மனம் கொய்த மாயவனே
மனம் கொய்த மாயவனே — Preview
அவள் அப்படி நின்றதில் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி குறைய, அவளை விட்டு வேகமாக விலகி நின்றவன் “உன்னைப் போனு சொன்னேன்…” வார்த்தையில் அனல் பறக்க கத்தினான்.
“போறேன்யா போறேன். ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட பேச வேண்டியதைப் பேசிடுறேன்…” என்றவள் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்.
“நீ சொன்ன மாதிரி எனக்கு உரிமை இல்லை தான் வெற்றி ஒத்துக்கிறேன். ஆனா அந்த உரிமையை நான் உன்கிட்ட இருந்து எடுத்துக்க விரும்புறேன்னு சொன்னா நீ என்ன செய்வ வெற்றி?” என்று அழுத்தமாகக் கேட்டவளை அவன் அசந்து தான் பார்த்தான்.
ஆனால் அது ஒரு நொடி தான். அடுத்த நொடி வெற்றியின் முகம் செந்தணலாக மாறியது.
“யாருக்கு எந்த உரிமையைக் கொடுக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். என்கிட்டே இருந்து எந்த உரிமையையும் அவ்வளவு சீக்கிரம் யாராலயும் எடுத்துக்க முடியாது…” என்ற வெற்றியின் வார்த்தைகளில் அல்லியின் முகம் கசங்கிப் போனது.
அதைக் கண்ணுற்றாலும், அவளை உக்கிரமாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனின் உக்கிரப் பார்வையை அலட்சியப்படுத்தியவள், முன்பை விடத் தீர்க்கமாகப் பார்த்து, “பார்ப்போம்யா பார்ப்போம். உரிமையை நீ கொடுக்கிறியா? இல்லை நானா எடுத்துக்கிறனானு பார்ப்போம்…” என்றாள்.
அவளின் தைரியத்தைப் பார்த்துப் புருவங்களை விரித்துச் சுருக்கினான்.
“சும்மா போகும் போதும், வரும் போதும் சைட் அடிச்சுட்டு இருந்தவ, இப்போ என்ன இப்படி எல்லாம் பேசுற? சைட் அடிக்கிறவனை எல்லாம் இப்படித்தான் உரிமையா நினைப்பியா என்ன?” என்று கடுமையாகவே கேட்டான்.
அவனின் அந்தக் கடுமையான பேச்சு அவளை வாயடைத்துப் போக இருந்தது.
‘என்ன வார்த்தை கேட்டு விட்டான்?’ என்று துடித்துப் போய் அவனைப் பார்த்தாள்.
அவளின் கண்கள் சட்டென்று கண்ணீரில் மூழ்க ஆரம்பித்தன.
“என்னை அப்படிப்பட்டவளா நீ நினைக்கிறாயா வெற்றி? இதுவரை நான் எத்தனை ஆம்பளங்களை உன்னைப் பார்த்தது மாதிரி ஆர்வமா பார்த்து இருக்கேன்? அப்படி நான் பார்த்ததை நீ பார்த்திருந்தால் கணக்கு சொல்லேன். நானும் தெரிஞ்சுக்கிறேன்…” என்று வலி நிறைந்த குரலில் கேட்டாள்.
அவளின் வலியைப் பிரதிபலித்த பேச்சையும், கலங்கி நின்ற கண்களையும் சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி.
அவன் அப்படி உணர்ச்சிகள் அற்றுப் பார்த்தது இன்னும் தான் அவளை வலிக்க வைத்துக் கொண்டிருந்தது.
“நீ இப்படி மட்டமா நினைச்சுப் பேசும் போது கூட, என் மனசு ஏனோ உன்னைத்தான் சுத்தணும்னு எடுத்துச் சொல்லிட்டே இருக்கு வெற்றி. அவன் அப்படிக் கேட்கிறானே உனக்குச் சூடு சொரணையே இல்லையானு ஒரு மனசு ஒரு ஓரமாக இருந்து முணுமுணுக்குது.
ஆனாலும் அதை எல்லாம் தள்ளி வச்சுட்டு அவனுக்கு எடுத்துச் சொல்லு. அவன் தான் உனக்கு எல்லாம்னு எனக்குத் தோணிகிட்டே இருக்கு வெற்றி. அதை என்னால் மீற முடியலை…” என்றாள் கரகரப்பான குரலில்.
வெற்றியிடம் எந்த மாற்றமும் இல்லை.
