• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
104
Reaction score
101
Points
43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 14

சகாயன் தன் கிளினிக்கில் தனியாக அமர்ந்திருந்தான். வீட்டிலே கடந்த சில நாட்களாக அவனது குடும்பத்தில் நடந்த சம்பவங்கள் அவனது முகத்தில் ஒரு இறுக்கத்தை அப்பி வைத்திருந்தன அந்த அறைக்குள் ஒருவிதத் தயக்கத்துடனும் பயத்துடனும் உள்ளே நுழைந்தாள் நறுமுகை.

நறுமுகையைக் கண்டதும், அவளது வருகைக்காகவே காத்திருந்த சகாயன், முந்தைய சந்திப்புகளுக்கெல்லாம் சரியான நேரத்திற்கு வந்துவிடும் நறுமுகை, இன்று பத்து நிமிடம் தாமதமாக வந்திருப்பதை கவனித்தான். தன் மணிக்கூட்டைப் பார்த்தபடி, "என்ன நறுமுகை... சொந்தக்காரங்க ஆகப்போறோம்ன்ற உடனே அட்வாண்டேஜா? லேட்டா வாறீங்க?" என்று சற்றே இறுக்கமான குரலில் கேட்டான்.

அந்தக் குரலில் தெரிந்த இறுக்கத்தில் சற்று பயந்துபோன நறுமுகை, "அது என்னாலே தானே உங்களுக்கும் உங்க உட்பிக்கும் ஒன்றரை மாசமாக பேச்சு வார்த்தை இல்லை அது தான் நான் இங்கே வந்தால் உங்களுக்கு பிடிக்காதோ.. " என்று வார்த்தைகளை இழுத்துக் குற்ற உணர்ச்சியுடன் பாதியிலே நிறுத்தினாள்.

"உன்னாலையா? எப்படி?" என்று அவன் புருவங்களை உயர்த்திக் கேட்க, "நான்தானே அன்னைக்கு அந்த உடுப்பு கதையை ஆரம்பிச்சேன்" என்றாள் நறுமுகை குரல் கம்ம.

சகாயன் லேசாகப் புன்னகைத்து, "உண்மையில எனக்குச் சந்தோஷம்தான் நறுமுகை. இவ்வளவு காலமும் என் கண்மறைவில் என்னென்ன நடந்திருக்குன்ற உண்மை, நீ ஆரம்பிச்சு வச்ச பேச்சால்தான் எனக்குத் தெரியவந்தது" என்றான்.

"இருந்தாலும் நீங்க உங்க ஆளோட கோவிச்சிட்டு, அவங்களுக்குப் போன் கூட செய்யாமல் இருக்கிறீங்கன்னு மிதுக்கா சொன்னப்போ எனக்கு ரொம்பக் கில்டியா இருந்திச்சு" என்றாள் நறுமுகை.

"உன் மிதுக்கா இதைச் ரொம்பச் சந்தோஷமாகத்தானே சொல்லியிருப்பா? நீயும் அதை அப்படியே சந்தோஷமாக எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே?" என்று சகாயன் கேட்க, "எனக்குக் காதல் ஜோடியைப் பிரிச்சுவிட்ட பாவம் வேண்டாம் சாமி!" என்று நறுமுகை கும்பிடு போட்டாள்.

"பிரிவெல்லாம் இல்லை நறுமுகை. அவ இந்த விஷயத்துல திருந்தி வரணும், என்னோடும் என் குடும்பத்தினரிடமும் சகஜமாகப் பேசி அன்பாக நடக்கணும்கிறது மட்டும்தான் என் எண்ணம். மற்றபடி... ரிதன்யா மாதிரி என்னை மட்டுமே அளவுக்கதிகமாக நேசிக்கும் ஒருத்தியை என்னால எங்கேயும் பார்க்க முடியாது" என்றவன்,

சட்டென்று ஒரு குறும்புப் புன்னகையுடன் அவளை ஏறிட்டுப்பார்த்து, "ஏன்... நீ கூட என்னை ஆர்.ஜே.மித்ரன்னு நினைச்சதா மிது சொன்னாளே? ஒருவேளை நான் ஆர்.ஜே.மித்ரனாகவே இருந்து, இப்போ உன்னை மேரேஜ் பண்ணிக்கக் கேட்டா உன்னோட பதில் என்னவாயிருக்கும்?" என்று கேட்டான்.

நறுமுகை திகைத்து நிற்க, அவளைப் பதில் சொல்ல விடாமல் சகாயனே தொடர்ந்து, "நான் கேட்கிறதுக்கு முன்னாடியே உனக்கு ஒரு சந்தேகம் வரும்ல? என்னடா இவரு... ஒருத்தியை உருகி உருகிக் காதலிச்சுட்டு, அந்தப் பொண்ணை இப்படி நடுரோட்டுல அம்போன்னு விட்டுட்டு நம்மைக் காதலிக்கிறேன்னு சொல்றாரே... நம்மையும் கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி விட்டிட மாட்டாரா?ன்னு உனக்குத் தோணும் தானே?" என்று அவளது மன ஓட்டத்தைக் கணிப்பது போல் கேட்டான்.

நறுமுகை தன் பார்வையை அவன் மீது தீர்க்கமாகப் பதித்து, "எனக்கு ஆர்.ஜே. மித்ரன் மேல நட்பைத் தாண்டி ஒரு நல்ல ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது. அதுக்காக ஆர்.ஜே-வைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்ற கொள்கைப்பிடிப்பெல்லாம் எனக்குக் கிடையாது.

