நெஞ்சம் வீழ்ந்தது உன்னில் – முன்னோட்டம்
அவள் மட்டும் இருக்கவும், மேலும் நடக்காமல் தயங்கி நின்றான்.
பின்பு அவர் இருக்கும் போது வருவோம் என்று நினைத்து திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
அவன் நடக்கவும் “என்ன தர்மா சார்… கடை வரை வந்துட்டு ஒன்னும் வாங்காம போறீங்க?” என்ற சத்யவேணியின் கேள்வி அவனை மேலும் நடக்க விடாமல் தடுத்து நிறுத்தியது.
ஆச்சரியமாகத் திரும்பி அவளைப் பார்த்து “உங்களுக்கு எப்படி… வந்தது நான் தான்னு…?” என்று மேலும் கேட்க முடியாமல் வார்த்தையைத் தடுமாறி நிறுத்தினான்.
“நீங்கதான் வந்ததுனு எப்படி நான் கண்டுபிடிச்சேன்னு கேட்க வர்றீங்களா?” என்று கேட்டவளுக்கு ‘ஆமாம்’ என்று சொல்ல முடியாமல் தடுமாறினான்.
“என் கண்களுக்குத்தான் உணர்வுகள் இல்லை. என் காதிற்கும், மூக்கிற்கும் அதிகப்படியான உணர்வுகள் இருக்கின்றன…” என்று நிமிர்வுடனே சொன்னாள்.
அவளின் அந்த நிமிர்வை வியப்பாகப் பார்த்தான் தர்மா.
“உங்க ஸ்டிக்கின் சத்தமும், நீங்க போட்டிருக்கும் டியோடரன்டின் வாசனையும், நீங்க தலையில் தடவியிருக்கும் ஆண்களுக்கான ஜெல்லின் மணமும்… மூன்றும் சேர்ந்து வந்திருப்பது நீங்கதான்னு எனக்குக் காட்டிக் கொடுத்து விட்டது…” என்றாள்.
“ஓ…! ஆச்சரியமா இருக்குங்க. நான் இன்னைக்குத் தான் உங்க கடைக்கு ஃபர்ஸ்ட் டைம் வந்தேன். அதுவும் கொஞ்ச நேரத்தில் இவ்வளவு அப்சர்வ் பண்ணி இருக்கீங்கலே…” என்று வியப்புடன் சொன்னான்.
“இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைங்க. ஒரு உணர்வை எடுத்துக்கொண்ட கடவுள் மற்ற உறுப்புகளுக்கு அதிகம் கவனிக்கும் சக்தியை கொடுத்து விடுகிறார். அவ்வளவுதான்…” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு “நீங்க சொல்லுங்க… கடைக்கு வந்துட்டு ஒன்னும் வாங்காமல் போனீங்க. ஏன்…?” என்று கேட்டாள்.
அவளின் பார்வையில்லா கண்களுக்குக் கண்ணாடி அணிந்திருந்தாலும், களையாக இருந்த அந்த முகத்தில் வந்து போன உணர்வுகள் அவளிடம் ஒரு குறையும் இல்லை என்று சொல்வது போலவே இருந்தது.
தன் குறையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக அவள் நிமிர்வுடன் பேசியது தர்மாவிற்கு ஆச்சரியத்தைக் கூட்டிக்கொண்டே போனது.
இருக்கையில் அமர்ந்து இருந்தாலும் எதிரே அவன் எந்தத் தூரத்தில் நிற்கிறான். அவனின் தலையின் உயரம் எந்த அளவு உள்ளது என்று உணர்ந்து அவனின் முகத்திற்கு நேராகத் தன் முகத்தைக் காட்டி பேசினாள்.
அதுவும் அவள் அப்படி முகத்தைக் காட்டிய விதம்? ‘நீ யாராக இருந்தாலும், எந்த விஷயமாக இருந்தாலும் என் முகத்தைப் பார்த்தே பேசு!’ என்று சொல்லாமல் சொல்லியன அவளின் முகத்தில் தெரிந்த ஒரு கம்பீரம்!