‘அழுகிறாயா, அழுது கொள்! பேசுகிறாயா, பேசிக் கொள்!’ என்ற பாவனையில் உணர்ச்சிகளற்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இதோ… நீ என்னை இப்படிக் கருங்கல்லு மாதிரி பார்க்கும் போதும் உன்கிட்ட என் மனசை சொல்லியே ஆகணும்னு என் மனசு சொல்லுது. உன்னைப் பார்த்த மாதிரி என் மனசறிஞ்சு வேற எந்த ஆம்பளையையும் நான் பார்த்தது இல்லை வெற்றி.
உன்னை மட்டும் நான் ஏன் அப்படிப் பார்த்தேன்னு எனக்கே தெரியாது. உன்னை முதல் முதலா பார்த்த நாளில் இருந்து ஒரு உந்துதல் எனக்குள்ள வந்திருச்சு. உன்னை அப்படிப் பார்க்கக் கூடாதுனு என் கண்ணை நான் கட்டுப்படுத்திக்க நினைச்சாலும் என்னால முடியலை.
உன்னை வேத்து மனுஷனா என்னால நினைக்க முடியலை. அதான் உரிமைப்பட்டவள் போலப் பார்த்திருக்கேன். இனிமேலும் பார்ப்பேன். என் ஆயுசு இருக்குற வரை பார்ப்பேன்.
ஆனா ஒன்னு மட்டும் எனக்கு உறுதியா தெரியும். இனி என் ஜென்மத்துக்கும் உன்னைத் தவிர வேற ஆம்பளையை உரிமையா பார்க்க மாட்டேன். நீ என்னை வேண்டாம்னு வெறுத்து ஒதுக்கினால் கூட…” என்று மடை திறந்த வெள்ளமாகத் தன் மனதைக் கொட்டி விட்டு அவனின் கண்களை ஊடுருவி பார்த்தாள்.
அவனின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை தான். ஆனால் அவனின் கண்கள்? அதில் ஏதோ வித்தியாசத்தைக் கண்டாள்.
ஆனால் அது என்ன விதமான வித்தியாசம் என்று அவளால் இனம் காண இயலவில்லை.
“நான் உன்னை இப்படி உரிமையா நினைக்கிறது போல நீயும் என்னை உரிமையா நினைக்கணும்னு எனக்கு நிறைய ஆசை இருக்கு.
நீ என்னோட வெற்றி! நீ என்னை மட்டும் தான் பார்க்கணும், நேசிக்கணும், ஸ்பரிசிக்கணும்! இப்படி நிறைய உன்கிட்ட நான் எதிர்பார்க்கிறேன்.
ஆனா உன் பேச்சும், செய்கையும் என்னைத் தள்ளி நிறுத்த முயற்சி பண்ணுது. ஆனா என்னால அது முடியலையே… நான் என்ன செய்யட்டும்?” என்று அவனிடமே கேட்டாள்.
“ஒன்னும் செய்ய வேண்டாம். முதலில் இடத்தைக் காலி பண்ணு…” என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி வாசலைக் கை காட்டினான்.
இவ்வளவு சொல்லியும் அவன் தன் மனதைப் புரிந்து கொள்ளவில்லையே? என்று வலியுடன் அவனைப் பார்த்தாள்.
தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.
“போய்டுறேன்…” என்று சொன்னவள் குரல் கரகரத்தது.
போகிறேன் என்றவள் அதற்கு மாறாக இன்னும் நன்றாகக் கதவில் சாய்ந்து நின்றாள். அப்போது தான் குளித்து வந்ததால் இன்னும் ஈரம் படிந்திருந்த அவனின் முகத்தையும், துவாலை மறைத்தும் மறைக்காமலும் இருந்த அவனின் மார்பையும் நிதானமாகப் பார்த்தாள்.
பின் மெதுவாக வெற்றியின் அருகில் வந்தவள் நீர் துளிகளைச் சுமந்திருந்த அவனின் மார்பில் மெல்ல தன் இரு கைகளையும் அழுத்தி ஊன்றி அவனின் உயரத்திற்குத் தன் கால்களை உயர்த்தியவள், அவனின் உதடுகளில் அழுத்தமாகத் தன் இதழ்களைப் பதித்திருந்தாள்.
அவள் தன்னருகில் வருவதை உணர்ந்து “ஏய்… என்ன?” என்று அவன் கேட்டு முடிக்கும் முன் இதழோடு இதழ் கலந்திருந்தாள் அல்லிராணி.
அவன் அதிர்ந்து அவளை விலக்கும் முன் தானே விலகியும் இருந்தாள்.
