• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

EK 30

அத்தியாயம் 30

பெண்கள் எல்லாரும் அறைக்குள்ளே சென்றுவிட்டாலும், ஆர்வம் தாங்காமல் எல்லோருமே அறைவாசலில் மறைந்து நின்று, வெளியே என்னதான் நடக்கிறது என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அதை கவனித்த மித்ரன், "இதற்குப் பருத்திமூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் போல..." என்று கேலி பேச, "டேய் மித்ரா... முதல்ல போய் அந்தக் கதவை நல்லா பூட்டு. இங்கே வெளியே நிக்கிறது பொண்ணு இல்லை, பேய்! எந்த நேரத்துல என்ன செய்யும்னே தெரியாது" என்று நடராஜன் மெதுவான குரலில் எச்சரித்தார்.

மித்ரன் வாசலில் நின்ற தன் தங்கை மித்ராவை உள்ளே போகச் சொன்னவன், "நாங்களாகக் கதவைத் திறக்கும் வரைக்கும் நீங்க யாரும் வெளியே வரக்கூடாது, சொல்லிட்டேன்!" என்று கண்டிப்பாகப் பணித்துவிட்டு, அவனாகவே முன்னவந்து அந்த அறைக்கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு வந்தான்.

இப்பொழுது ரிதன்யாவைத் திரும்பிப் பார்த்த நடராஜன், "என்னம்மா இது? நேற்று இரவுதான் கல்யாணமாகி ஹனிமூன் போன என் பிள்ளைகள் எல்லாரும் வீட்டுக்கு வந்திருக்காங்க. அவங்களுக்கு ஒரு நல்ல விருந்து வைக்கணும்னுதான் என் நண்பர்கள் எல்லாரையும் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். ஆனா நீ என்னடான்னா... காலையில தூங்கி எழுந்ததும் நேரா இங்கே வந்து நின்னு இப்படிப் ரகளை பண்ணிட்டு இருக்காய்?" என்று கண்டிப்பான குரலில் கேட்டார்.

அப்பொழுதுதான் ரிதன்யா, அவர்கள் கூட வந்திருந்த மற்றவர்கள் மீது தன் பார்வையைத் திருப்பினாள். வந்திருந்தவர்களில் ஆடிட்டர் பஞ்சாட்சரத்தை அவளுக்கு ஏற்கனவே நன்றாகத் தெரியும். ஆனால் மித்ரனின் நண்பனைப் பற்றி அவளுக்குத் தெரியாது.

அப்படியே பக்கத்தில் நின்ற நிதர்சனைக் கண்டதும் அவளுக்குள் ஒரு நொடி வெலவெலத்துப் போய்விட்டது! தன் அப்பாவுக்கே எப்போது காசு பற்றாக்குறை வந்தாலும் பணம் கொடுத்து உதவும் பெரிய பைனான்சியர் அவன். அவனை ஏய்க்க நினைத்தால் கையை, காலை உடைத்துவிடுவான்! அப்படிப்பட்டவன் எதற்காக இப்போது சகாயன் வீட்டில் வந்து நிற்கிறான் என்று புரியாமல் திகைத்துப் போனாள்.

சகாயன், நிதர்சனைக் கண்டு ரிதன்யா பயப்படுவதைப் பார்த்தான். அவனுக்குப் பின்னணி எதுவும் புரியாவிட்டாலும், அவளது பயத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்து, "ரிதன்யா... நீ இப்போ எதுக்காக இங்கே வந்தாய்ங்கிறதை மட்டும் சொல்லிட்டு, உடனே இந்த இடத்தை விட்டுக் கிளம்புற வழியைப் பார்" என்று அவளே முதலில் அந்தப் பணப் பேச்சை ஆரம்பிக்கட்டும் என்பது போலப் பேசினான்.

அண்ணனின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட மித்ரன், "அண்ணா... அவ என்னத்துக்கு இப்போ இங்கே வந்திருக்கப் போறா? உன்னைத் தன் கையை விட்டு நழுவ விட்டுட்டாளே... அதனால அவளோட பிரண்ட்ஸ் மத்தியில் இவளுக்கு ரொம்பத் தலைகுனிவா இருந்திருக்கும். அதான் எப்படியாவது உன்கிட்டப் பேசி, உன்னைத் தன்பக்கம் இழுத்துடலாம்னு ஆசையில வந்திருக்கா!" என்று படு நக்கலாகச் சொன்னான்.

