என்னுள் யாவும் நீயாக!
என்னுள் யாவும் நீயாக! — Preview
காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு அந்தக் காத்திருப்பு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
எப்போதும் மருத்துவமனைக்கு வந்தால் ஒரு வித பதட்டம் ஆட்கொண்டிருக்கும்.
டாக்டர் என்ன சொல்வாரோ? என்னாகுமோ? என்று யோசித்துக் கொண்டே தான் இருக்க வேண்டியது இருக்கும்.
ஆனால் இன்றோ அனைத்து பரிசோதனைகளும் செய்யப் போகின்றோம் என்று தெரிந்தும், எந்தப் பதட்டமும் இல்லாமல் வெகு நிதானமாக அமர்ந்திருந்தாள்.
அந்த நிமிடம் பிரசன்னா உடன் இருந்து பார்த்துக் கொள்வான் என்ற திடன் அவள் அறியாமலேயே அவளின் மனதில் குடிபுகுந்தது. ஆனால் அதை அவளே உணரவில்லை. ‘தெரிந்த டாக்டர் இங்கே இருக்கிறார் என்பதால் நிதானமாக இருக்கிறேன் போல’ என்று நினைத்துக் கொண்டாள்.
பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு செவிலி அவளை உள்ளே போகச் சொல்ல, எழுந்து உள்ளே சென்றாள்.
அவளைப் பார்த்ததும் மலர்ந்த முகத்துடன் “வா தாரா… உட்கார்…” என்று ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாக வரவேற்றான்.
வசுந்தராவும் அவனுக்கு ஒரு புன்னகையைக் கொடுத்து விட்டு வந்து அமர, அவளின் பின்னால் பார்த்தவன், “உன் கூட யாரும் வரலையா தாரா?” புருவத்தைச் சுருக்கி யோசனையாகக் கேட்டான்.
“யார் வரணும்?” அவள் புரியாமல் கேட்க,
“அத்தை தான். உன் கூடத் துணைக்கு அத்தை வருவாங்கனு நினைச்சேன். தனியா வந்திருக்க?”
“அவங்க ஊரில் இல்லையே. அதான் தனியா வந்தேன்…”
“ஓ! அப்போ நீ இங்கே டெஸ்ட் பண்ணப் போறது அவங்களுக்குத் தெரியாதா?” வீட்டில் சொல்லாமல் வந்திருப்பாளோ என்று நினைத்துக் கேட்டான்.
“இல்ல, தெரியும். நேத்து நீங்க ரிப்போர்ட் கொடுத்ததைச் சொன்னதுமே அப்போ உனக்கும் டெஸ்ட் பண்ணிக் காட்டிருவோம்னு அவங்களே தான் சொன்னாங்க…”
“அப்ப ஏன் கூட வரலை?”
“இரண்டு பேருமே பாண்டிச்சேரிக்கு அக்கா வீட்டுக்குப் பத்திரிகை வைக்கப் போயிருக்காங்க. நைட் தான் வருவாங்க. அம்மா கூட நான் வந்த பிறகு நாளைக்குப் போகலாம்னு தான் சொன்னாங்க. ஆனா நான் தான் உங்க மாப்பிள்ளை பார்த்துப்பாங்க. நான் மட்டும் போயிட்டு வர்றேன்னு சொல்லி, இன்னைக்கே வந்தேன்…”என்று அவள் சொல்லவும் அவனின் முகம் மலர்ந்து போனது.
அவள் சாதாரணமாகத் தான் அதைச் சொன்னாள். ஆனால் அதை அவள் தனக்குக் கொடுத்த முக்கியத்துவமாகப் பிரசன்னா நினைத்துக் கொண்டான்.
கல்பனா ‘தனியாக எப்படிப் போவாய்?’ என்று கவலை கொள்ள, அவரைச் சமாளிக்கவே ‘உங்க மாப்பிள்ளை பார்த்துக் கொள்வார்’ என்று சொல்லி வைத்தாள்.
பெண்ணின் மனம் மாப்பிள்ளையின் பக்கம் சாய இதுவும் ஒரு நல்ல சந்தர்ப்பம் தான் என்று நினைத்துக் கல்பனாவும் அவள் தனியாகப் போகச் சரி என்றார்.
“ஓகே தாரா… இப்ப ஒரு சிஸ்டர் வருவாங்க. அவங்க கூடப் போய் டெஸ்ட் முடிச்சுட்டு வந்துடு. அவங்களே உன் கூட இருந்து பார்த்துப்பாங்க. எல்லா விவரமும் நான் அவங்க கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். அவங்க வருவதில் உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை தானே?”