“என் மனசுக்குப் பிடிச்ச ஆம்பளைக்குக் கொடுக்குற முதல் முத்தம்! என் மனசில் இருக்குற ஒரே ஆம்பிளை நீ தான்னு உறுதிப்படுத்துற முத்தம்!” என்று காதலுடன் வெற்றியின் முகத்தைப் பார்த்துச் சொன்னவள் நிதானமாகக் கதவைத் திறந்து வெளியே சென்றாள்.
அல்லிராணியிடம் இப்படி ஒரு அதிரடி செயலை எதிர்பாராத வெற்றி, அவள் வெளியே சென்ற பிறகும் அசையாமல் அதிர்ந்து போய் நின்றிருந்தான்.
***
“ட்ரிங்க்ஸ் என்னைக்கு ஏற்பாடு பண்ணட்டும் கிருதி?” என்று கேட்டான் சந்துரு.
“அடுத்த வாரம் காலேஜ் டூர் போறப்ப அதைப் பார்ப்போமே சந்துரு?”
“காலேஜ் டூர் போறப்ப உனக்கு வேற புது ஐட்டம் அறிமுகப்படுத்துறேன் கிருதி. அதுக்கு முன்னாடியே ட்ரிங்க்ஸ் முடிச்சுடுவோம்…” என்றான் கண்கள் பளபளக்க.
“புது ஐட்டமா? அப்படி என்ன ஐட்டம் சந்துரு. உயர் ரக ட்ரிங்க்ஸா?”
“நோ… நோ… இந்த ஐட்டமே வேற. அது என்னென்னனு அப்புறம் சொல்றேன். இப்ப முதலில் ட்ரிங்க்ஸ் குடிக்க டேட் பிக்ஸ் பண்ணுவோம்…” என்றான்.
“வர்ற வெள்ளிக்கிழமை நான் வீட்டில் லேட்டாகும்னு சொல்லிட்டு வந்துடுறேன். அன்னைக்கே ஏற்பாடு பண்ணுங்க சந்துரு. ஆனா என்னால ரொம்ப நேரம் இருக்க முடியாது. அதுக்குத் தகுந்த மாதிரி ஏற்பாடு பண்ணுங்க…” என்றாள்.
“ஓகே கிருதி. பக்காவா ஏற்பாடு பண்ணிட்டு உனக்கு இன்பார்ம் பண்றேன்…” என்று சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றான் சந்துரு.
பின் விளைவுகளைப் பற்றிச் சிறிதும் யோசிக்காமல் சட்சட்டென்று முடிவெடுத்தாள் கிருதிலயா.
அவளுக்கு அப்போது நினைவில் இருந்தது எல்லாம் சந்துரு மூலமாகத் தான் ஒரு முறை செய்ய ஆசைப்பட்ட விஷயங்களைச் செய்து பார்த்து விடும் ஆர்வம் மட்டுமே.
அதைத் தாண்டி அதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி நினைத்துப் பார்க்க கூட மறந்து போனாள்.
அவளின் பருவ வயதும், ஆர்வக்கோளாறினால் உண்டான துடுக்குத்தனமும் வேறு எதையும் யோசிக்க விடவும் இல்லை.
‘சிகரெட்டை ஒரு முறை முயற்சி செய்து பார்த்துவிட்டு அதை விட்டுவிட்டது போல மற்றதையும் முயற்சி செய்து பார்க்க போகின்றேன் அவ்வளவே’ என்கிற அசட்டு எண்ணம் மட்டுமே அவளுக்கு இருந்தது.
சந்துருவுடன் பேசிவிட்டுக் கிருதிலயா வீட்டிற்குச் சென்ற போது அப்போது செழியனும் வீட்டில் தான் இருந்தான்.
“சரி இம்சை. போகலாம், இத்தோட இந்தப் பேச்சை விடு…” என்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கிருதி, “யாரு மாமா அந்த இம்சை?” என்று கேட்டாள்.
‘இரு பேசி முடிச்சுக்கிறேன்’ என்று இவளுக்கு ஜாடைக் காட்டியவன், “ம்ம் சரி. அடுத்த வாரம் நான் வெளியூர் போக வேண்டியது இருக்கும். போயிட்டு வந்து மீதியைப் பார்த்துக்கலாம். அதுவரை கொஞ்சம் அடக்கியே வாசி. நான் ஊருக்குப் போயிட்டு வந்த பிறகு வீட்டில் பேசலாம். கவலைப்படாதே! எல்லாம் நல்லபடியா நடக்கும். ஓகே, அப்புறம் பேசலாம். பை…” என்று பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
“யார்கிட்ட மாமா பேசின?” என்று கிருதி மீண்டும் கேட்க,
“ரத்னாகிட்ட தான்…” என்றான்.
