பயண அலுப்பு இருந்தாலும் புது இடம் என்பதாலோ என்னவோ தூக்கம் அவளின் அருகில் கூட வர மாட்டேன் என்று அடம்பிடித்தது.
அதனால் படுக்கையை விட்டு எழுந்தவள் பால்கனியில் சற்று நேரம் நின்று விட்டு வரலாம் என்று அதன் கதவை திறந்து கொண்டு அங்கே சென்றாள்.
அதே நேரம் பக்கத்து அறை பால்கனியில் நின்று கொண்டிருந்தான் கவியுகன்.
இரண்டு பால்கனியும் அருகருகே இருக்க, நடுவில் இடுப்புயர சுவர் இருந்தது.
அவனைக் கண்டதும் ஏதோ பேசப் போனவள், சட்டென்று வாயை மூடிக் கொண்டாள்.
அவள் அங்கே வந்ததைக் கூட உணராது, வீட்டை சுற்றிலும் இருந்த தோட்டத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் கவியுகன்.
அவன் பார்வை சென்ற திசையில் அவளும் பார்க்க, அவளின் பார்வையில் இருட்டை தவிர ஒன்றும் புலப்படவில்லை.
“யுகா…” என்று மெதுவாக அழைத்து அவனின் கவனத்தைக் கலைத்தாள்.
“ஷ்ஷ்! கொஞ்ச நேரம் அமைதியா இரு அனன்யா…” அவளின் பக்கமே திரும்பிக் கூடப் பார்க்காமல் குரல் மட்டும் கொடுத்தவன் கண்கள் இருட்டுக்குள் எதையோ துழாவியது.
சிறிது நேரத்துக்குப் பிறகு அவளின் புறம் திரும்பியவன், “என்ன அனன்யா தூக்கம் வரலையா?” என்று கேட்டான்.
“அதெல்லாம் இருக்கட்டும். நீங்க அந்த இருட்டுக்குள் என்ன தேடினீங்க யுகா?” என்று கேட்டாள்.
“அதோ அங்கே ஒரு தென்னை மரம் தெரியுது பார்…” என்று சுட்டிக் காட்டியவன், “அந்த மரத்துக்குப் பின்னாடி யாரோ நிக்கிற மாதிரி இருந்தது. அதான் என்ன என்று பார்த்தேன்…” என்றான்.
“என்ன யுகா சொல்றீங்க?” என்று கேட்டவள், தானும் அந்தத் தென்னை மரத்தை பார்த்தாள்.
நிலா வெளிச்சத்தில் அதன் உயரம் தெரிந்ததே தவிர, மரத்தடியைப் பார்க்க முடியவில்லை. தென்னை மரத்தை சுற்றி வேறு மரங்கள் அடர்த்தியாக இருந்ததால், இருட்டு மட்டுமே கண்களுக்குத் தெரிந்தது.
“ஒன்னும் தெரியலையே யுகா…” என்றாள்.
“நான் பால்கனி கதவை திறந்து வந்தப்ப, அந்த மரத்துக்குப் பின்னாடி அசைவு தெரிந்தது. ஆனால் நான் கவனித்துப் பார்க்கவும், அசைவு நின்று விட்டது. நீ இப்போ கதவை திறந்து வந்ததும், மீண்டும் அந்த அசைவு இருந்தது. யாராக இருக்கும் என்று தெரியலை…” என்றான் யோசனையுடன்.
“ஓ! ஒருவேளை இந்த வீட்டில் வேலை செய்றவங்களா இருக்குமோ?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.
“காவலுக்கு நிக்கிற ஆள் வாசல் கிட்ட தான் நிற்கிறான். அதையும் பார்த்தேன். ஆனா ஆள் அசைவு ஆப்போசிட்ல தெரிந்தது…” என்றான்.
“புது ஆள்னா நாய் குலைச்சிருக்குமே யுகா. இந்த வீட்டு நாய் அமைதியா இல்லை இருக்கு…” என்றாள்.
“ம்ம், அதுவும் காவல்காரன் பக்கத்தில் தான் இருக்கு…” என்று யோசனையுடன் சொன்னவன், “சரி, நீ உள்ளே போ. காலையில் என்ன என்று பார்க்கலாம்…” என்றான்.
அவள் அவன் சொன்ன திசையில் பார்த்துக் கொண்டே தயங்கி நிற்க, “இங்கே நிற்காதே அனன்யா. உள்ளே போ. உனக்கு ஏதாவது வித்தியாசமாகப் பட்டால் என்கிட்ட சொல்லு. நீயா எதுவும் செய்யாதே!” என்றான்.