ஓவியத்தை ரசிக்கும் ரசிகன் போல் அவளின் அந்தக் கம்பீரத்தை ரசித்துக்கொண்டே அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தான்.
“நான் கடையில் பொருள் வாங்க வரலைங்க. உங்க அப்பாகிட்ட ஒரு உதவி கேட்கலாம்னு வந்தேன். அவர் கடையில் இல்லைனு தெரியவும், சரி… அவர் இருக்கும்போது வரலாம்னு கிளம்பினேன்…” என்றான்.
“ஓ…! அப்பா வீட்டுக்கு சாப்பிட போயிருக்கார். என்ன உதவின்னு சொல்லுங்க. நான் அப்பா வந்ததும் சொல்லி வைக்கிறேன்…”
“முதலில் ஒரு ஸாரி சொல்லிக்கிறேங்க. நான் உங்களுக்கு அறிமுகம் இல்லாதவன். பார்த்த ஒரே நாளில் இரண்டாவது உதவி கேட்டு வந்து விட்டேன். நான் கேட்பது உங்களுக்குத் தொந்தரவாக இருந்தால் என்னை மன்னிக்கணும்…” என்று தயவாகவே பேச்சை ஆரம்பித்தான்.
“என்னங்க இது…? நோட்டீசை ஒரு ஓரமா வச்சுட்டு போறதுக்குச் சரின்னு சொன்னதெல்லாம் ஒரு உதவியா? இதுக்கெல்லாம் மன்னிப்புன்னு பெரிய வார்த்தை பேச வேண்டாம் சார். அடுத்து நீங்க கேட்கப்போவதும் ஒன்னும் பெரிய உதவியா இருக்காதுன்னு தான் எனக்குத் தோணுது. என்னன்னு சொல்லுங்க… அப்பாவால் முடியுற விஷயமாக இருந்தால் கண்டிப்பா செய்து கொடுப்பார்…” என்றாள்.
“உங்க பெருந்தன்மைக்கு நன்றிங்க. என்னோட டிரைவிங் ஸ்கூலுக்கு ஒரு லேடி டிரைவர் வேலைக்குத் தேவைப்படுது. நான் என் ஆஃபீஸுக்கு வெளியே அதுக்குப் போர்டு வச்சிருக்கேன். ஆனாலும் நானும் ஒரு நாலு பேரு கிட்ட சொல்லி வச்சா வேலைக்கு ஆள் சீக்கிரம் கிடைப்பாங்கன்னு தோன்றியது. அதுவும் நான் இந்த ஊருக்குப் புதுசு. யார்கிட்ட எப்படிச் சொல்லி வைக்கிறதுன்னு தெரியலை. அதான் இங்க ஒரு நாலு கடையில சொல்லி வைக்கலாமுன்னு வந்தேன்…” என்றான்.
“ஓ…! அப்படீங்களா…?” என்றவள் ஏதோ யோசித்து விட்டு, “நீங்க நாலு கடையில் சொல்லி வைக்கிறதை விடக் கம்ப்யூட்டர்ல உங்க தேவையை டைப் செய்து, உங்க போன் நம்பர் கொடுத்துப் பிரிண்ட் பண்ணி கடையில் நோட்டீஸ் கொடுத்து வைத்தது போல, சில கடைகளின் வெளியே ஒட்டி விட்டீங்கனா… ரோட்டில் நடந்து போறவங்க கூடப் பார்த்துட்டு உங்களைத் தொடர்பு கொள்ளலாம்…” என்றாள்.
அவள் சொன்ன யோசனையில மகிழ்ந்தவன், “நல்ல ஐடியாங்க… அப்படியே செய்கிறேன்…” என்றவன், “உங்க யோசனைக்கு நன்றிங்க. அப்படியே உங்க கடையின் முன் நோட்டீஸ் ஓட்ட அனுமதி கிடைக்குமா?” என்று கேட்டான்.
“ஒட்டிக்கோங்க…” என்று அனுமதி தந்தவள் சினேகமாகச் சிறு புன்னகை சிந்தினாள்.