“நீ ஊருக்குப் போறீயா மாமா? அதென்ன வீட்டில் பேசலாம்? வீட்டில் என்ன பேச போறீங்க?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.
“ஆமா, அடுத்த வாரம் வேலை விஷயமா வெளியூர் போறேன். வீட்டில் பேசப் போவது வேற விஷயம். அது உனக்குத் தேவையில்லை கிறுக்கி…” என்று அவளின் தலையில் தட்டியவன், “ஆமா, நீ என்ன இன்னைக்கு இவ்வளவு லேட்டா காலேஜில் இருந்து வந்திருக்க, ஏன்?” என்று கேட்டான்.
“இதுவும் தேவையில்லாத கேள்விதான் மாமா. நான் மட்டும் ஏன் உன்கிட்ட சொல்லணும்?” என்று கேட்டாள்.
“ஓகோ, பதிலுக்குப் பதிலா? நான் பெரியவன் உன்கிட்ட என்ன விஷயம் சொல்லணும், என்ன விஷயம் சொல்லக் கூடாதுன்னு எனக்குத் தெரியும். ஏட்டிக்குப் போட்டி பேசாம ஏன் லேட்டுன்னு சொல்லு…” என்று அதட்டினான்.
“பிரண்ட்ஸ் கூடக் காலேஜ் கிரவுண்ட்ல நின்னு பேசிட்டு வர்றேன். போதுமா? ச்சை, எப்போ பார் விசாரணை” என்று சலித்துக் கொண்டாள்.
“ஓவரா பேசாதே! உன் மேல இருக்குற அக்கறையில் தானே கேட்குறேன்” என்றான் மென்மையாக.
‘க்கும், உன் அக்கறையில் நான் சக்கரையா கரைஞ்சுட்டேன் போ. உன்னை எல்லாம் கட்டிக்கிட்டு நான் என்ன பாடுபடப் போறேனோ?’ என்று அவனுக்குக் கேட்காமல் அவளுக்குள்ளேயே முனங்கிக் கொண்டாள்.
“என்ன கிறுக்கி வாய்க்குள்ளயே முனங்குற?” என்று கேட்டான்.
“ம்ம்… உன்னைத் திட்டினேன்” எனச் சொன்னவள் பல்லை ‘ஈ’ என்று இளித்துக் காட்டினாள்.
“வர வர நீ சரியே இல்ல கிறுக்கி. ஒரு மார்க்கமா தான் இருக்குற. இடக்குமடக்கா எதுவும் செய்றீயா என்ன?” என்று ஆராய்ச்சியாக அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
‘உன் மேல தான் கிறுக்குப் பிடிச்சுப் போய்க் கிடக்கிறேன். ஆனா அதை இப்போதைக்கு உனக்குத் தெரிய விட மாட்டேனே. தெரிஞ்சா நீ சும்மா இருப்பியா என்ன? படிக்கிற வயசில் மனசை அலைபாய விடாதேன்னு அட்வைஸ் மழை பொலிவ.
காலேஜ் முடிக்கிற வரை நான் உன் மேல வச்சுருக்கிற காதலை காட்டிக் கொடுக்கவே மாட்டேன் மாமே…’ என்று மீண்டும் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவள் வெளியே நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு, “நான் என்ன செய்யப் போறேன் மாமா? எப்போ பார்த்தாலும் என்னைச் சந்தேகமா பார்க்கிறதே உன் வேலையா போச்சு” என்றாள்.
***
அந்தப் பெண் உள்ளே நுழைந்து வெற்றி கதவை மூடும் வரையில் மட்டுமே அதிர்ச்சியுடன் இருந்தாள் அல்லிராணி.
அடுத்த நொடி தலையைச் சிலிர்த்துக் கொண்டு உதறியவள் விரைந்து சென்று வெற்றியின் வீட்டுக் கதவைத் தட்டினாள்.
அல்லி தட்டிய சில நொடிகளுக்குப் பிறகு கதவைத் திறந்தான் வெற்றி.