அதற்குச் சகாயன் தன் தம்பியைப் பார்த்து, "அதுக்கு நான் பழைய சகாயன் நடராஜனா இருக்கணுமேடா... ஆனா நான் இப்போ நறுமுகையோட புருஷனாகவும் இருக்கேனே!" என்று தன் மனைவியின் மீதிருக்கும் காதலை அத்தனை உறுதியாக பிரகடனம் செய்தான்.

அண்ணன் சொன்னதைக் கேட்டு முகத்தில் பெருமிதம் பொங்க, "கேட்டுக்கோடி!" என்பது போல ரிதன்யாவுக்குத் தன் ஒற்றைக் கண்ணைக் காட்டிக் கேலி செய்தான் மித்ரன்.

ரிதன்யாவுக்குள் ஒரு பெரிய ஏமாற்றமும் ஆத்திரமும் குமுறிக் கொண்டே இருந்தது.

'நான் இந்தச் சகாயனின் மனதில் எந்தவொரு பாதிப்பையுமே ஏற்படுத்தவில்லையா? என்னை நான்கு வருடங்களாகக் காதலித்ததையே துளியும் ஞாபகம் இல்லாதவன் போல, இவன் அந்த நறுமுகையைத் தன் மனைவி என்று கொண்டாடித்... தூக்கிவைத்துப் பேசுகிறானே” என சகாயனின் ஒவ்வொரு பேச்சிலும் அவளுக்கு வயிறு காந்தியது, எரிந்தது.

"நாலு வருஷமாகக் காதலிச்ச என்னை ஒரேடியா மறந்திட்டியாடா?!" என்று ஆங்காரமாகக் கத்தியவள், நறுமுகை வெட்கத்துடன் சென்று மறைந்த அந்த அறையைத் தன் தீவிழியால் அப்படியே முறைத்துப் பார்த்து, "ஒரே மாசத்துல உன்னை அப்படி மயக்கிட்டாளா? அப்படி என்னத்தைக் காட்டிக் மயக்கினா இவ?!" என்று அசிங்கமான எண்ணத்தோடு சீறினாள் ரிதன்யா.

அவள் நறுமுகையை அப்படிக் கேவலப்படுத்திப் பேசிய அடுத்த நொடி, சகாயனுக்குக் கோபம் தலைக்கேறியது. அவனது பொறுமையின் எல்லை அடியோடு உடைந்து, "வாயை உடைச்சிடுவேன்டி!" என்று கத்திக்கொண்டே சகாயன் அவளை அடிக்கத் தன் கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்தான்.

அவன் அடித்துவிடுவான் என்ற வேகத்தில் சகாயனுக்குக் குறுக்கே வந்த நடராஜன், "சகாயன்... பொறுமையா இருடா! கையை இறக்கு" என்று தன் மகனை லேசான அதட்டலோடு தடுத்து நிறுத்தினார்.

சகாயன் தன்னை நிஜமாகவே அடிக்க வந்துவிட்டதை நினைத்து ரிதன்யா அப்படியே பிரமை பிடித்தவள் போல உறைந்து போய் நின்றாள்.

அவளைப் பார்த்த நடராஜனோ, "என் மருமகளைப் பத்தி இனி யாராவது தப்பாக் குற்றச்சாட்டுச் சொன்னால், அப்படிப் பேசுறவங்களோட நாக்கு அழுகிடும்மா! அவளுக்குத் தன் கணவனோட குடும்பத்தைத் தன் சொந்தக் குடும்பமாகப் பார்க்கிற ஒரு பெரிய மனசு இருக்கு.

உன்னைப் போலக் கட்டிக்கப் போறவன் உனக்கு மட்டும்தான் சொந்தம், மத்தவங்க யாருக்கும் அங்கே இடமில்லைன்னு சுயநலத்தோடு சொந்தம் கொண்டாடாமல், எல்லா எதார்த்தத்தையும் புரிஞ்சு நடந்துகிட்டவ என் மருமகள்!" என்று நறுமுகையை விட்டுக் கொடுக்காமல் பேசியவர்,

அத்தோடு நிறுத்தாமல் அவளது முகத்திற்கு நேராகத் தன் விரலை நீட்டி, "இனிமே நீ என் மருமகளைப் பத்தி ஒரு வார்த்தை தப்பாப் பேசினா... என் வீட்டு வாசலைத் தாண்டி உயிரோட வெளியே போகமாட்டாய்!" என்று நடராஜன் அத்தனை கடுமையான குரலில் எச்சரித்தார்.