“இல்லை, எனக்கு ஒன்னும் இல்ல. வரச் சொல்லுங்க…” என்று சொல்ல, செவிலியை அழைத்து அவருடன் அவளை அனுப்பி வைத்தான்.
அவனுக்கு அடுத்து நோயாளிகள் காத்துக் கொண்டிருந்ததால், அவர்களைப் பார்க்க ஆரம்பித்தான்.
ஒருமணி நேரம் கடந்த நிலையில் ஒரு நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவனின் மேஜையில் இருந்த தொலைபேசி அழைத்தது.
அதை எடுத்தவன் அந்தப்பக்கம் வசுந்தராவுடன் சென்ற செவிலி சொன்னச் செய்தியைக் கேட்டு “வாட்! என்ன சொல்றீங்க சிஸ்டர்?”என்று அதிர்ந்தான் பிரசன்னா.
****
பிரசன்னா எப்போதும் இப்படி யாரையும் வேலை வாங்கும் பழக்கம் உடையவன் அல்ல.
அவன் வேலையை அவன் தான் பார்த்துக் கொள்வான். காலையில் கூட அவனுக்குத் தேவையான துணிகளை அவனே தான் எடுத்து வைத்துக் கொண்டான்.
இப்போதும் அதனை அவனே செய்திருக்க முடியும். ஆனால் மனைவி அவ்வப்போது அவளின் குற்றவுணர்ச்சிக்குள் சிக்கிக் கொள்வதை உணர்ந்து கொண்டவன் அவளை அதில் இருந்து மீட்கும் முயற்சியில் ஒன்றாக அவனுக்கான வேலையில் அவளைப் பங்கு கொள்ள வைத்துக் கொண்டிருந்தான்.
ஆம்! அவளின் குற்றவுணர்வுவை அவன் உணர்ந்தே வைத்திருந்தான். அவளின் மனநிலையும் அவனுக்குப் புரிய தான் செய்தது.
மனைவியின் முன்னால் காதல் விஷயம் தெரிந்து அவளைக் கடித்துக் குதறாமல் வேறு வகையைக் கையாண்டு கொண்டிருந்தான் பிரசன்னா.
பிரசன்னா குளித்து விட்டு வர, அடுத்ததாக வசுந்தராவும் குளித்து விட்டு வந்தாள். இருவரும் வழக்கம் போல் இடைவெளி விட்டு படுத்துக் கொண்டனர்.
வெளியே சுற்றி விட்டு வந்தாலும் இருவருக்குமே உறக்கம் என்பது சிறிதும் அண்டவில்லை. வசுந்தரா ஏதோ ஒரு யோசனையில் இருக்க, பிரசன்னாவும் யோசனையில் தான் இருந்தான்.
யோசனையின் முடிவில் மெல்ல மனைவியின் புறம் திரும்பிப் பார்த்தான்.
அவளோ கண்களை மூடியிருந்தாலும் கண்ணின் மணிகள் உருண்டோட உறக்கம் தொலைத்து நின்றதைக் கண்டவன், தான் செய்யப் போவதை நினைத்து மீண்டும் கள்வனாக மாறி சிரித்துக் கொண்டான்.
உதட்டை மீறி வரத் துடித்த அவனின் புன்னகையும், கண்களில் கணக்கில்லாமல் வழிந்த குறும்பும் அவனை அந்த நேரம் மேலும் பேரழகனாகக் காட்டிக் கொண்டிருந்தது.
வசுந்தரா ஒரு கையைத் தன் வயிற்றின் மீதும் இன்னொரு கையைத் தலை அருகிலும் வைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.
தலை அருகில் இருந்த அவளின் கையைப் பார்த்தவன் மெல்ல தன் கையை நீட்டி அவளின் கையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தான்.
அவனின் இந்தத் திடீர் செய்கையை எதிர்பாராமல் யோசனையில் இருந்த வசுந்தரா திடுக்கிட்டு விழித்தாள்.
அவளின் கையைக் கணவன் பற்றி இருப்பதைக் கண்டவள் அதிர்ச்சியுடன் எழுந்து அமரவும் செய்தாள்.
“ஏய்… ஹேய்.. வசு மெதுவா… எதுக்கு இவ்வளவு பதட்டம்? நான் தானே உன் கையைப் பிடிச்சுருக்கேன்…” என்றவன் கண்கள் அவளைத் தீர்க்கமாகத் துளையிட்டது.
‘மனைவியாகவே நடந்து கொள்ளத் தயார்’ என்று முன்பு சொல்லிவிட்டு இப்போது கை பிடித்ததற்கே பயந்தால் அவன் அப்படிப் பார்க்காமல் என்ன செய்வான்?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவள் தன் பதட்டத்தை அவனிடம் இருந்து மறைக்க முயன்றாள்.