“ஏய் ஆள் முழுங்கி, என்ன இந்த நேரத்தில்…” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவனைத் தாண்டிக் கோபமாக உள்ளே நுழைந்தவள் வீட்டிற்குள் இவளை எதிர்பாராமல் நின்றிருந்த பெண்ணையும், வெற்றியையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“நீ மாறிட்டன்னு நம்பினேனே வெற்றி?” சட்டென்று கோபம் போய் மரத்துப் போன குரலில் கேட்டாள்.
அவள் திடீரென வந்து நின்ற அதிர்ச்சி எல்லாம் சில நொடிகள் மட்டுமே. பின் சலனமே இல்லாமல் அவளைப் பார்த்தான்.
“ஏன் அந்த நம்பிக்கையில் இப்ப என்ன குறைஞ்சு போயிருச்சு?” என்று நிதானமாகத் திருப்பிக் கேட்டான் வெற்றி.
“கண்ணு முன்னாடி பார்த்த பிறகும் இப்படிக் கேட்க உனக்கு வெட்கமா இல்லை?” என்று அவனைப் பார்த்துக் கேட்டவள், அந்தப் பெண்ணை நோக்கி மேலிருந்து கீழ் வரை கை நீட்டிச் சுட்டிக் காட்டினாள்.
“அதான் கண்ணு முன்னாடி பார்த்துட்டியே. போ… போய்த் தூங்கு…” என்று சர்வசாதாரணமாகச் சொன்னவனை வெறித்தாள்.
“இனி நீ எனக்கு மட்டும் தான்னு சொன்னியே வெற்றி?” தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டானே என்ற ஆதங்கத்துடன் கேட்டாள்.
“சொன்னா சொன்னபடியே செய்யணும்னு சட்டமா இருக்கு?” அலட்சியமாகத் திருப்பிக் கேட்டான்.
‘எப்படி அலட்சியமாகப் பேசுகிறான்? இவனைப் போய் நம்பினேனே’ என்பது போல் அவனைப் பார்த்தாள்.
“இங்கே வந்து இந்த நேரத்தில் இப்படிப் பார்த்துக்கிட்டு நிற்காம முதலில் இடத்தைக் காலி பண்ணு…” என்றான் விரட்டுவது போல்.
“நீ ஒரு பொம்பளை பொறுக்கின்னு தெரிஞ்சும் நான் உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தினேன்ல அப்போ நீ இப்படித்தான் என்னை விரட்டுவ…” என்று அவன் சொன்னதைத் தாங்கமுடியாமல் ஆத்திரமாகக் கத்தினாள்.
“ஆமாடி, நான் பொம்பளை பொறுக்கி தான். நான் இப்படித்தான் இருப்பேன். என்னைக் கேள்வி கேட்க உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. உன் வேலையைப் பார்த்துட்டு முதலில் இங்கிருந்து போ…” என்று அவளிடம் கத்தியவன், அந்தப் பெண்ணின் புறம் திரும்பி, “நீ கிளம்பு…” என்றான்.
அந்தப் பெண் ஒரு நொடி தயங்கி அல்லியைப் பார்க்க, “அங்க என்ன பார்வை? கிளம்பு…” என்று அதட்டினான்.
விறுவிறுவென்று நடந்த அந்தப் பெண் அல்லியைத் தாண்டும் போது அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் ஏதோ முணுமுணுத்து விட்டுச் சென்றாள்.
அந்தப் பெண்ணை வெளியே போகச் சொன்ன வெற்றி, இன்னும் அங்கே நின்று கொண்டிருந்த அல்லியின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காதவன் போல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பியிருந்ததால் அந்தப் பெண் அவளிடம் ஏதோ சொல்லிச் சென்றதைக் கவனியாமல் போனான்.
வெற்றியிடம் சண்டையிட தயாராக நின்றிருந்த அல்லி, அந்தப் பெண் சொல்லிச் சென்றதைக் கேட்டதும் பேச மறந்து அப்படியே நின்று போனாள்.
“இன்னும் என்ன இங்கே நின்னுட்டு இருக்க? இடத்தைக் காலி பண்ணு…” என்று எரிச்சலுடன் அதட்டினான் வெற்றி.
அவன் அதட்டலில் அல்லி அவனைப் புரியா பாவனையில் பார்க்க ஆரம்பித்தாள் .
அவளின் பார்வையைக் கண்டுகொள்ளாமல் வேகமாக வந்து அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்று வெளியே விட்டவன், அதை விட அதிவேகமாக வீட்டுக் கதவை அவளின் முகத்தில் அடிப்பது போல அடித்துச் சாற்றினான்.