அங்கே நின்ற மித்ரனோ, "அப்பா... இவளையெல்லாம் ஒரு ஆள்ன்னு நினைச்சு எதுக்குப்பா பேசிட்டு இருக்கீங்க? முதல்ல இவ தலையைப் பிடிச்சு வெளியே தள்ளிவிடுங்க" என்று ஆத்திரப்பட்டான்.

இப்படி ஆளாளுக்கு அவளை அசிங்கப்படுத்தித் தள்ளவும், ரிதன்யாவுக்குள் இருந்த வன்மம் மீண்டும் தலைதூக்க, "என்னடா... எல்லாரும் சேர்ந்து என்னைக் கோபப்படுத்திப் பார்க்கிறீங்களா? நான் மட்டும் நினைச்சேன்னா... உன் அண்ணனை ஆயுசுக்கும் வெளியேவே வரமுடியாதபடி உள்ளே தள்ளிடுவேண்டா!" என்று அத்தனை ஆங்காரத்தோடு மீண்டும் உறுமினாள் ரிதன்யா.

"உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு என் அண்ணாவை உள்ளே வைப்பியாடி?!" என்று மித்ரன் ஆக்ரோஷமாகக் கேட்க,

"காதலிச்சதுக்கு இல்லடா! உன் அண்ணன் என்கிட்ட கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டான்னு போலீஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தால் போதும்... அப்புறம் இருக்கு அவனுக்கு!" என்று தன் வன்மத்தைக் கக்கினாள்.

"அண்ணா... அவ வாயாலேயே பூனைக்குட்டி வெளியே வந்திடுச்சு பாத்தியா!" என்று மித்ரன் தன் அண்ணனிடம் சொல்ல,

அப்பொழுது குறுக்கிட்ட நிதர்சனோ, "உனக்கு இப்போ வேண்டியது பணம் தானே ரிதன்யா... அதை அவங்க தர ரெடியா இருக்காங்க, வாங்கிக்கோ!" என்றான் அலட்சியமாக.

சகாயன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, நடராஜன் முன்னே வந்து, "ஏன்மா... என் பையன் வாங்கின காசோட கடன் பத்திரம் எங்கே? அதை முதல்ல கொண்டா" என்று கேட்டார்.

அவர்கள் இந்தத் தொகையைக் கேட்பதை ஏற்கனவே எதிர்பார்த்தவர்கள் போல அங்கிருந்தவர்கள் அமைதியாக நிற்க, ரிதன்யா தன் ஹேண்ட்பேக்கிலிருந்த அந்த அசல் கடன் பத்திரத்தை எடுத்து நீட்டினாள்.

நடராஜன் அதை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு, தன் மகனிடம் கொடுத்து, "இது மட்டும்தானாடா சகாயன்?" என்று கேட்டார்.

அவனும் அதை வாங்கிச் சரிபார்த்துவிட்டு, "ஆமாப்பா... இது மட்டும்தான்" என்றான்.

உடனே நடராஜன் ரிதன்யாவிடம், "உன் அப்பா அம்மாவையும் உடனே இங்க வரச் சொல்லும்மா... கணக்கை நாம இன்னைக்கே பேசி முடிச்சுடலாம்" என்று அத்தனை சாதாரணமாகச் சொன்னார்.

"அதுல இருக்கிற சைபர் எத்தனைன்னு எண்ணிப் பார்த்தீங்களா நீங்க?!" என்று படு நக்கலாகக் கேட்டாள் ரிதன்யா.

"நான் காலம் பூரா வியாபாரம் பண்ணுறவன்ம்மா... எனக்குக் கணக்குத் தெரியாமல் இருக்குமா? நாங்க பணத்தை செட்டில் பண்ண ரெடியா இருக்கோம். நீ முதல்ல காசு கொடுத்த உன் அப்பாவை வரச்சொல்லு. உன்னை நம்பிக் காசைக் கொடுத்தால், நாளைக்கு நீயே 'நான் கையை நீட்டிக் காசை வாங்கலை'ன்னு சொன்னாலும் சொல்லிடுவாய்" என்றார் நடராஜன் சுளீரென்று.

'இவங்ககிட்ட அவ்வளவு பணம் இருக்கப் போவதில்லை... காசில்லாட்டியும் என்ன ஒரு தெனாவட்டு!' என்று நடராஜனை லேசாக எடைபோட்டவள், உடனே தன் தந்தையையும் தாயையும் அங்கே வரவழைப்பதற்காகப் போன் செய்தாள்.
 
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
Previous thread

Latest threads

Back
Top Bottom