இதழ்கள் பிரியாமல் அவள் சிந்திய மென்புன்னகை அவளின் முகத்திற்குக் கூடுதல் அழகு சேர்த்தது.
அவளின் அந்தப் புன்னகையை இமைக்க மறந்து ஒரு நொடி பார்த்து அப்படியே நின்றுவிட்டான் தர்மேந்திரன்.
ஆனாலும் தர்மாவை பற்றிப் பேசும் போதெல்லாம் மலர்ந்து போன சத்யாவின் முகமும், அவனின் பெயரை உச்சரிக்கும் போது அவளின் குரலில் தெரிந்த இனிமையையும் உணர்ந்து இருக்கின்றாள்.
அதுவே சொன்னது அக்காவின் மனம் தர்மாவின் புறம் சாய்கின்றது என்று.
அதோடு தர்மாவும் பார்த்த வரையில் நல்லவனாகத் தெரியவும், இருவரும் வாழ்க்கையில் இணைந்தால் சந்தோசம் தான் என்று நினைத்திருக்கின்றாள்.
ஆனால் இப்போது தெரிய வந்த உண்மையில் உள்ளுக்குள் உடைந்து போனாள். தனக்கே இப்படி இருக்கின்றது என்றால் சத்யா நிச்சயம் இந்த உண்மையைத் தாங்க மாட்டாள் என்று தெரிந்தவளுக்குப் பெற்றோரின் மீதும், தர்மாவின் மீதும் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.
அக்கா அவ்வளவு சொன்ன பிறகும் இந்த அம்மா என்ன செய்து வைத்திருக்கிறார்? என்று நினைத்தவள் தர்மாவை விட்டுவிட்டு வசந்தாவை முறைக்க ஆரம்பித்தாள்.
அவள் தன்னையும், வசந்தாவையும் முறைப்பதை யோசனையுடன பார்த்தான் தர்மா.
‘இந்தச் சின்ன வாண்டு என்ன இந்த முறை முறைக்கிது? என் பொண்டாட்டியை விட இந்த வாண்டை சமாளிக்கிறது கஷ்டம் போலயே?’ என்று நினைத்துக் கொண்டான்.
அவளின் முறைப்பை பார்த்து வசந்தா “என்னடி…?” என்று ஆரம்பிக்க, அதற்குள் வெளியே வந்த செவிலி “சத்யவேணிக்கு ஆப்ரேஷனுக்கு எல்லாம் தயார். இதில் அந்தப் பொண்ணோட பேரன்ட்ஸ் சைன் பண்ணுங்க…” என்றபடி அங்கே வந்தார்.
அவரிடம் தியாகராஜன் கையெழுத்து போட்டுக் கொடுக்க, “எங்க பொண்ணைப் பார்க்கணும் நர்சம்மா…” எனக் கேட்டார் வசந்தா.
“ஆப்ரேஷனுக்குத் தயார் படுத்திட்டோம். இப்போ தியேட்டர் போக வெளியே கூப்பிட்டு வருவோம். அப்போ பாருங்க. ஆனா ரொம்ப நேரம் பேசக்கூடாது…” என்று தர்மாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே விறைப்பாகச் சொல்லிச் சென்றார்.
‘என்னடா தர்மா உனக்கு வந்த சோதனை? ஒரு பக்கம் உன் மச்சினிச்சி முறைக்குறா. ஒரு பக்கம் இந்த நர்சம்மா முறைக்கிது. இவங்களே இப்படினா, விஷயம் தெரிஞ்சதும் சத்யா என்ன செய்யக் காத்திருக்காள்னு தெரியலையே?’ என்று தன்னையே நொந்து கொண்டு புலம்பிக் கொண்டான் தர்மா.
சிறிது நேரத்தில் சத்யாவை சக்கர நாற்காலியில் அழைத்து வர அவள் குடும்பத்தினர் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.
“சத்யா என்னடி இப்படி விழுந்து வச்சுருக்க? கவனமா வந்திருக்கக் கூடாதா?” என்று வசந்தா கண்கலங்க, மகளின் தலையை வாஞ்சையுடன் கண் கலங்க தடவினார் தியாகராஜன்.
