• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

EK 31

அத்தியாயம் 31

ரிதன்யாவின் பெற்றோர்களுக்கும் ரிதன்யா தனியாகச் சகாயன் வீட்டுக்குக் கிளம்பிப் போனதிலிருந்து, மகள் அங்கே போய் என்ன ரகளையை இழுக்கக் காத்திருக்கிறாளோ என்று வீட்டில் பயத்துடனும் பதற்றத்துடனும் இருந்தவர்கள், போன் வந்த அடுத்த கணமே வண்டியில் ஏறி நடராஜனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் உள்ளே நுழைந்ததும், நடராஜன் அந்தப் பத்திரத்தை வாங்கி பைனான்சியர் நிதர்சனிடம் கொடுத்தார். "நிதர்சன்... நீங்க பைனான்ஸ் துறையிலதான் இருக்கீங்க, இதை ஒருமுறை பாருங்க. வட்டியோட சேர்த்து இதுக்கு மொத்தம் எவ்வளவு கொடுக்கணும்னு கணக்குச் சொல்லுங்க" என்றார்.

நிதர்சனின் பார்வையோ ரிதன்யாவின் தந்தை உள்ளே வந்ததிலிருந்தே அவர் மேலேயே நிலைத்திருந்தது. ஏனென்றால், அவருக்கு இவன் ஆறு வருடங்களுக்கு முன்னரே பத்துக்கோடி ரூபாய்க்கும் மேல் கடன் கொடுத்திருக்கிறான். தன் கடனின் அசலைத் தராமல், இன்றுவரை வெறும் வட்டியை மட்டுமே கட்டிக்கொண்டிருக்கும் ஒருவர், தன் மகளுக்காகச் சகாயனுக்கு இவ்வளவு பெரிய தொகையைக் கடனாக எப்படிக் கொடுத்தார் என்பதுதான் நிதர்சனின் மனதுக்குள் பெரும் வினாவாகக் குடைந்துகொண்டிருந்தது.

ஆனால், அவர் அடிப்படையில் ஒரு நியாயமான மனிதர். யாரையும் ஏமாற்றி வாழும் குணம் கொண்டவர் அல்ல. சகாயனுக்கான அந்தக் கடன் தொகையைக் கூட அவர் தன் நல்ல எண்ணத்தில்தான் தந்திருப்பார்.

அப்போது அவர் ஒரு பெரும் நிலத்தை வாங்கி, அங்கே கட்டிடம் கட்டி முடிக்கலாம் என்று ஒத்துக்கொண்டு, வேலையையும் முடித்தார். ஆனால், கட்டிடம் கட்டி முடித்த பின்னரே தான், அவரை யாரோ போலியான நிலப்பத்திரத்தை வைத்து அடியோடு ஏய்த்திருக்கிறார்கள் என்ற கசப்பான நிஜம் தெரியவந்தது. அதனால் அதில் போட்ட மொத்தக் காசும் நட்டமாகிவிட, அந்தப் பத்துக்கோடி கடனை இன்னுமே அவர் நிதர்சனிடம் செலுத்திக்கொண்டிருக்கிறார்.

அங்கே நின்றுகொண்டிருந்த நிதர்சனின் ஆராயும் பார்வையைக் கண்ட ரிதன்யாவின் தந்தைக்கு, குற்ற உணர்ச்சியிலும் அவமானத்திலும் அவனது தலையை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. சகாயன் தன் கைக்குள் இருக்க வேண்டும் என்ற ரிதன்யாவின் அடவாடித்தனமான பிடிவாதத்தின் காரணமாக, வெளியில் வட்டிக்குக் கடன் வாங்கித்தான் சகாயனுக்குப் பணத்தைக் கொடுத்திருந்தார்.

சகாயனுக்குப் பணத்தைக் கொடுத்தாலும், உறவு பாசம் என்று உணர்ச்சிவசப்பட்டு அதை அவர் சும்மா கொடுத்துவிடவில்லை. பக்காவாக சட்டப்படி பத்திரம் பதிவு பண்ணித்தான் கொடுத்திருந்தார். காசு விஷயத்தில் தன் சொந்த மகளையே கூட நம்பாதவர் அவர்! மனிதர்களை விடப் பத்திரங்கள் மட்டுமே எப்போதும் உண்மை பேசும் என்ற பலமான எண்ணம் கொண்டவர்.

நிதர்சனும் தன் பார்வையை ரிதன்யாவின் தந்தையிலிருந்து திருப்பி அந்தப் பத்திரத்தை வாங்கிச் சட்டென்று கணக்குப் பார்த்துவிட்டு, "இவ்வளவு வருது சார்" என்று ஒரு தொகையைக் கூறினான்.

"ஓகேப்பா... கொடுத்திடலாம்" என்று நடராஜன் தன் மகன் மித்ரனிடம் கண்ணைக் காட்டினார்.

மித்ரனும் தான் கையில் கொண்டு வந்திருந்த அந்தப் பெரிய பணப்பையை எடுத்துத் தன் தந்தையின் முன்னே மேசையின் மேல் வைத்தான்.

