Only logged in customers who have purchased this product may leave a review.
பாலையில் பனித்துளி
பாலையில் பனித்துளி — Preview
மீண்டும் கதவு தட்டப்பட்டதில், ‘காலிங்பெல் அடிக்காமல் யாரது கதவை தட்டிக் கொண்டிருப்பது?’ என்று எரிச்சலுடன் முணுமுணுத்தபடி படுக்கையறையை விட்டு எழுந்து வந்தான்.
அதற்குள் பொறுமையற்று மீண்டும் கதவு தட்டல்! அவனின் பொறுமை போய்க் கொண்டிருந்தது.
விருட்டென்று வந்து கதவை திறந்தவன், கண்களில் விழுந்த உருவத்தைப் புருவத்தைச் சுருக்கிப் பார்த்தான்.
“அங்கிள்… ப்ளீஸ்… ஹெல்ப்…” என்று தேம்பி தேம்பி அழுதபடி, திக்கி திணறி கேட்டு தன் வீட்டின் பக்கம் கையைக் காட்டிக் கொண்டிருந்தாள் ரஞ்சனாவின் மகள் ஹரிணி.
அவர்கள் வீட்டுப்பக்கம் பார்வையை ஓட்டியவன், ஒன்றும் புரியாமல் குழந்தையைப் பார்த்தான். அழுகையுடனே அவள் பேசியது அவனுக்குப் புரிந்திருக்கவில்லை.
“என்னாச்சு பாப்பா? என்ன கேட்குற?” என்று அவன் சாவகாசமாகக் குழந்தையிடம் விசாரிக்க,
“அம்மா… எழுப்பினேன்… எழலை…” என்று அவள் மீண்டும் அழுது கொண்டே சொல்ல, அப்போதும் அவனுக்குப் புரியவில்லை.
அவனுக்குச் சொல்லி புரிய வைக்க முடியாத குழந்தை, அவன் கையைப் பிடித்து இழுத்து, “அம்மா… எழலை… வாங்க… ஹெல்ப்…” என்று கோர்வையாக இல்லாமல் பேசி அவனைத் தங்கள் வீட்டுக்கு அழைத்தாள்.
ஏதோ உதவி தேவை என்று அவனுக்கு இப்போது புரிந்தது. ஆனாலும், குழந்தையின் பின்னால் செல்ல யோசித்தான்.
அதே நேரம் திறந்திருந்த கதவினூடே பரத்தின் அழுகையும் கேட்டது.
பிள்ளைகளின் அழுகை மனத்தைப் பிசைவது போல் இருக்க, அதற்கு மேல் தாமதிக்காமல் ரஞ்சனாவின் வீட்டிற்குள் சென்றான்.
வரவேற்பறையையும் தாண்டி அவனைப் படுக்கை அறை பக்கம் குழந்தை அழைத்துப் போக, அங்கே செல்ல முடியாமல் தயக்கத்துடன் நின்றான்.
அவனின் சங்கடம் புரியாமல் குழந்தை அவனை உள்ளே அழைக்க, “நீ அம்மாவை கூப்பிடு…” என்று குழந்தையின் கையை விலக்கிவிட்டான்.
அறைக்குள் ஓடிய ஹரிணி, “அம்மா… அம்மா…” என்று அழைப்பதும், ரஞ்சனாவிடமிருந்து அதற்கு எந்த வித எதிர்வினையும் வராமல் இருப்பதையும் கவனித்தாலும், அவனால் தயங்காமல் உள்ளே செல்ல முடியவில்லை.
குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் பெண்ணல்லவா ரஞ்சனா. அந்தத் தயக்கம் அவனுக்கு.
“ஏங்க, ரஞ்சனா… என்னாச்சு உங்களுக்கு?” என்று வெளியே நின்றபடியே குரல் கொடுத்தான்.
உள்ளே இருந்து ஹரிணிதான் மீண்டும் அவனிடம் ஓடி வந்தாள்.
“அங்கிள்… அங்கிள்… அம்மா… அம்மா…” என்று அவள் என்ன சொல்வது என்று அறியாமல் அழ ஆரம்பிக்க, தன் தயக்கத்தைச் சற்று உதறிவிட்டு உள்ளே சென்றான்.
அங்கிருந்த சூழ்நிலை அசாதாரணமாக இருந்தது.
கட்டிலுக்குக் கீழ் விழுந்து கிடந்தாள் ரஞ்சனா. அவளின் கால்களும், கைகளும் கோணல்மானலாகக் கிடக்க, முகம் ஒரு பக்கமாகத் திரும்பியிருக்க, உதட்டினோரம் வெள்ளையாய் நுரை போல் இருந்தது.
அவள் அருகில் அமர்ந்திருந்த பரத் அன்னையின் மார்பில் தலையைச் சாய்த்து, தன் பிஞ்சு கையால் அவளின் முகத்தை வருடி எழுப்ப முயன்று கொண்டிருந்தான்.