கார்த்திகா அழுது கொண்டே அக்காவின் அடி படாத கையை இறுக பற்றிக் கொண்டாள்.
தன்னைச் சுற்றிலும் உள்ள உறவுகள் தனக்காகக் கண்ணீர் சிந்தவும், சத்யாவிற்கும் அழுகை வந்தது.
ஆனால் தான் அழுதால் அவர்களின் கவலை இன்னும் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து அடக்கிக் கொண்டவள், “ஒன்னுமில்லைமா… நான் கவனமா தான் இருந்தேன். பாதையில் புதுசா ஒரு கல்லு இருக்கவும் என் கவனம் சிதறிடுச்சு…” என்று சாதாரணக் குரலிலேயே முயன்று சொன்னாள்.
தன்னைச் சுற்றி குடும்பத்தினர் இருந்தாலும் சத்யாவின் மனது தன் அருகில் இல்லாத தர்மாவை தேடியது.
அவனிடம் வீம்பாக யாரோ போல் பேசினாலும், அவனின் ஆறுதலை தேடும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினாள்.
தர்மா அவளின் வலது பக்கம் தான் நின்றிருந்தான். அவனுக்கும் அவளின் அருகில் சென்று கையைப் பிடித்துக் கொள்ள ஆவல் வந்தது.
ஆனால் அவர்கள் மூவரும் அவளைச் சுற்றி நிற்கும் போது அப்படி உரிமையாகப் போக முடியாமல் பின் தங்கினான். ஆனாலும் அவள் உள்ளே போகும் முன் அவளிடம் தன் இருப்பைக் காட்டி விட வேண்டும் என்று நினைத்தவன் சற்று நகர்ந்து முன்னால் சென்றான்.
அவனின் நடையின் சத்தத்தை வைத்து அவனை உணர்ந்து கொண்டவள் காதுகள் விடைத்துக் கொள்ள ஆவலுடன் அவன் நடை தொடர்ந்த பக்கம் முகத்தைத் திருப்பினாள்.
அக்காவின் ஆர்வத்தைக் கவனித்த கார்த்திகாவின் முகம் சுருங்கியது.
‘மனசுல ஆசையை வளர்த்துக்காதே அக்கா. உண்மை தெரிஞ்சா தாங்க மாட்ட’ என்று அவளிடம் சொல்லவேண்டும் போல இருந்தது.
இருக்கும் இடம் கட்டிப் போட அமைதியாக இருந்தாள். ஆனால் விரைவில் சொல்லிவிட வேண்டும் என்ற உறுதி மட்டும் மனதில் இருந்தது.
“பேசியது போதும்ங்க…” என்ற செவிலி சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு போக அறுவை சிகிச்சை அறை வாசலில் நின்றிருந்த தர்மா அவளை உள்ளே அழைத்துச் செல்லும் முன் நாற்காலியின் மேல் இருந்த சத்யாவின் கையைப் பிடித்துக் கொண்டான்.
அவனின் ஸ்பரிசம் பட்டதும் சத்யா தன்னையறியாமல் அவனின் கையை இறுக்கி பிடித்தாள். இப்போது அவனை விலக்கும் ஞாபகம் கூட அவளிடம் இல்லை. ஆப்ரேஷன் பற்றிய பயத்தின் வெளிப்பாடு அந்தக் கை இறுக்கத்தில் தெரிய அவளின் உள்ளங்கையை அழுத்திக் கொடுத்தவன் “ரிலாக்ஸ்டா சத்யாமா…” என்றான்.
அவனின் ஒற்றை வார்த்தை அவளின் பயத்தைக் குறைப்பது போல இருக்க “ம்ம்…” என்றாள்.
அவர்களைப் பின்னால் நின்றிருந்த அவளின் குடும்பமே பார்த்தது.
