• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
104
Reaction score
101
Points
43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 11

மித்ரனின் முகமாற்றத்தைப் பார்த்த நறுமுகை, ஏதோ விரும்பத்தகாதது நடந்திருக்கிறது என எண்ணி, “என்னாச்சு அத்தான்?” என்று கேட்டாள்.

“இல்ல... என் ஃபிரண்ட் ஒருத்தன் அண்ணன் சட்டையைத் தம்பி போட்டுட்டுப் போனப்போ, அந்தப் பையனுக்கு அண்ணியா வரப்போறப் பெண், தன் புருஷன்னு நினைச்சு தம்பிக்கிட்ட உரிமையா அணைக்க வந்த மாதிரி ஒரு கதை சொன்னான். அதுக்குப் பிறகு நான் அண்ணன் சட்டையைப் போடுறதில்லை" என்று மித்ரன் மழுப்பலாகச் சொல்ல,

“நீங்க வேற... அண்ணனும் தம்பியும் ஒரே சட்டையைப் போட்டா ஒரே மாதிரி ஆகிடுவாங்களா? இல்லை அந்தப் பொண்ணு என்ன குருடியா? சட்டையை மட்டும் பார்த்து புருஷனைக் கண்டுபிடிக்க?

அந்த அண்ணன் காரன் மட்டும் என்ன உலகத்துலேயே ஒரே ஒரு சட்டைதான் வச்சிருக்காரா? அவர் போடுற மாதிரி எத்தனையோ பேர் போடுவாங்க... அதுக்காக அந்தச் சட்டை போட்டவனை எல்லாம் புருஷன்னு அந்தப் பெண் சொல்ல முடியுமா? ரொம்பக் காமெடியா இருக்கு உங்க கதை!” என்று நறுமுகை கேலியாகச் சொல்ல,

"ஒருவேளை புருஷனுக்கும் கொழுந்தனுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாத ஜென்மங்கள் உலகத்துல இருக்கு போல நறுமுகை!" என்றபடி அங்கே வந்தாள் மித்ரா. அது ரிதன்யாவின் வேலை என்பது அவளுக்கு மித்ரன் மூலம் முன்பே தெரியும்.

"ச்சி... என்ன மனுஷங்க இவங்க.. இப்படியெல்லாம் உலகத்தில் இருக்காங்களா?" என்று நறுமுகை அருவருப்பாக முகத்தைச் சுழிக்க, தற்செயலாக அங்கே வந்த ரிதன்யாவுக்கு, நறுமுகை தன்னையே பார்த்து அருவருப்பாக முகம் சுழிப்பது போலத் தோன்ற, உள்ளுக்குள் கொதித்துப் போனாள்.

மித்ரா ரிதன்யா வந்ததைக் கவனிக்காமல், “சில கூமுட்டைகள் அப்படியிருந்தும் அதுகளோட கதைக்க வேண்டி வரும் பாரு... அப்பதான் நாம எவ்வளவு பெரிய பாவம் செய்து பிறந்து இருக்கோம்னு தெரியும்" என்றாள்.

“நீங்க எதுக்கு மிதுக்கா கதைக்கணும்? நானெல்லாம் சீ போன்னு நாயை விரட்டுற மாதிரி விரட்டிட்டுப் போயிடுவேன்" என்று நறுமுகை சொல்ல,
அப்பொழுது தான் ரிதன்யா அங்கே வந்ததைக் கவனித்த மித்ரா, "விரட்ட முடியலையே..." என்று மித்ரா கொதிப்புடன் ரிதன்யாவைப் பார்த்துச் சொன்னாள்.

மகளின் பார்வை ரிதன்யாவின் முகத்தை எட்டிவிட்டு வந்ததைக் கவனித்த நடராஜனுக்குப் ரிதன்யா தான் மகனிடம் என்னவோ கதைத்து இருக்கிறாள் எனக் பாதி உண்மை புரிந்ததும், “இங்கே என்ன நடக்குது? யார் உன்கிட்ட அப்படிப் பேசினது?” என்று மித்ரனிடம் ஆவேசமாகக் கேட்டார்.