ரஞ்சனாவின் இரவு உடை கீழே கெண்டைக்கால் தெரிய ஏறியிருக்க, அவன் உள்ளே வந்ததும், அந்தச் சூழ்நிலையிலும் பொறுப்பாக அன்னையின் உடையை ஹரிணி கீழே இழுத்து சரி செய்து விட்டதைக் கண்டவன், மனத்துக்குள் மெச்சி கொண்டான்.
மேலும் எதையும் சிந்திக்க முடியாமல் சூழ்நிலை உறைக்க, தண்ணீர் எடுத்து வந்து ரஞ்சனாவின் முகத்தில் தெளித்துப் பார்த்தான்.
அப்போதும் ரஞ்சனாவின் மயக்கம் தெளியாமல் இருக்க, ஹரிணியின் அழுகை கூடியது. பரத் நடப்பது புரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான்
*****
அவனைப் பார்த்துக் கொண்டே அருகில் சென்றவள், “சார், காஃபி…” என்று குரல் கொடுத்தாள்.
அதில் கலைந்தவன், “தேங்க்ஸ் ரஞ்சனா…” என்று சொல்லி வாங்கிக் கொண்டதும், அறையை விட்டு செல்லப் போனவளை, “ரஞ்சனா, ஒரு நிமிஷம்…” என்று நிறுத்தினான்.
“சார்?” என்றபடி, அவள் கேள்வியுடன் நிற்க,
“இதுக்குத்தான் நிற்கச் சொன்னேன். சார் எதுக்கு? வேண்டாமே…” என்றான்.
“சார், அது வந்து…” அவள் தயங்க,
“இந்த வீட்டோட, இந்த உறவோட ஒன்றணும்னு நினைக்கிறேன் ரஞ்சனா. ஹரிணியோட அங்கிள் மட்டுமில்லை, உங்க சார் என்ற அழைப்பும் என்னை இந்த வீட்டை விட்டு தள்ளி நிறுத்துது. ஹரிணி சின்னப்பிள்ளை. அவளுக்குப் புரியும் போது புரியட்டும்னு விட்டுட்டேன். ஆனால், உங்களுக்கு?” என்றவன், அப்படியே நிறுத்திவிட,
‘உனக்கே புரிய வேண்டாமா?’ என்று அவன் கேட்பது போல் இருந்தது.
“சார்…” என்றவளுக்கு அடுத்த வார்த்தை வரவில்லை.
“இது…” என்று பிரதாபன் ஆட்சேபனையாக ஆரம்பித்த போது, லேசாகச் சிணுங்கிக் கொண்டே புரண்டு படுத்தான் பரத்.
“பரத்… பரத் எழுந்துட்டான்…” என்ற ரஞ்சனா, கட்டிலில் பிரதாபன் அமர்ந்திருந்ததால் அவனைத் தாண்டி சுவரோரமாகப் படுத்திருந்த மகனைத் தூக்க முடியாமல், தடுமாறி நின்றாள்.
“நான் தூக்குறேன். நீங்க போய் அவனுக்குப் பால் எடுத்துட்டு வாங்க…” என்று கையிலிருந்த காஃபி கப்பை மேஜையின் மீது வைத்துவிட்டு, எட்டி பரத்தை தூக்கிக் கொண்டான்.
ரஞ்சனா தயக்கத்துடன் அங்கிருந்து நகர, “பரத் கண்ணா, குட் மார்னிங்…” என்று சொல்லிக் கொண்டே தூக்க கலக்கத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்த பரத்தின் நெற்றியில் முட்டினான்.
பிரதாபனை தன் வீட்டில் பார்த்ததும் முதலில் புரியாமல் முழித்த பரத், பின் மலர்ந்து சிரித்து, அவனின் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டே, “அம்மா… காணோம்?” என்று கேட்டான்.
“அம்மா வேணுமா? அதோ அம்மா வந்தாச்சு?” என்று அறைக்குள் கையில் பால் சிப்பருடன் நுழைந்தவளை காட்டினான்.
“அவனை என்கிட்ட கொடுத்துட்டு நீங்க உங்க காஃபியை குடிங்க சார். நான் அவனைப் பார்த்துக்கிறேன்…” என்று சிப்பரை கட்டிலில் வைத்து விட்டு, மகனை கேட்டு கையை நீட்டினாள்.
பிரதாபனும் பரத்தை அவளிடம் கொடுத்துவிட்டு தனது காஃபியை எடுத்து பருக ஆரம்பிக்க, மகனை குளியலறை தூக்கிச் சென்று சுத்தம் செய்து முகத்தைத் தண்ணீரால் துடைத்தபடி அழைத்துவந்து கட்டிலில் அமர்ந்து, மகனை மடியில் வைத்துக் கொண்டு சிப்பரை எடுத்துக் கொடுத்தாள்.