"பார்த்துக்கோங்க... இந்தத் தம்பி சொன்ன கணக்கின்படி இதில் அத்தனை பணமும் சரியாக இருக்கு" என்று நடராஜன் ரிதன்யாவின் பெற்றோரிடம் சொன்னார்.

"என்ன சகா... உன் அப்பா கொள்ளையடிக்கிற வேலையை வேற எங்கேயாவது தொடங்கிட்டார் போல!" என்று ரிதன்யா அப்பொழுதும் தன் நச்சு வாயை மூடாமல் எகத்தாளமாகப் பேசினாள்.

அதற்குச் சகாயன் குறுக்கிட்டு, நிதர்சனைக் காட்டி, "ரிதன்யா... இவர்கிட்ட எங்க குடும்ப சொத்து, எங்க குடும்பச் சேமிப்புன்னு மொத்தத்தையும் அடகு வச்சுத்தான் இந்த பணத்தை நாங்க வாங்கியிருக்கோம். ஆனா, இதை நாங்க உழைச்சு கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிடுவோம்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு" என்றான் உறுதியாக.

"உன் அப்பாகிட்ட அவ்வளவு சொத்தா இருக்கு? அந்த ஒற்றைக் கடையும் இந்த வீடும் தானே இருக்கு... அப்புறம் எப்படி இவ்வளவு காசைப் புரட்ட முடிஞ்சது?" என்று உண்மையைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்டாள் ரிதன்யா.

"இது என் அப்பாவோட சொத்து மட்டும் இல்லை... என் சொந்த பந்தங்கள், உறவுகள் பலரோட சொத்துக்களை அடமானம் வச்சிருக்கோம். ஏன்... எனக்காக எங்க ஆடிட்டர் அங்கிள் கூடத் தன்னோட ஒரு வீட்டை அடகு வச்சிருக்கார்! இந்தக் கடனை அடைக்க நான் இன்னும் நிறைய கஷ்டப்படணும்னு எனக்கு நல்லாவே தெரியும்.

ஆனா, உன்னை மாதிரி ஒருத்தியைக் காதலிச்சுத் தொலைச்சதுக்குத் தண்டனையா இதை நான் ஏத்துக்கிறேன். கஷ்ட காலத்துலதான் உண்மையான உறவுகளோட அருமை தெரியும்னு பெரியவங்க சொல்வாங்க... அதை நான் இப்போ முழுசா தெரிஞ்சுக்கிட்டேன்" என்றான் சகாயன் உணர்ச்சிப் பெருக்கோடு, நடராஜன் அவன் பேச்சில் மகனின் முதுகைக் தட்டிக்கொடுக்க, மித்ரன் அண்ணாக்கு அணைவாக நின்று கொண்டான்.

பஞ்சாட்சரத்துக்கு அப்பாவும் மகன்களும் சேர்ந்து நின்று கொண்டிருந்த காட்சி கண்ணைக் கவர்ந்தாலும்"டேய் சகாயன்... இங்க பேச்சை நீட்டிட்டு இருக்காமல் முதல்ல பணத்தைக் கொடுத்து முடிங்கடா. நான் வேற சுகர் பேஷண்ட்... என் தங்கச்சி கையால நேரத்துக்குச் சாப்பிடணும்"என்றவர்,

பின் நெடுமாறனைப் பார்த்து, “டேய் இது உன் சம்பந்தி வீடு என்று சொல்லும் பொழுது என் வீடும் தானே.. என்னோட பெத்தபிள்ளை போல இருக்கிற என் யாழினிக்குட்டியோடதும், நறுமுகையோடதும் தானே.. அது தான் சாப்பிடமல் வந்தேன். நீ என்னவென்றால் பாராக்கு பார்த்திட்டு நிற்கிறாய்.. அந்தப் பிள்ளையை பேசி முடிச்சு அனுப்பி விடேன்” என்று என்று பஞ்சாட்சரம் தன் நண்பனிடம் எதார்த்தமாகப் பேச,

நெடுமாறனோ தன் பக்கம் பந்தைத் தட்டிவிட்ட நண்பனை முறைத்தபடியே, “அது தான் மருமகன்கள் கதைக்கிறாங்க தானே பொறு..” என்றார்

"நான் வேற வீட்டைப் பிடிச்ச பீடை இன்னையோட ஒழிஞ்சதுன்னு, இவங்க போனதும் முதல்ல வீட்டை நல்லாத் தண்ணி ஊற்றிக் கழுவி விடணும்ன்னு தண்ணி வாளியைக் கொண்டு வந்து வச்சு கனநேரமாகுது" என்றான் மித்ரனும் கோபமாக,

மித்ரனைக் கொலைவெறியோடு பார்த்த ரிதன்யாவுக்கு, அவளது அத்தனை பிளான்களும் தோற்றுப் போன ஆத்திரத்தில் அறிவு வேலை செய்யவில்லை. அங்கே மேசையில் வைக்கப்பட்டிருந்த பணப்பையை அப்படியே தூக்கிச் சுழற்றி அடித்தாள்!
 
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
Previous thread

Latest threads

Back
Top Bottom