• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

EK 28

அத்தியாயம் 28

ஆனந்தி சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து வரவேற்பறையில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களைச் சாப்பிட அழைக்க, "வெளியே போனவங்க வந்திடட்டும் மாமி, எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்" என்று நறுமுகை சொன்னாள்.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... கர்ப்பமான பொண்ணுங்க நேரத்துக்குச் சாப்பிடணும், பசியோடு இருக்கக் கூடாது. நீங்க முதல்ல வந்து சாப்பிடுங்க" என்று ஆனந்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

வாசலில் ஒரு குரல், "யாரு இங்கே கர்ப்பம்?!" என்று அத்தனை அதிர்ச்சியாகவும் ஆங்காரமாகவும் கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தாள் ரிதன்யா.

அவளைக் கண்டதும் சோஃபாவில் அமர்ந்திருந்த மித்ரா, "வெடிகுண்டு கரெக்டா நம்ம வீட்டுல வந்து லேண்ட் ஆகிடுச்சு... ஆனா வெளியே போன ஆண்களை இன்னும் ஒருத்தரையும் காணோமே!" என்று யாழினியின் காதில் மெதுவாக முணுமுணுத்தாள்.

யாழினிக்குப் பக்கத்திலிருந்த நெடுமாறனுக்கும் மித்ரா கதைத்தது கேட்க, "வந்துடுவாங்கம்மா..." என்றவர், நேராக ரிதன்யாவின் முன்னால் வந்து நின்று, "என் பொண்ணுங்க ரெண்டு பேரும் கர்ப்பமாக இருக்காங்க... அதுல உனக்கு ஏன்மா இவ்வளவு அதிர்ச்சியா இருக்கு?" என்று லேசான நக்கல் தொனியில் கேட்டார்.

ரிதன்யா தன் ஆள்காட்டி விரலால் நறுமுகையைக் காட்டி, "இவளுமா... இவளுமா கர்ப்பமா இருக்கா?!" என்று திகைப்போடு கேட்டாள்.

மித்ரா சட்டென்று எழுந்து வந்து, "எங்க அண்ணி கர்ப்பமாக இருக்கிறதுல உனக்கு என்னடி பிரச்சினை? வீடு திறந்து கிடந்தா உடனே அனுமதியில்லாம வீட்டுக்குள்ள வந்துடுவியா? ஒரு மேனர்ஸ் கூட இல்லையா உனக்கு?" என்று காரசாரமாகக் கேட்டாள்.

சகாயன் தன் பழைய காதலை மறந்து, தன் புது மனைவியுடன் சேர்ந்து வாழாமல் தன்னை நினைத்து உருகிக் கொண்டிருப்பான், அந்த இடைவெளியைப் பயன்படுத்திச் சகாயனையும் நறுமுகையையும் பிரித்துவிடலாம் என்பதுதான் ரிதன்யாவின் மாஸ்டர் பிளான்!

அப்படியிருக்க, கல்யாணமான ஒரே மாதத்தில் நறுமுகை கர்ப்பம் என்ற செய்தி அவளது தலையில் இடியாக இறங்கியது.

உடனே அவளது கூர் தீட்டிய நச்சு நாக்கு சும்மா இருக்காமல், "மித்ரா... உன் அண்ணா சகாயன்கிட்ட போய் முதல்ல விசாரி! இவ வயித்துல வளர்றது உன் அண்ணனோட பிள்ளைதானா... இல்லை இவளுக்குப் பிடிச்ச அந்த ஆர்.ஜே. மித்ரனோட பிள்ளையான்னு ஒழுங்கா கேட்டுத் தெரிஞ்சுக்கோ!" என்று விஷத்தைக் கக்கியது.

அவள் சொன்ன அந்த ஒற்றை வார்த்தையில், தன் ஒழுக்கத்தின் மீதே பழி விழுந்த அதிர்ச்சியில் நறுமுகை அப்படியே திகைத்து நிற்க, அவளது கண்கள் கலங்கி, உடம்பு நடுங்கத் தொடங்கியது.

"ரிதன்யா...! உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்காய்? யார் வீட்டுக்கு வந்து, யாரோட ஒழுக்கத்தைப் பத்திக் கேள்வி எழுப்புகிறாய்?!" என்று அத்தனை கொதிப்போடு கத்திக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் மித்ரன்.

அவனின் பின்னே சகாயன், நடராஜன், நிதர்சன், மித்ரனின் தோழன், பஞ்சாட்சரம் என ஒரு சிறு படையே வீட்டிற்குள் அணிவகுத்து வந்தது.

மித்ரனின் ஆக்ரோஷமான சத்தத்தைக் கேட்டு, நறுமுகை மெதுவாகத் தன் முகத்தைத் திருப்பி வந்துகொண்டிருந்த சகாயனைப் பார்த்தாள்.

அவளது கலங்கிய கண்களைப் பார்த்த சகாயனோ, தன் கண்ணால் 'நான் பார்த்துக்கிறேன்' என்பது போலச் சைகை காட்டி, அவளைப் பேசாமல் அமைதியாக இருக்கும்படி பணித்தான்.

ஆனால் சகாயனைக் கண்டதும் ரிதன்யாவுக்குள் இருந்த வன்மம் இன்னும் அதிகமாக, "சகா... இவளுக்கும் அந்த ஆர்.ஜே. மித்ரன் என்ற ரேடியோ ஜாக்கிக்கும் தப்பான தொடர்பு இருக்குன்னு இவங்க காலேஜ் முழுக்கப் பேசுறாங்க! நீ என்னடான்னா அவளைக் கட்டிக்கிட்டது மட்டுமில்லாம, எவனோடயோ பிள்ளைக்கு அப்பா ஆகப் போறேன்னு இங்க பெருமையா நின்னுட்டு இருக்காய்" என்று படு கேவலமாகச் சிரித்தாள்.