பரத் வேகமாகப் பருக ஆரம்பிக்க, தான் குடித்த காஃபி கப்பை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான் பிரதாபன்.
அதன் பிறகே நிம்மதியாக மூச்சை இழுத்துவிட்டாள் ரஞ்சனா.
பிரதாபன் இருக்கும் இடத்தில் அவளால் இலகுவாகவே இருக்க முடியவில்லை.
ஒரு நாளுக்கே இப்படி என்றால், வரும் காலம்? என்று நினைக்கும் போதே மூச்சடைத்தது.
பரத் பாலை குடித்த சிறிது நேரத்திலேயே ஹரிணியும் எழுந்துவிட, அவளையும் அழைத்துச் சென்று சுத்தம் செய்து அழைத்து வந்தாள்.
“அம்மா, பசிக்குது…” என்று ஹரிணி வயிற்றைத் தடவ,
“அம்மா உனக்குப் பாலை ஆற வச்சுருக்கேன். வா கிச்சன் போய்க் குடிக்கலாம்…” என்று இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சமையலறை வர, அங்கே வேலை செய்து கொண்டிருந்த பிரதாபனை எதிர்பார்க்காமல் அப்படியே நின்று விட்டாள்.
“ஹய், அங்கிள்… நீங்களா சமைக்கிறீங்க?” அவனைக் கண்டதும், துள்ளிக் கொண்டு போய் அவனின் காலை கட்டிக் கொண்டாள் ஹரிணி.
“பாப்ஸ் எழுந்தாச்சா? குட் மார்னிங்…” என்று சொல்லிக் கொண்டே தன் காலைக் கட்டியிருந்தவளை தூக்கி சமையல் மேடையில் அமர வைத்தவன், “சமைக்கலைடா பாப்ஸ். காய் எல்லாம் வெட்டி வச்சேன்…” என்றான்.
ரஞ்சனா சமையலுக்கு எடுத்து வைத்திருந்த காயை எல்லாம் அவன் வெட்டி வைத்திருந்தான்.
“நான் வந்து செய்திருப்பேனே சார். உங்களுக்கு எதுக்குச் சிரமம்?” என்று தயக்கத்துடன் கேட்டபடி, மகனுடன் வந்தாள்.
“இதென்ன சிரமம்? நான் வழக்கமா செய்ற வேலைதான். நீங்க பிள்ளைகளைப் பார்த்துக்கோங்க. நானே சமையலை முடிச்சிடுறேன். இன்னைக்கு என் சமையலை சாப்பிட்டு பாருங்க…” என்றான்.
“இல்லை… இல்லை… வேணாம் சார்…” என்று ரஞ்சனா வேகமாக மறுக்க,
“அச்சோ! அம்மா, அங்கிள்தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார்ல… நீ அவரைச் சார்னு சொல்லக் கூடாதுமா…” என்று ஹரிணி மழலையில் சொல்லி, ஏதோ நகைச்சுவையைச் சொன்னது போல் கிங்கிணி நாதமாய்ச் சிரித்தாள்.
பிரதாபனும், ரஞ்சனாவும் சட்டென்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அதிலும் ரஞ்சனாவின் முகத்தில் என்ன உணர்வை காட்டுவது என்று அறியா திகைப்பு!
பிரதாபன் முகத்தில் மென்புன்னகை.
மேலும் படிக்க ப்ரீமியம் பிளான் வாங்கவும்!
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
பாலையாய் வறண்டு போயிருக்கும் இரு நெஞ்சங்களின் கதை தான் இது!
என்னதான் நாகரீகம் வளர்ந்து, பல முன்னேற்றங்களை மக்கள் சந்தித்திருந்தாலும் ‘மறுமணம்’ என்ற ஒன்றை எல்லோராலும் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
அதிலும் இரு சிறு குழந்தைகளின் தாய் இரண்டாவது திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கவே தயக்கம் காட்டுவதும் உண்டு.
சொந்தங்களின் ஆதரவு இல்லாமல், இரு சிறு குழந்தைகளுடன் தனி மனுஷியாய் போராடும் இளம் விதவையின் பாலைவன வாழ்க்கையில் பனித்துளியாய் நுழைகிறான் நாயகன். அவனை அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்ததா? என்பதைக் கதையில் காணலாம்.
இந்தப் பக்கத்தில் உள்ள கதை / புத்தகம் ©Ezhilanbu அவர்களின் முழு காப்புரிமைக்கு உட்பட்டது.
❌ அனுமதி இல்லாமல் நகலெடுக்க, Screenshot எடுக்க, PDF / Audio / Video வடிவில் பகிர கடுமையாகத் தடை செய்யப்படுகிறது.
⚖️ மீறல் கண்டறியப்பட்டால், Copyright Act படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Related products
-
ஜீவசுரபி
Rated 5.00 out of 5 -
மனதோடு உறவாட வந்தவளே
Rated 5.00 out of 5


Reviews
There are no reviews yet.