அவள் முயன்றாலும் அவளின் நடுக்கம் கையில் தெரியத்தான் செய்தது.
ஆனால் அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இன்னும் அழுத்தமாக அவளின் கையைப் பற்றி இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் எழுந்து அமர்ந்திருந்தவள் மீண்டும் படுக்கையில் விழுந்தாள்.
“என்ன… என்ன பண்றீங்க?” அவளின் கையை இழுத்துச் சென்றவன் அவனின் தலையின் மீது வைக்கத் திணறலுடன் கேட்டாள்.
“தலையைக் கோதிக் கொடு…” என்றான் செய்தே ஆக வேண்டும் என்ற உறுதியான குரலில்.
“இ… இல்ல…” என்று அவள் திக்க,
“இப்போ நீ கோதிக் கொடுக்கலைனா உன் மடியில் படுத்துக் கோதிக் கொடுக்கச் சொல்லுவேன். எனக்கும் உன் மடியில் படுக்கத்தான் ஆசை. ஆனா முதல்முறையே உன்னைப் பயமுறுத்த வேண்டாம்னு பார்க்கிறேன்…” என்றவன் குரலில் மிரட்டல் தொனித்ததோ?
“ஏன் இப்படி மிரட்டுறீங்க?” என்று தயங்கியபடியே என்றாலும் கேட்டுவிட்டாள்.
“என்ன மிரட்டுறேனா? நான் ஆசையா கேட்டது உனக்கு மிரட்டுவது போலத் தெரிஞ்சா நீ ஒன்னும் செய்ய வேண்டாம். போ…” என்றவன் தன் தலையில் வைத்திருந்த அவளின் கையை எடுத்துப் படுக்கையில் போட்டுவிட்டு அவளுக்கு முதுகைக் காட்டி திரும்பிப் படுத்துக் கொண்டான்.
அவனின் கோபத்தில் மாலையிலிருந்து பரவியிருந்த ஓர் இதம் அவளை விட்டுச் சென்றது போல இருந்தது.
‘அவன் பெரிதாக என்ன கேட்டான்? தலையைத் தானே கோதிக் கொடுக்கச் சொன்னான். அது கூட உன்னால் முடியாதா?’ என்று உள்ளுக்குள் இருந்து ஒலித்த குரல் உந்தித் தள்ள, படுக்கையில் இருந்த தன் கையையும், அவனின் தலையையும், கோபத்தில் இறுகி இருந்த அவனின் வலுவான தோள்களையும் பார்த்தாள்.
பின் தயக்கத்துடன் தன் கையை உயர்த்தி அவனின் தலையில் வைத்தாள். அவளின் கை லேசாக நடுங்கியது.
கட்டிய கணவன் தான்! ஆனாலும் முதல் முறை உண்டான தயக்கம் இருக்க மெதுவாகவே அவனின் தலையைக் கோதிக் கொடுக்க ஆரம்பித்தாள்.
அவளின் வருடலை உணர்ந்து அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுத்திருந்த பிரசன்னாவின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.
அவன் சிரித்ததில் அவனின் தோள்கள் இறுக்கத்தைத் தொலைத்து இலகுவாக, அதைக் கண்ட வசுந்தராவின் முகத்திலும் நிம்மதி பரவியது.
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
காதலில் தோல்வியுற்ற நாயகி தன் முன்னாள் காதலை தன் கணவனிடம் சொல்ல, அதனால் இருவருக்கும் இடையே நிலவும் பூசல்கள்.
புது தம்பதியான நாயகனும்,நாயகியும் இணையாமல் பிரிந்து நிற்க, தன் மனைவியின் முன்னாள் காதலை புறம் தள்ளி அவளை விரும்பினானா நாயகன்? கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தப் பக்கத்தில் உள்ள கதை / புத்தகம் ©Ezhilanbu அவர்களின் முழு காப்புரிமைக்கு உட்பட்டது.
❌ அனுமதி இல்லாமல் நகலெடுக்க, Screenshot எடுக்க, PDF / Audio / Video வடிவில் பகிர கடுமையாகத் தடை செய்யப்படுகிறது.
⚖️ மீறல் கண்டறியப்பட்டால், Copyright Act படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Related products
-
வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!
Rated 5.00 out of 5 -
ஜீவசுரபி
Rated 5.00 out of 5


gomathi parthiban –
Nice story. The way of story moving is very nice. Prasanna character is amazing. Thank you so much for a good story