தர்மாவின் கண்ணில் தெரிந்த அன்பை பார்த்துத் ‘தங்கள் மகளின் வாழ்க்கை மலர்ந்து விடும்’ என்ற நிம்மதியில் பெற்றவர்கள் இருக்க, ‘என் அக்காவை இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றாயே’ என்பது போல முறைத்துக் கொண்டிருந்தாள் கார்த்திகா.
“டைம் ஆகுதுங்க…” எனச் செவிலி அவசரப்படுத்த மீண்டும் அவளின் கையை இறுக பிடித்து விட்டு விடுவித்தான்.
அந்தப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் மட்டுமே நடந்து கொண்டிருந்தார்கள். இருக்கை அந்த நடைபாதையில் இருந்து சிறிது தள்ளி இருந்ததால் அங்கே சென்று அமர வைத்தாள்.
அமர்ந்த அடுத்த நொடியில் சத்யாவின் உடல் விறைப்புற்றது. “கார்த்தி…” என்று பல்லை கடித்து அழைத்தவள் “என்ன காரியம் பண்ணிட்டு இருக்க? நட! வீட்டுக்கு போவோம்…” என்றாள் கடுமையாக.
அவளின் கோபத்தில் கார்த்திகா தயங்கி நிற்க, “நீ போய் நடந்துட்டு வா கார்த்திமா. என் பொண்டாட்டிகிட்ட நான் பேசிக்கிறேன்…” என்று அமைதியாகச் சொன்னான் ஏற்கனவே அந்த இருக்கையில் அமர்ந்திருந்த தர்மா.
‘சைட் கேப்பில் பொண்டாட்டினு சொல்லிட்டாரே, விவரம் தான்…!’ என்று கார்த்திகா வாயை பிளந்து பார்க்க, அவளைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவன், ‘கிளம்பு…’ என்பது போலச் சமிக்ஞை செய்தான்.
‘நீங்க நடத்துங்க மாமா’ என்பது போலச் சாடை செய்தவள் அவன் நடந்து விட்டு வர சொன்னதைச் சாக்காக வைத்துக் கொண்டு “நான் இதோ வந்துடுறேன்கா…” என்று அதற்கு மேல் நிற்காமல் நடையைக் கட்டினாள் கார்த்திகா.
“கார்த்தி உதை வாங்குவ… ஒழுங்கா என்னைக் கூட்டிட்டு போ…!” என்று சத்யா அதட்ட, இன்னும் வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள் கார்த்திகா.
இருக்கையில் அமராமல் எழுந்து நின்றவள் தங்கையுடன் வந்ததால் உதவிகோலை எடுத்துக் கொள்ளாமல் வந்த தன் மடத்தனத்தை நொந்துக் கொண்டாள்.
உதவிகோல் இல்லையென்றாலும் மீண்டும் அந்த இருக்கையில் அமர பிடிக்காமல் தானே நடந்து செல்ல கைகளைத் துழாவிய படி அடியெடுத்து வைத்த அடுத்த நிமிடம் துழாவிய அவளின் கையைப் பற்றிக் கொண்டான் தர்மா.
“ப்ச்ச்… விடுங்க…!” என்றாள் எரிச்சலாக.
“ஷ்ஷ்…! சத்யா அமைதியா இருடா. உன் கை பேலன்ஸில் தான் நானும் நிற்கிறேன். நீ கையைத் தட்டி விட்டா விழுந்துடுவேன்…”
அவன் விழுந்து விடுவான் என்றதும் சட்டென அமைதியானாள் சத்யா.
உண்மையில் அவனால் ஒற்றைக் காலில் சமாளித்திருக்க முடியும். அருகிலேயே இருக்கை இருந்ததால் அவள் கையைத் தட்டி விட்டாலும் இருக்கையைப் பிடித்துக் கொண்டு சமாளித்து விடுவான். அப்படி இருந்தும் விழுவேன் என்று சொன்னவனின் கண்ணில் குறும்பு மின்னியது.
அவள் தனக்காக நின்றதும், அந்தக் குறும்பு இதழோரத்திலும் ஒட்டி கொள்ள, “கொஞ்ச நேரம் மட்டும் உட்கார் சத்யா. ப்ளீஸ்… எனக்காக…” என்றான்.