ஆனந்தியோ, யாழினி குடும்பத்துக்கு முன்னால் சண்டை ஏதும் வந்துவிடுமோ என்று கையைப் பிசைந்தபடி நின்றார்.

யாழினி குடும்பத்திற்கும் நடராஜனின் ஆவேசமான குரலைக் கண்டு பீதியானது. யாழினி தன் தந்தையிடம் மெதுவாக, "இப்பதான்பா கொஞ்சம் கொஞ்சமாக உண்மையெல்லாம் வெளிவந்து ஒருத்தியோட முகத்திரை கிழிஞ்சிட்டு இருக்கு...கல்யாணத்துக்கு முதல் முழுவதும் கிழிஞ்சால் ஒரு நல்லவரோட வாழ்க்கை காப்பாற்றப்படும்" என்றாள்.

மித்ரனோ பதில் சொல்லாமல் அண்ணாவையும் ரிதன்யாவையும் கண்டு வார்த்தைகளை மென்று விழுங்கப் பார்க்க, நடராஜன் நேரடியாகவே ரிதன்யாவிடம் “நீதான் என் பிள்ளையிடம் அப்படிச் சொன்னதா? நீ படித்த பெண், என் பையன் காதலித்த பெண் என்றுதான் என் பெரிய பையனுக்குக் கல்யாணம் பண்ணப் போனால் போகட்டும்னு விட்டிருக்கேன். இப்படிக் முட்டாள் தனமாகப் பேசிக்கிட்டு இருந்தது தெரிந்திருந்தா, இந்த நிமிடமே உன் கல்யாணத்தை நிறுத்திட்டு, என் பையனுக்கு வேறு பொண்ணோட அதே மண்டபத்தில் கல்யாணம் பண்ணி வைச்சிட்டுப் போயிட்டே இருப்பேன்!” என்று கட்டுக்கடங்காத கோபத்துடன் பாய்ந்தார்.

ரிதன்யாவோ தன் பிடிக்குள் சகாயன் இருக்கும் திமிரில், அப்பொழுதும் நடராஜனைத் தெனவெட்டாகப் பார்த்து நின்றாள். அதில் இன்னும் சினமடைந்த நடராஜன் சகாயனைக் கூர்மையாகப் பார்த்து, “நான் சொன்னால் கேட்பாய் தானே?” என்று கேட்டார்.

ரிதன்யா தன் தம்பியை அவமானப்படுத்திய விஷயம் புரிந்ததும் சகாயனுக்கும் கோபம் ஏற்பட, “ஓம்பா...” என்று சாதாரணமாகத் தந்தையிடம் பதிலளித்தவன், அங்கே அதிர்ந்து நின்ற ரிதன்யாவையோ மற்றவர்களையோ சட்டை செய்யாமல், மித்ராவைப் மட்டும் தனியே கூட்டிக் கொண்டு சென்றவன், “ரிதன்யா வேற ஏதும் உங்களிடம் இப்படிப் பேசினாளா?” என்று கேட்டான்.

மித்ராவுக்கு யாழினியைப் போல ஒருத்தி மித்ரனுக்குத் துணையாக வரும்போது, ரிதன்யா போல ஒருத்தி தன் அண்ணனுக்கு மனைவியாக வருவதைச் சற்றும் பிடிக்கவில்லை.

ரிதன்யா தங்களைத் தனியாக இருக்கும்போது, தங்களை ஏதோ சாப்பாட்டுக்கு காசுக்கு வழியில்லாதது போல தாங்கள் அண்ணாவோடு வந்திருப்பது போலக் கதைத்தது, ஒரு காதலர்களுக்கு இடையில் இப்படி கரடி போல வந்திருக்கிங்களே உங்களுக்கு கொஞ்சம் கூட மெனஸ் இல்லையா என்று கேட்டது. இப்படி இன்னும் பலதும் சொன்னவள் எப்படித் தன்னையும் மித்ரனையும் நடத்தினாள் என்பதைப் பற்றி முழுவதுமாகச் சொல்லிவிட்டவள், "அண்ணா இவ வேணாம்டா... உன் வாழ்க்கை நல்லாயிருக்காது" என்று சொல்லி அழுதாள்.