‘சரி’ என்று தலையை ஆட்டியவள், உள்ளே சென்று பால்கனி கதவை மூடிய பிறகும், யோசனையுடன் அங்கேயே நின்றிருந்தான் கவியுகன்.
அதன் பிறகு மரத்தின் பக்கம் எந்தச் சலனமும் இல்லாமல் போகத் தானும் அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.
அவன் உள்ளே சென்ற மறுகணம், அந்த மரத்தின் பின்னாலிருந்து மெல்ல ஒரு உருவம் அங்கிருந்து நகர்ந்து சென்றது.
***
வீடு முழுவதும் சோதனை செய்தும், ஒன்றும் திருட்டு போகவில்லை என்று தெரிய வர, வந்தவன் எதற்கு வந்திருப்பான் என்று புரியாமல் மூவரும் குழம்பி போயினர்.
இரவு முழுவதும் சரியாக உறங்காமல் அந்த இரவை கடந்து, விடிந்ததும் முதல் வேலையாக மாடிக்கு சென்று பார்த்தான் கவியுகன்.
மாடி முழுவதும் சுற்றி வர, எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இரவு ரவீந்திரன் சுட்டிக் காட்டிய சுவர் பக்கமாகக் குனிந்து பார்க்க, அந்தப் பக்கம் கீழே வரை பைப் லைன் சென்றது.
அதன் வழியாக இறங்கி தப்பிச் சென்றிருப்பான் என்ற முடிவுக்கு வந்து அந்தப் பைப்பை பார்த்துக் கொண்டிருந்த போது தான், பைப் கம்பியில் ஏதோ துணி போல் சடசடத்துக் கொண்டிருந்ததைக் கண்டான்.
நீல நிறத்தில் சின்னத் துணி எதில் இருந்தோ கிழிந்து மாட்டிக் கொண்டிருந்தது.
சற்று குனிந்து கையை நீட்டி அந்தக் கம்பியில் சிக்கியிருந்த துணியை எடுத்தான் கவியுகன்.
அந்தத் துணியை ஆராய்ச்சியாகப் பார்க்க, துணியின் ஒரு பக்கம் வெறுமையாக இருக்க, இன்னொரு பக்கம் N என்ற ஆங்கில எழுத்து எழுதப்பட்டிருந்தது.
“N?” என்று வாய் விட்டு சொல்லிப் பார்த்துக் கொண்டவன் அருகில் வந்தாள் அனன்யா.
“என்ன அது யுகா?”
“நேத்து வந்தவன் பைப் வழியாக இறங்கும் போது இந்தத் துணி மாட்டி கிழிந்திருக்கும் போல?” என்று சொல்லி அவள் கையில் அந்தத் துணியைக் கொடுத்தான்.
“N என்று எழுதி இருக்கே? யாரோடதாக இருக்கும் யுகா?”
கவியுகன் தோளை குலுக்கிக் கொண்டான்.
“நவநீதனாக இருக்குமோ யுகா?” யூகித்துக் கேட்டாள் அனன்யா.
“அதே சந்தேகம் எனக்கும் இருக்கு. ஆனால் அவன் எதுக்கு இங்கே வரணும்?” என்று நெற்றி சுருக்கி அவன் கேட்டுக் கொண்டிருந்த போதே, அவனின் அலைபேசி அழைத்தது.
“ஹலோ தியாகு…” அழைப்பை ஏற்றுக் கேட்டான்.
“நீங்க விசாரிக்கச் சொன்னதை விசாரித்தேன் சார். நீங்க சொன்ன நவநீதன் இதயா இறந்த அன்று திருச்சி வரலை…” என்றான் தியாகு.
“அவன் சொன்ன கல்யாணம் நடந்தது உண்மையா?”
“அந்தக் கல்யாணம் உண்மை தான் சார். ஆனால் அந்தக் கல்யாணத்துக்குப் போயிருந்ததாகச் சொன்ன நவநீதன் மட்டும் அங்கே வரலை…”
“உறுதியான தகவல் தானே?”
“ஹண்ட்ரெட் ப்ரசென்ட் சார்…” என்றான் உறுதியாக.
“ஓகே தியாகு. தேங்க்யூ. நான் அப்புறம் பேசுறேன்…” என்ற கவியுகன், அனன்யா கையில் இருந்த N என்ற எழுத்துப் பொறிக்கப் பட்ட துணியைப் பார்த்துக் கொண்டே, “N ஃபார் நவநீதன்?” என்று வாய் விட்டு சொல்லிப் பார்த்துக் கொண்டான்.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
Reviews
There are no reviews yet.