அவனின் இறைஞ்சுதலான குரலை கேட்ட பிறகும் வீம்பு பிடிக்க மனதில்லாமல் மீண்டும் இருக்கையில் அமர்ந்து தன் கையை விடுவித்துக் கொண்டாள். அவள் அருகிலேயே தர்மாவும் அமர, இன்னும் தள்ளி அமர்ந்தாள்.
“வாழ்க்கை முழுவதும் என் அருகாமையைத் தவிர, வேற யாரின் அருகாமையையும் நீ ஏத்துக்க மாட்டனு உன் மனது உறுதிபடுத்திட்ட பிறகும், இந்த விலகல் தேவைதானா சத்யா?” என்று மென்மையாகக் கேட்டான்.
“உங்க கற்பனைக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது…” என்றாள் எரிச்சலுடன்.
“கற்பனையா? அப்படியா? அப்போ நம்ம இரண்டு பேருக்கு நடுவில் குறுக்கிட்ட புகழேந்தி, கற்பனை பாத்திரம் தானா?”
‘புகழ் சார் பற்றி இவனுக்கு எப்படித் தெரிந்தது?’ என்று ஒரு கணம் திடுக்கிட்டவள், கார்த்திகாவின் ஞாபகம் வர, ‘அவளை…’ என்று மனதிற்குள் பல்லை கடித்தவள்,
“நம்ம இரண்டு பேருக்குள்ளயே ஒன்னும் இல்லைங்கும் போது, புகழ் சார் எப்படி நம்ம நடுவில் வந்தவர் ஆவார்?” என்றாள்.
“நீ புகழ் சார்னு சொன்னதில் இருந்தே அவனுக்கான இடம் எதுன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு. ஆனா நம்ம இரண்டு பேருக்கும் நடுவில் எதுவுமே இல்லையா என்ன?” என்று தீவிரமாகக் கேட்டான்.
“நமக்குள் எதுவும் இல்லை…” என்றாள் வெடுக்கென்று.
“என் மேல் ஏன் சக்திமா இவ்வளவு கோபம்?” என்று அவளின் வெடுக்கென்ற பதிலில் வேதனையுடன் கேட்டான்..
“ஏன்? உங்களுக்குத் தெரியாதா?” குரலில் மிதமிஞ்சிய கோபம் தெரிந்தது.
அவளுக்கு இருந்த கோபத்தில் அப்போது அவன் பொண்டாட்டி என்றதும், இப்போது அவன் புதிதாக அழைத்த ‘சக்திமா’ என்றதும் கூட அவளின் மனதில் பதியவில்லையோ?
“நான் தான் உன்னைப் பொண்ணு கேட்ட மாப்பிள்ளைங்கிறதால் என் மேல கோபமா? இல்லை பொண்ணு கேட்டுட்டு உன்னிடம் அந்த உண்மையை மறைச்சுட்டேன்னு கோபமா? எதுக்கு என் மேல கோபம்னு சொல்லு சத்யா. உன் கோபத்தைக் குறைக்க அதில் எனக்கு வழியிருக்கானு பார்க்கிறேன்…” என்றான்.
அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, “அநேகமா இரண்டாவது காரணம் தான் உன் கோபத்துக்கான காரணமா இருக்கும்னு நினைக்கிறேன். ஆனாலும் முதலில் இருந்து சொன்னா தான் உனக்கே என்னைப் பற்றித் தெரியும். அதனால் ஆரம்பத்தில் இருந்து முழுசா சொல்லிடுறேன்…” என்றான்.
“ஒன்னும் தேவையில்லை…” என்றாள் மீண்டும் வெடுக்கென்று.
அவள் மீண்டும் வெடுக்கென்று பேச தர்மாவின் மனது வலித்தது.
அந்த வேதனையில் தான் அவளுக்கு விளக்கம் சொல்ல வந்ததை விட்டுவிட்டு “உன்னை ஏன் நான் முன்னாடியே பார்க்கலைனு வேதனை படுறேன்டா சக்திமா. ஏன் உனக்குப் பிடித்த மாதிரி நான் இல்லாம போனேன்னு தவிப்பா இருக்கு. என் வாழ்க்கையில் வந்த முதல் பொண்ணா ஏன் நீ இல்லாம போனன்னு எனக்கு வருத்தமா இருக்குடா.
