவ கிட்ட என்னன்னு கேட்டு சொல்லுடா….” என்று சோகமாக சொன்னான் ராஜன்.
“அன்னம் இங்க வா….?என்று தோழியை அழைத்தான் கேசவன்.
“சொல்லு கேசவா…?
“ராஜன் அண்ணா உன்னை லவ் பண்றது உனக்கு தெரியும் தானே.உனக்கு அவரை கட்டிக்க ஓகேயா சொல்லு….?
பதில் சொல்லாமல் ராஜனை முறைத்தாள் அன்னம்.
“எங்க அண்ணனை போல மாப்பிள்ளை எங்க தேடினாலும் கிடைக்காது.அவருக்கு ஓகே சொல்லுடி….” என்று சொன்னபடி அங்கு வந்து சேர்ந்தாள் மீனா.
நால்வரும் குசுகுசுவென்று ஏதோ பேசிக்கொண்டிருப்பதை தூர இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் நவநீதம்.
என்ன ரகசியம் பேசுகிறார்கள் என்று தான் அவர் யோசனை போனது.அந்த கல்யாண வீட்டில் விலை உயர்ந்த பட்டு புடவையும், அதற்கு தோதாக விதவிதமாய் நகைகள் பூட்டி தன்னை அலங்கரித்து மகாராணி போல அமர்ந்திருந்தார் அவர். அவரின் இந்த தோற்றத்தை பார்த்து வந்திருந்த எல்லோரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.மறுபக்கம் மோகனசுந்தரம் மணமேடையில் வேண்டியதை பார்த்து சண்முகத்துடன் சேர்ந்து உதவிக் கொண்டிருந்தார்.
“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு…. ஐ லவ் யூ தங்கம்….” அன்னக்கொடியிடம் தன் மனதை நேரடியாக சொன்னான் ராஜன்.
“பதில் சொல்லுடி அன்னம்…..” என்று திகைத்து போய் நின்ற தோழியின் கையை சுரண்டினாள் மீனா.
“எனக்கு சரியா சொல்ல தெரியல வரதா…. ஆனா உன்னை ஹர்ட் பண்ண முடியல.நான் படிச்சு முடிஞ்சதும் கல்யாண பேச்சு எடுத்தா உன்னை கட்டிக்கிறதா எங்கப்பா கிட்ட சொல்றேன் சரியா….”என்று தன் பதிலை சொன்னாள் அன்னம்.
“அப்போ என்னை லவ் பண்ண மாட்டியா…? ஏக்கத்துடன் வந்தது ராஜனின் குரல்.
“அது வந்து….உன்னை பிடிக்கும் தான்.ஆனா….அது லவ்வா என்னன்னு சொல்ல தெரியல வரதா சாரி…..” என்று தடுமாறினாள் அன்னம்.
“அண்ணா அது தான் உங்களை கட்டிக்கிறதா ஒத்துக்கிட்டா தானே.... அப்புறம் என்ன .கல்யாணம் கட்டிக்கிட்டு உங்களை தான் லவ் பண்ணுவா சரியா…”என்று சமாதானமாக சொன்னான் கேசவன்.
கேசவன்,மீனா,ராஜன்,அன்னக்கொடி நால்வருக்குள்ளும் எந்த ஒளிவு மறைவும் இல்லை.உடன் பிறந்தவர்கள் போல எப்போதும் ஒன்றாக சுற்றும் இவர்களின் நெருக்கம் அந்த தெருவில் வசிக்கும் எல்லோருக்கும் அத்துப்படி.ராஜன் தனியாக கோயம்புத்தூர் போனதில் மற்ற மூவருக்கும் கொஞ்சம் வருத்தம் தான்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் நவநீத மணியின் தந்தை இறந்து விட்டதாக செய்தி சொல்லி அனுப்பியிருந்தார் அவர் அண்ணன். கணவனையும் கூட்டிகொண்டு பிறந்த ஊருக்கு கிளம்பினார் நவநீதம்.