காதலித்துத் தொலைத்தவளை முழுதாக வெட்டிவிட மனமில்லாமல், அவளைத் திருத்த எண்ணிய சகாயன், "நான் பார்த்துக்கிறேண்டா... நீ எதையும் யோசிக்காமல் சந்தோசமாக இரு" என்று சொல்லிவிட்டு வந்தான். தான் சொன்னவற்றையெல்லாம் கேட்டுவிட்டு எதுவுமே எதிர்வினையாற்றாமல் போகும் அண்ணாவைக் கண்டு மித்ரா தான் திகைத்து நின்றாள். அவளுக்கு உண்மையெல்லாம் சொல்லிவிட்டால் சகாயன் ரிதன்யா பக்கம் போகமாட்டான் என்று எண்ணியே சொன்னாள். அப்படியிருக்க சகாயன் சதாரண விசயம் போலக் கடந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை.

சகாயன் குடும்பத்தினர் கூடி நின்ற இடத்திற்கு வந்து பார்க்க, “ரிதன்யா கோபத்துடன் கிளம்பிப் போய்விட்டாள்" என்று மித்ரன் சொன்னான்.

நெடுமாறன் நடராஜனைச் சமாதானம் பண்ணிக்கொண்டிருக்க, ஆனந்தி கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தார். பூங்குழலியும், யாழினியும், நறுமுகையும் அவரைச் சமாதானம் செய்து கொண்டிருந்தார்கள்.

தன் இரு மகன்களுக்கும் திருமணம் என்று மகிழ்ச்சியோடு வந்த தாயும் தந்தையும், இப்போது வாடிய முகத்துடன் இருப்பதைப் பார்த்து சகாயன் மனம் வருந்தி, “சரி, வந்த வேலை முடிஞ்சால் எல்லோரும் போய்ச் சாப்பிடுவோம்" என்ற சகாயனை மித்ரன் திகைத்துப் பார்த்தான்.

“என்னடா?” என்று சகாயன் கேட்க, ‘நீ ரிதன்யாவின் பின்னால் நாய்க்குட்டி போலச் சென்றுவிடுவாய் என்று நினைத்தேன்’ என்பதை வாய்விட்டுச் சொல்ல முடியாமல், “நீ கோவிச்சிட்டுப் போனவங்களைச் சமாதானப்படுத்தப் போகலையா?” என்று கேட்டான் மித்ரன்.

“இதில் என் தப்பு என்ன இருக்கு? அவதானே தப்பாப் பேசினது... இன்னைக்கு முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்திருக்கா... அவ வந்து மன்னிப்பு கேட்கட்டும். நீ இன்னைக்கு எல்லோருடனும் மதியம் சாப்பிடப் பிளான் பண்ணினாய் தானே? வா சாப்பிடப் போவோம்" என்றவன், அழுகையைத் துடைத்துக்கொண்டிருந்த தன் தாயிடம் சென்றான்.

“அம்மா... கல்யாணத்துக்குப் புடவை வாங்க வந்த இடத்துல எதுக்கு அழுதிட்டு இருக்கீங்க? கண்ணைத் துடைங்க. உங்க மருமகள் குடும்பத்தைச் சாப்பிடக் கூப்பிடுங்க. இப்படி அழுது அவங்களைப் பயப்படுத்தாதீங்க" என்று தன் அன்னையின் கண்ணீரைத் துடைத்துவிட்டவன், அவர் தன் பெரிய மகனின் கல்யாணம் நடக்குமா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருப்பதைக் கண்டவன், "பார்த்துக்கலாம் வாங்க" என்று அவரை இருக்கையிலிருந்து எழுப்பியவன், "யாழினி, நறுமுகை... அம்மாவைக் கூட்டிட்டு வாங்க, நான் போய் காரை எடுத்திட்டு வறேன்" என்று கூறிச் சென்றான்.
 
Previous thread
Next thread

Latest threads

Top Bottom