“ஆனா நடந்த எதையுமே மாத்த முடியாது. அப்படி இருக்கும் போது முடிஞ்சு போன வாழ்க்கையை மறந்துட்டு புதுசா வாழ ஆசைப்பட்ட என் ஆசை அதிகப்படி தான். உன் மேல எனக்கு விருப்பம் வந்திருக்கவே கூடாது. அதனால் தான் இப்போ உன்னையும் வருந்த வச்சுக்கிட்டு இருக்கேன்.
“தப்பு தான் சத்யா… நான் செய்தது பெரிய தப்பு தான். உன்னைக் கடையில் பார்த்த அன்னைக்கே நான் தான் மாப்பிள்ளைனு உண்மையைச் சொல்லியிருக்கணும். சொல்லாமல் விட்டது என் தப்பு தான்….” என்றவன் குரல் கரகரத்தது.
“இப்போ எதுக்கு இப்படிப் பேசிக்கிட்டு இருக்கீங்க? எனக்குப் பிடிக்கலை…” என்றாள் கோபமாக.
வந்ததில் இருந்து சிடுசிடுவென அவள் பேச, அவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியாமல் முழி பிதுங்கி போனான் தர்மா.
அடுத்து என்ன பேச என்று தெரியாமல் மலைத்து அப்படியே அமர்ந்து விட்டான்.
சிறிது நேரம் இருவருக்கும் இடையே மௌனமே ஆட்சி செய்ய, அந்த மௌனத்தைக் கலைப்பது போல் சத்யாவின் வாய் ஏதோ முணுமுணுத்தது.
அதைக் கவனித்தவன் ‘என்ன பேசுகின்றாள்?’ என்று புரியாமல் முகத்தை அவள் புறம் மெள்ள சாய்த்து கேட்டான்.
“கை ஒடிஞ்சு ஆப்ரேஷனுக்குப் போறதுக்கு முன்னாடி கவலைப்படாதேன்னு ஆறுதல் சொல்லுவானாம். ஆப்ரேஷன் முடிஞ்சு வந்ததுக்கு அப்புறம் எப்படி இருக்கேன்னு கூடக் கேட்க மாட்டானாம். நானா பேசியதும் பேசுவானாம்.
இவன் தான் மாப்பிள்ளைனு தெரிஞ்சு அந்த ஷாக்ல இருந்தவளை தேடி வந்தவன்கிட்ட என்ன பேசனு தெரியாமல் அவாய்ட் பண்ணினா அப்புறம் கோபம் குறைஞ்சுதானு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணாம நான் ஸ்கூல் விட்டு வரும் போது பேச கூட முயற்சி எடுக்காம வேடிக்கை பார்த்துட்டு இருப்பானாம்.
இப்போ புகழ் சார் பத்தி தெரிஞ்சதும் அய்யா பதறி அடிச்சுட்டு வந்து நடந்ததுக்கு எல்லாம் விளக்கம் சொல்லுவாராம். அதையும் நான் பொறுமையா கேட்கணுமாம். சரிதான் போயா… நீ சொல்றது எதையும் கேட்க மாட்டேன். வந்துட்டான் பெருசா விம் பார் போட்டு விளக்க… இதில் பெரிய உரிமையுள்ளவன் போலப் பொண்டாட்டி, சக்திமானு கொஞ்சல் ஒன்னு தான் குறைச்சல்…” என்று கடுகடுகென்று மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள்.
அவனுக்குக் கேட்க வேண்டும் என்றே முணுமுணுத்தது போலிருந்தது அவளின் செய்கை.
அவள் பேசியதை கேட்டவன், “உஃப்…” என்று வாயை ஊதி அடைத்து வைத்திருந்ததெல்லாம் வெளியே விட்டது போல நிம்மதி மூச்சு விட்டான்.