தந்தையின் மரண வீட்டிற்கு போய் துக்கத்தில் பங்கெடுத்தார்.பயந்து கொண்டு ஊருக்கு போன நவநீத மணியை இருகரம் நீட்டி வரவேற்றனர் அன்னையும் அண்ணன் சேவகப்பெருமாளும்.
துக்க வீட்டிலிருந்து திரும்பி வரும் போது தங்கையின் கையை பிடித்து ஒரு தொகை பணத்தை கொடுத்து செலவிற்கு வைத்துக்கொள் என்று சொன்னதுடன், சொத்துக்களை எல்லாம் தந்தை இரண்டாக பிரித்து உயில் எழுதி வைத்திருக்கிறார். பதினாறாம் நாள் காரியம் முடிந்ததும் எல்லாவற்றையும் சரி பார்க்கலாம் என்று சொன்னார் அவர்.
அவ்வளவு தான் அந்த நொடியிலிருந்து நவநீத மணியின் பழைய பணக்கார குணம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியது.
“ஏங்க அண்ணன் மூன்று லட்சம் பணம் தந்திருக்கு. வாடகைக்கு கார் பிடிங்க.அலுங்காமல் குலுங்காமல் ஊருக்கு போயிடலாம்….”என்றார் கணவனிடம்.
“ஏன் பஸ்ல போனா என்ன நவநீதம்….? உங்கண்ணன் பணம் கொடுத்த உடனே அவங்க செஞ்சதெல்லாம் இல்லன்னு ஆயிடுமா என்ன…அப்போ இவ்வளவு நாளும் இந்த பணத்துக்கு தான் ஆசைப்பட்டியா…?
“அப்படி இல்லைங்க….வர்ற லட்சுமிய எதுக்கு வேண்டாம் என்று சொல்லணும்…?
“நம்ம ரெண்டு பசங்களும் வேலைக்கு போறாங்க.நானும் வேலைக்கு போய் சம்பளம் வாங்குறேன். அது போதாது நமக்கு….? நம்ம புள்ளைங்க உழைக்கிற பணத்தை விட உன் பிறந்த வீட்டு சொத்து பெருசா போச்சா உனக்கு….?
தியாகு இப்போது ஜெர்மனியில் வேலை பார்க்கிறான்.அவன் படித்த படிப்புக்கு அங்கிருக்கும் பெரிய கார் கம்பெனியில் வேலை கிடைத்திருந்தது அவனுக்கு. மாதம் மாதம் அவனும் பணம் அனுப்புகிறான்.
சேலத்துக்கு வந்த நவநீதம் தன் பிறந்த வீட்டு பெருமைகளை வாய் ஓயாமல் தேனாம்பாளிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். இந்த பேச்சுகளை கேட்ட சண்முகம் என்ன வருமோ என்று பயந்து போனார்.
உயிலில் எழுதியபடி பல கோடி பெறுமதியான சொத்துக்களும், பணமும் நவநீதம் பெயருக்கு மாற்றப்பட்டது.உடனே பெரிய பங்களாக்கள் உள்ள வடக்கு தெரு ஏரியாவில் இடம் வாங்கி, வீடு கட்ட ஏற்பாடு தொடங்கிவிட்டார். அப்படியே அண்ணன் மகளை தியாகுவுக்கு திருமணம் செய்யலாம் என்றும் முடிவு செய்தார் நவநீதம்.
மனைவியின் இந்த மாற்றத்தை கண்டு கலங்கி போனார் மோகனசுந்தரம்.
இப்படியே அன்னக்கொடி வீட்டுடன் இருந்த நெருக்கத்தை மெல்ல மெல்ல குறைத்து கொள்ள தொடங்கிவிட்டார் நவநீதம் என்று எல்லோருக்கும் அப்பட்டமாக தெரிந்தது.
Previous thread
Next thread





