சகாயனோ தன் முகத்தில் எந்தவொரு சலனமும் இல்லாமல், "என் வாழ்க்கையைக் காப்பாத்துறதுக்காக நீ நேரா காலேஜுக்கே போய் இவ்வளவு தூரம் விசாரிச்சியா ரிதன்யா? சூப்பர்! அப்புறம் வேற என்னென்ன சொன்னாங்க... சொல்லு?" என்று சாதாரணமாகக் கேட்டான்.

"இவ அவனுக்கு நிறைய லெட்டர்ஸ், விஷ் கார்ட்ஸ் எல்லாம் எழுதி அனுப்புவாளாம்" என்றாள் ரிதன்யா அடுத்த அம்பைத் தொடுத்து.

"இதுல ஒரு தீவிரமான ரசிகையோட உணர்வுதானே தெரியுது... நெக்ஸ்ட் என்ன?" என்று சகாயன் இன்னுமே கூலாகக் கேட்க,

"இவளுக்கு அவன் குரலைக் கேட்காம விடியாதாம்... சாப்பாடு, தூக்கம் மாதிரி அவளுக்கு அந்த ஆர்.ஜே. மித்ரனோட குரலும் அவ்வளவு முக்கியமாம்!" என்று நறுமுகையை அசிங்கப்படுத்த நினைத்துச் சொன்னாள்.

அப்போது சகாயன் நறுமுகையைத் திரும்பிப் பார்த்துவிட்டு, "ஆனா, என் கூட ஒரு மாசமாக அத்தனை சந்தோஷமா, அன்யோன்யமா வாழ்ந்தா என் பொண்டாட்டி... அப்போவெல்லாம் அந்த ஆர்.ஜே. மித்ரன் என்ற பெயர் ஒருமுறை கூட அவ வாயிலயே வரலையே!" என்றான்.

"எல்லாம் நடிச்சிருப்பா!" என்று மூக்கையும் வாயையும் கோனியபடி சொன்னாள் ரிதன்யா.

"நீ என்கிட்ட இத்தனை வருஷமா நடிச்சது போலவா?" என்று அவளது முகத்தில் அடித்தாற்போலக் கேட்டு அவளுக்கு ஒரு பலத்த குட்டு வைத்தது போலப் பேசினான் சகாயன்.

அதற்குள் மித்ரா இடைமறித்து, "ரிதன்யா... உனக்கு வடிவாத் தெரியுமா எங்க அண்ணி அந்த ஆர்.ஜே. மித்ரனைக் காதலிச்சான்னு? ச்சே ச்சே... நீ காதலிக்கிறதா சொல்லலையே, ஏதோ தொடர்புன்னுதானே ரெண்டு கைகளையும் கோர்த்துக் காட்டினாய்?" என்று கேட்க,

"ஆமாம்!" என்றாள் ரிதன்யா திமிராக.

"அப்ப நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை! எங்க அண்ணி அந்த ஆர்.ஜே. மித்ரனைக் கள்ளப் புருஷனாவே வச்சுக்கட்டும், எங்களுக்கு அதுல ஒரு ஆட்சேபனையும் இல்லை" என்று மித்ரா நையாண்டியாகச் சொல்ல...

அங்கே நின்ற யாழினிதான், "என்னங்கடா நடக்குது இங்கே?!" என்று புரியாமல் மொத்தமாகக் குழம்பிப் போனாள்.

'எவ்வளவு பெரிய உண்மையை, ஆதாரத்தைக் கண்டுபிடிச்சு வந்து சொல்றேன்... இந்த அண்ணனும், தம்பியும், தங்கச்சியும் என்ன பைத்தியக்காரனுங்களா? அந்தப் பொண்ணை வீட்டை விட்டுத் துரத்தாம இப்படி ஜாலியா பேசிட்டு இருக்காங்களே!' என்று ரிதன்யா உள்ளுக்குள் ஆத்திரத்தில் குமுறினாள்.

அவளது முகபாவனையைப் பார்த்த சகாயன், தன் குரலை உயர்த்தி, "ரிதன்யா... நீ என் பொண்டாட்டி மேல இவ்வளவு பெரிய பழியைப் போட்டும், நான் ஏன் இன்னும் அமைதியா இருக்கேன்னு உனக்குத் தெரியுமா? அவ அந்த ஆர்.ஜே.மித்ரனை அளவுக்கதிகமா நேசிச்சு, ரசிகை என்ற நிலையிலிருந்து காதலி என்ற நிலைக்குப் போயிருந்தா... அதைக்கேட்டு உலகத்திலேயே முதன்முதலா சந்தோஷப்படுற முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்.

“ஏன்னா…” என்றவன் நறுமுகையைப் பார்த்து, புருவங்களை உயர்த்திக் காட்டி, கண் சிமிட்டியவன்.. “இந்தத் சென்னை முழுக்க ஆர்.ஜே. மித்ரன் என்ற பெயரில் ரேடியோவுல பேசிட்டு இருக்கிறது... வேறு யாரும் இல்லை, உனக்கு முன்னாடி நிக்கிற இதே சகாயன்தான்!" என்று ரிதன்யாவின் தலையிலேயே ஒரு வெடிகுண்டை தூக்கிப் போட்டான் சகாயன்.

நறுமுகைக்கு பல மாதங்களாக சந்தேகமாக இருந்திருந்தாலும், சகாயனின் வாயால் தான் தான் ஆர்.ஜே.மித்ரன் என்பதை சொன்னதை உள்வாங்கவே மூளைக்கு நிமிடங்கள் பிடித்தது.
 
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
Previous thread

Latest threads

Back
Top Bottom