ஆனால் அதைக் கூட உணராது அந்தப் பெண் சொல்லியதையே நினைத்துக் குழப்பத்துடன் நின்றிருந்தாள் அல்லிராணி.
தன்னைக் காதலித்துவிட்டு இனி நீ மட்டும் தான் எனக்கு என்று சொல்லிவிட்டு இப்போது மீண்டும் வேறு பெண்ணை வீட்டிற்குள் அழைத்து வந்திருக்கிறான் என்றால் தன் காதலுக்கு என்ன அர்த்தம்? என்று அவன் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க வேண்டும் என்று அவள் துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண் சொன்ன வார்த்தைகள் அல்லியை அலைக்களித்துக் கொண்டிருந்தது.
மீண்டும் அப்பெண் சொன்னதை மனதில் ஓட விட்டாள்.
“நீ நினைக்கிற மாதிரி வெற்றி சாதாரண ஆள் இல்லை. அவன்கிட்ட இருந்து தள்ளியே இரு!” என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தாள் அவள்.
இதற்கு என்ன அர்த்தம்? என்ன அர்த்தம்? என்று மீண்டும் மீண்டும் அல்லியின் மனதில் அலையடித்துக் கொண்டிருந்தது.
எதைச் சுட்டிக்காட்ட அவள் அப்படிச் சொல்லிச் சென்றாள்? முதலில் யாரென்றே தெரியாத அவள் பேச்சை எப்படி நம்புவது? என என்ன யோசிப்பது? என்ன நினைப்பது என்று கூடப் புரியாமல் குழம்பிப் போனாள்.
பேசாமல் வெற்றியிடமே கேட்டு விடலாமா? என்று நினைத்தவள் வேகமாகத் திரும்பினாள்.
அப்போது தான் அவளுக்குச் சுற்றுப்புறமே உறைத்தது.
வெற்றியின் வீட்டு வாசலில் நின்றிருப்பது கூட அவளுக்கு அப்போது தான் தெரிந்தது.
‘எப்போது வெளியே வந்தாள் என்று அவளுக்கு நினைவே இல்லையே’ என்று நினைத்து வீட்டுக் கதவை மலைத்துப் பார்த்தவள், அடுத்த நொடி படபடவென்று கதவைத் தட்டினாள்.
“இன்னும் நீ இங்கிருந்து போகலையா? இப்போ நீ இடத்தைக் காலி பண்ணலைனா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…” என்று ஆத்திரமாகக் கத்தினான் வெற்றி.
அவனின் கோபத்தில் கதவைத் தட்டிக் கொண்டிருந்தவளின் கைகள் அப்படியே நின்றன.
“ஒருத்தியைக் கூட்டிட்டு வந்து கூத்தடிக்க நினைச்சதுக்குப் கோபப்பட வேண்டியது நான். இவன் என்னமோ உத்தம யோக்கியன் போலக் கத்துறான்…” என்று இவளும் பதிலுக்குக் கத்தினாள்.
“ஆமாடி, நான் அப்படித்தான் கூத்தடிப்பேன். உனக்குப் பிடிக்காதுங்கிறதுக்காக என்னை நான் மாத்திக்க முடியாது…” என்று வெற்றியில் குரல் சூடாக வந்தது.
மேலும் படிக்க ப்ரீமியம் பிளான் வாங்கவும்.
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
இருவேறு பிரிவுகளாக நடக்கும் கதை களம்!
குடிசை பகுதியில் வசிக்கும் வெற்றியை காதலிக்கும் அல்லிராணி!
அவனோ அவளைப் புறக்கணிக்க, அவளின் காதலால் அவனின் மனம் கவர்கிறாள்.
அதே நேரத்தில் வெற்றி சில மர்ம செயல்களில் ஈடுபட, அதனால் வெற்றிக்கும் அல்லிக்கும் இடையே நிலவும் ஊடல்!
இன்னொரு பக்கம் செழியனை ஒரு தலையாக காதலிக்கும் கிருதிலயா. ஆனால், அவளின் காதலை ஏற்க மறுக்கும் செழியன். அதனால் அவள் எடுக்கும் விபரீத முடிவு!
இந்த இருவேறு கதையும் இணையும் புள்ளி ஏற்படுத்தும் திருப்புமுனை உங்கள் மனதை கொய்ததா என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளவும்.
கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை ரேட்டிங், ரிவ்யூ மூலம் தளத்தில் தெரிவியுங்கள்.
Related products
-
என்னிதய தாள லயமாய் நீ
Rated 5.00 out of 5


Reviews
There are no reviews yet.