ஆனா, எனக்கு நீங்க என் அத்தானோட அண்ணா! அந்த முகம் தெரியாத ஆர்.ஜே-வை விட என் குடும்பத்துல ஒருத்தர்... கல்யாணம்ன்றது வெறும் புருஷன் பொண்டாட்டி சம்பந்தப்பட்டது மட்டும் இல்லையே டாக்டர் சார்... அது இரண்டு குடும்பங்கள் இணையுற பந்தம். ஆனா உங்க விஷயத்துல, இப்போவே உங்க சொந்தங்களே உங்களை விட்டு எட்டி நிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நாளைக்கு உங்களுக்கு ஒரு கஷ்டம்னா உங்க பக்கத்துல நிக்கக்கூட உங்க உட்பி யாரையும் விடமாட்டாங்க போல இருக்கு.

நீங்க மட்டும் ரிதன்யாவோட பழக்கத்தை முழுசா விட்டுட்டு என்னை ஓகே பண்ணி, வாழ்க்கை முழுதும் கூட வருவேன்னு சொன்னீங்கன்னா... என்னோட பதில் கண்டிப்பா ஆம் என்பதாகத்தான் இருக்கும்!"
என்றாள் உறுதியாக,

ஒருத்தியைக் காதலித்தவன் எனக்கு வேணவே வேண்டாம் என்றுதான் அவளிடமிருந்து பதில் வரும் என எதிர்பார்த்த சகாயன், நறுமுகையை ஒருவித வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தான்.

அவனது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவள், "என்னோட பதில் உங்களுக்கு நம்ப முடியாமல் இருக்கு போல... ரிதன்யாவால உங்க குடும்பம் எவ்வளவு கஷ்டப்படுதுன்னு வெளியிலிருந்து பார்க்கிற எனக்கே நல்லாத் தெரியுது. உங்க குடும்பத்துல நாளைக்கு என் அக்காவும் ஒருத்தியா வரப்போறா எனும் பொழுது, உங்க குடும்பத்தோட நிம்மதி எனக்கும் முக்கியம்தானே!" என்றாள்.

அவளது முதிர்ச்சியான பேச்சில் சகாயன் அசந்துதான் போனான். இருந்தாலும், "சரி, இப்போ வீட்டு விஷயத்தை இங்கே பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். நான் உனக்குத் தொடர்ந்து வாசிச்சுப் பழகச் சொல்லி இரண்டு பேஜஸ் கொடுத்தேனே... பிராக்டிஸ் பண்ணியாச்சா?" என்று தன் தனிப்பட்ட உணர்வுகளை அவளிடம் மேலும் கொட்ட விரும்பாமல் பேச்சை மாற்றினான்.

அப்படியாக நறுமுகையின் பேச்சுப் பயிற்சி முடிந்து அவள் வீட்டிற்குச் சென்ற பின், தன் இடைவேளையின் போது தேநீர் கோப்பையுடன் வந்து அமர்ந்தான் சகாயன். அந்த அமைதியான சூழலில் அவனது மனம் மீண்டும் ரிதன்யாவின் நினைவுகளுக்குள் பின்னோக்கிச் சென்றது.

அவள் செய்த காரியத்தால் தன் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததும், தந்தை தன் மீது முதன்முறையாகக் கை ஓங்கியதும் அவனுக்குள் ரணமாகக் கிடந்தது. ஆனந்தி ஓரளவு தேறிய அடுத்த நாளே, சகாயன் நேராக ரிதன்யாவைத் தேடி அவளது வீட்டிற்குச் சென்றிருந்தான்.

அங்கே லண்டன் சென்றிருந்த அவளது பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தனர். சகாயனைக் கண்டதும், ஏதும் அறியாதவர்களாய், "வாங்க மாப்பிள்ளை!" என்று அன்போடு வரவேற்றனர்.

அவர்களின் முகபாவனையிலிருந்தே ரிதன்யா செய்தது எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை என்பது சகாயனுக்குப் புரிந்தது.

அவர்களிடம் துளியும் ஒட்டாத தன்மையுடன், "உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்று சகாயன் இரும்பு போன்ற குரலில் சொன்னான்.

ரிதன்யாவின் தாய், தன் வருங்கால மருமகன் எதற்காக இவ்வளவு கோபமாக இருக்கிறார் என்று ஏதும் அறியாதவராக உள்ளே சென்று ரிதன்யாவை அழைத்து வந்தார்.

சகாயனின் கடுகடுப்பான முகத்தைப் பார்த்ததுமே ரிதன்யாவுக்குள் ஒரு நடுக்கமும் பயமும் தொற்றிக் கொண்டது. அவசர அவசரமாக அவன் கையைப் பிடிக்க வந்தவள், "நான் வேணும்னு பண்ணலை சகா... நான் உங்க அம்மாக்கிட்ட அப்படிப் பேசினா, அவங்க உங்ககிட்ட சொல்லுவாங்க, நீங்க எனக்குப் போன் பண்ணுவீங்கன்ற நப்பாசையில்தான் அப்படிச் செஞ்சேன். அவங்க இப்படி மயங்கி விழுவாங்கன்னு எனக்கு நிஜமாத் தெரியாது சகா... என்னை வெறுத்திடாதீங்க, நீங்க இல்லைன்னா நான் செத்துப்போயிடுவேன்" என்று அழுதுகொண்டே நாடகமாடினாள்.

அவளது முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காத சகாயன், அவளது பெற்றோர் பக்கம் திரும்பி, "உங்க பொண்ணைக் கல்யாணம் நடக்குற வரைக்கும் வாயை மூடிக்கிட்டு அமைதியா இருக்கச் சொல்லுங்க" என்று எச்சரித்துவிட்டு, வந்த வழியைப் பார்த்து அப்படியே விறுவிறுவென்று கிளம்பிவிட்டான்.
 
Previous thread
Next thread

Latest threads

Top Bottom